கட்டட்டும் கட்டிக்கிறேன்.
“ வேண்டாம்மா”
“ஏன்டி, அந்தக் கிராமத்திலேயே அந்தப் பையன்தான் நெறையப் படிச்சிருக்காம்”
“ படிப்பைப் பத்திக் கவலையில்லை”
” படிச்சிருந்தாலும் அரசாங்க வேலையை எதிர்பாக்காம சொந்த நெலத்துல விவசாயம் பண்ணி வெளைச்சல் பாக்கிற பையன்டி. ”
“ வேலையைப் பத்தியோ விவசாயத்தைப் பத்தியோ எனக்குப் பிரச்சனையில்லை”
“ வேற என்ன? ஓன் நெறத்துக்கு கொஞ்சம் கம்மின்னு பாக்குறியா?”
“நெறத்தைப் பத்தியோ, அழகைப் பத்தியோ நா ஒன்னும் பெருசா நெனைக்கிறவ இல்லே”
“ பீடி சிகரெட் புகையிலை மதுன்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்னு விசாரிச்சதுல தெரியுது”
“ நானும் கேள்விப் பட்டேன்”
“ அவங்க அப்பா அம்மால்லாம் நல்ல குணமானவங்க.ஒன்னைய தங்கங்தங்கமா பாத்துக்குவாங்களாம் கொழுந்தன் நாத்துனா பிச்சுப்புடுங்கல் இல்லை”
“ மாமியார் நாத்தனார் கொடுமையைப் பத்தி நா கவலைப்படலே”
“ ரெண்டு எடத்துல ஒங்க அப்பாவும் மாமாவும் சாதகம் பாத்ததுல பத்துப் பொருத்தமும் நல்லா இருக்காம்டி”
“ இந்த சாதகம், சகுணத்தையெல்லாம் பத்திக் கவலைப் படுறவ இல்லே நா”
“ அடியே, அவ்வளவு நகை போடு, இவ்வளவு சீர் செய்யுங்கன்னு எதுவுமே கேக்காம பொண்ணை மட்டும் குடுத்தாப் போதுமுங்குறாங்கடி மாப்பிளை வீட்ல”
“ அப்படி எதுவும் கேட்டிருந்தா என்னைப் பொண்ணுப் பாக்க வந்தப்பவே வெளியே போங்கன்னு சொல்லிருப்பேன்“
“ அதுக்காக, ஒரே பொண்ணு ஒன்னை ஒன்னும் சும்மா அனுப்பப் போறதில்லே. நகை, பண்டம் பாத்திரம், கட்டில் மெத்தை, மிக்சி கிரைண்டர், டிவி, பிரிட்ஜ், மாப்பிள்ளைக்கு கழுத்துக்குச் செயினு, கைக்கு பிரேஸ்லெட், விரலுக்கு மோதிரம், பல்சார் பைக் அப்டி இப்டின்னு ஒரு பத்து லெட்சத்துக்கு சீர் செய்ய நானும் ஒங்கப்பாவும் திட்டம் போட்டு வச்சிருக்கோம்”
“ என்னதான் ஆசைகாட்டினாலும் எனக்கு சம்மதமில்லேம்மா”
” ஏன்டி, வேற யாரையும் மனசுக்குள்ளே விரும்புறியா?
” விரும்பியிருந்தா ஒங்கக்கிட்டச் சொல்றதுக்கு எனக்கு என்ன பயம்?”
“அப்பறம் எதுக்குடி இந்தக் கல்யாணத்தை வேணாங்குறே?“
” ஏம்மா, பத்துப் பொருத்தம் சரியா இருக்கு, பத்து லெட்சம் செலவு செஞ்சு கட்டிக் குடுக்குறேன்னு சொல்ற நீங்க, ஒரு பொண்ணு சங்கடமில்லாம வாழத் தேவையான ஒன்னு அந்த மாப்பிள்ளை வீட்டுல இருக்காங்குறதைக் கவனிச்சீங்களா?”
“ என்னடி இல்லை? கப்பல்மாதிரி வீடு . அந்தக் கிராமத்துலேயே அவுக வீடுதான் பெருசு”
“ வீடுதான் பெருசு. ஆனா கழிப்பறை- அதான் கக்கூஸ் அந்த வீட்ல இல்லையாம். என் தோழிய விட்டு விசாரிச்சேன் ”
“ப்பூ.. இந்த சின்ன விசயத்துக்கா இம்புட்டு பிடிவாதமா வேண்டாங்குறே? கிராமத்துல, வீட்டுக்குள்ளேயோ, வெளியிலேயோ கக்கூஸ் வச்சுக் கட்டமாட்டாங்க. அப்படியே காலாறக் குளத்துப் பக்கமோ, காட்டுப் பக்கமோ காத்தாட வெளியே போறதத்தான் விரும்புவாக “
“ அம்மா, அப்படி திறந்த வெளியில மலம் கழிக்கிறது எவ்வளவு சுகாதாரக் கேடு தெரியுமா? இயற்கையா ஏற்படுற உடல்கழிவை அப்பப்ப வெளியேத்தனும். அடக்குறதுதான் ஒடம்புல பல நோய் உருவாகக் காரணம். அவசர ஆத்திரமுன்னா பொண்ணுங்க கழிப்பிடம் தேடி வெளிய போறது எவ்வளவு ஆபத்துன்னு தினம் தினம் செய்தியில பாக்குறியல்ல. அதனால கழிப்பறையை முதல்ல கட்டச் சொல்லு அப்பறம் நா கட்டிக்கிறேன்”
.
( அப்போது வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த அப்பா)
“ நீ கேக்குறதுக்கு முன்னாலே மாப்பிளை தூய்மை பாரத் திட்டத்திலே கழிப்பறை கட்ட பஞ்சாயத்து ஆபீசுல மனு கொடுத்து, அவங்களும் வந்து எடத்தைப் பாத்துட்டு, பன்னெண்டாயிரம் ஊக்கநிதியில கழிப்பறை கட்ட ஏற்பாடு பண்ணிட்டாங்கலாம்.”
“பாத்தீங்களா நம்ப பொண்ணு நெனைச்சதையே மாப்பிளையும் நெனைச்சிருக்காரு.”
“ அதுதான்டி பதினோராவது பொருத்தம்”
” அப்பறம் என்னடி?“
“ கட்டட்டும் கட்டிக்கிறேன்”
------------------------------------------------------------------------------------------------------------------------
5 comments:
ஆகா
ஒவ்வொரு பெண்ணும் இப்படித்தான் இருக்கனும்
நன்றி அய்யா.
கழிப்பறையின் அவசியத்தை அருமையாக சொல்லி விட்டீர்கள் ஐயா...
நன்றி வலைச் சித்தரே.
கட்டட்டும். கட்டிக்கிறேன்.. நல்ல விழிப்புணர்வு. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அருமை.
Post a Comment