Sunday, June 11, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-29


கனக மணிகளினும் 
                மேலாய்க் கண்ணீர்த் துளிகள்

                     ஆடிப்பூரம் பொருட்காட்சிக் கலைமேடையில்  புதுக்கோட்டை கல்வித்துறை சார்பாக, பள்ளி மாணவர்களைக் கொண்டு  “ தலைக்கு ஒரு விலை”  என்ற  நாடகத்தினை அரங்கேற்றி, பாதி நாடகம் நடந்து கொண்டிருந்த வேளையில் “ நாடகத்தை நிறுத்து” என்ற குரல்  இரண்டாவது முறையாகக் கேட்டதும்  குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

                 அங்கே பொருட்காட்சி மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளரான உதவி மக்கள்தொடர்பு அலுவலர் ஆவேசத்துடன் மேடையினுள் நுழைந்தார்.


             “ஏன் சார் நாடகத்தை நிறுத்தணும்?” ன்னு கேட்டேன்


            “ சிறப்பு  நடன    நிகழ்ச்சி நடத்தும் அரசு நர்த்தகி சுவர்ணமுகி வந்துட்டாங்க. அவங்க நிகழ்ச்சி தொடங்கணும்” ன்னார்


“சார் இன்னும் ஐந்து நிமிடத்தில் நாடகம் முடிந்து விடும். முக்கியமான உச்சகட்ட காட்சி அடுத்துதான்” என்றேன்.


                  பரிசில் பெற வந்த ஆவூர்    புலவர் பெருந்தலைச் சாத்தனார்  காட்டில் இருக்கும் குமணனைச் சந்திக்கிறார். அவருக்கு பரிசளிக்க பொருளேதும் இல்லாத நிலையில், தனது தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக தன் தம்பி இளங்குமணன் அறிவித்திருப்பதால், தனது தலையை வெட்டிக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்னை பரிசாகப் பெற்றுக் கொள்ள தனது வாளை புலவரிடம் கொடுக்கிறார். 


                அடுத்த காட்சியில் இரத்தம் வழியும் ஒரு மூட்டையுடன் புலவர் இளங்குமணன் முன் நிற்கிறார். தனது அண்ணனைக் கொல்ல,  தானே காரணமாக இருந்ததை எண்ணிய இளங்குமணன் , மனம் திருந்தி கதறுகிறான்.


              அவனது மனமாற்றத்தைக் கண்ட புலவர், தான் கொண்டு வந்திருப்பது குமணனின் தலையல்ல வாழையின் அடிக்கிழங்கு எனக்காட்டி அண்ணன் தம்பியை சேர்த்து வைக்கிறார்.


இந்த இரு காட்சிகளும் நடந்தால்தான் நாடகக் கரு முற்றாக பார்வையாளர்களுக்கு விளங்கும்.


              ஆனால்  அந்த அலுவலர் எனது கோரிக்கையை  ஏற்காமல் 

“ ஒரு பள்ளி மாணவர் நாடகத்திற்காக அரசு நர்த்தகியைக் காக்க வைக்க முடியாது” எனப் பிடிவாதமாக நாடகத்தை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார்.

              எங்கள் விவாதத்தைக் கண்ணுற்று அங்கு வந்த கல்வித்துறை அலுவலரிடமும் ஒரு ஐந்து நிமிடம்  அனுமதி பெற்றுத் தாருங்கள் நாடகத்தை முடித்து விடுகிறேன் என்று மன்றாடினேன்.


              அவரின்  வேண்டுகோளையும் மறுத்து, முன் திரையை மூடச் செய்தார் அன்றைய உதவி மக்கள் தொடர்பு அலுவலர். கல்வி அலுவலரும் செய்வதறியாது மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.


             “ அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்” என்ற பழமொழியின் பொருளை  அப்போதுதான் உணர்ந்தேன்.


              வேறு வழியின்றி    ஒலி வாங்கியில் ”  மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்  நெருக்கடியால் நாடகம் இத்தோடு நிறுத்தப்படுகிறது” என அறிவித்துவிட்டு,  ஏக்கத்தோடு நின்ற மாணவ நடிகர்களை அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன்.  


             பக்கத்திலிருந்த ஒரு ஆசிரியர் வீட்டில் அவர்களது ஒப்பனையைக் கலைத்து, அவர்களின் ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லி, ஒரு தானியில் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்  அவரவர் இல்லங்களில் சேர்ப்பித்தேன்.


              அரசு நர்த்தகியின் நடன நிகழ்ச்சி முடிந்தபின்,  அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க என்னையும் நாடகத்தில் நடித்த மாணவர்களையும் ஒலி பெருக்கியில்  அழைத்திருக்கிறார்கள் . நாங்கள் அந்த அழைப்பிற்கு மதிப்பளிக்கவில்லை.

                மறுநாள் பள்ளிக்கு வந்த கல்வி அலுவலர் நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தப்பட்டு , மாணவர்களை அழைத்து பரிசுகளை வழங்கிச் சென்றார்.


    ஒரு  படைப்பு அரங்கேற்றத்தின் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கொச்சைப் படுத்தப் படும்போது அந்தப்  படைப்பாளன் படும் மன வேதனையை பட்டவரே உணர்வர். அதைவிட இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்துத் தங்கள் திறமைகளை மேடையில்  காட்டி, பாராட்டுப் பெற நினைத்திருந்த மாணவர்களின் மனநிலை, அவர்களின் பெற்றோரின் மனநிலையும்  எப்படி இருந்திருக்கும்?


 நீறு  பூத்த நெருப்பாக நெடுநாளாக என்னுள் கனன்று கொண்டிருந்த அந்த ஆதங்கம் ஆற்றுப்படும் நாள் ஒன்று வந்தது.


சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் இணைந்து புதுக்கோட்டையில் 21,22,23-01-2011 ஆகிய மூன்று நாள்கள் நடத்திய “இயல், இசை, நாடகத்திற்குத் தமிழின் கொடை” என்னும் கருத்தரங்கின் ஐந்து நெறியாளர்களில் ஒருவனாக நானும் செயலாற்றும் வாய்ப்பு வந்தது.

    அக்கருத்தரங்கின் நிறைவு நாளில் நாடகத்திற்குத் தமிழின் கொடை என்னும் பொருளுக்கான  சங்க இலக்கியம் தந்த நாடகம் ஒன்றினை நடத்தித்தர  திலகவதியார் திருவருள் ஆதீன ப் பொறுப்பாளர்  தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.


    நெடுநாளாய்  நிறைவேறாதிருந்த கனவினை நனவாக்க  முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடிப்பூரம் பொருட்காட்சியில் முழுமை பெறாது தடைப்பட்ட குமணன் வரலாற்றை இன்னும் சற்று விரிவுபடுத்தி “பழிதவிர்த்த பாவலர்” என்னும் பெயரில் ஒரு மணி நேர நாடகமாக அரங்கேற்றினேன். 

 மணிச்சுடர் கலைக்குழுவினரால் நடிக்கப்பெற்ற அந்நாடகம்  கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது.
















அந்நாடகத்திற்காகக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

             கருத்தரங்கிற்குத் தலைமை யேற்றிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன எண்பேராயக் குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உதிர்த்த ஆனந்தக் கண்ணீர்தான் .

          ஆம் நாடகத்தில் குமணன் நாடிழந்து காட்டுக்குள் படும் துயரம் முதல் பெருந்தலைச் சாத்தனாரால் மனம் திருந்திய இளங்குமணன் தன் அண்ணனைத் தேடி ஓடி அண்ணனைக்  கட்டித் தழுவி அவனிடம்   தன் தவறுக்கு  மண்ணிப்புக் கோரி  மணிமுடியை ஒப்படைக்கும் காட்சி வரையிலான  நாடகத்தை முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த   சிலம்பொலி செல்லப்பனார் நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து  அகம் மகிழப்  பாராட்டினார். 

            அப்போது பாராட்டுரைத்த கவிச்சுடர் கவிதைப் பித்தன் “அய்யா சிலம்பொலியார்  விழிகள் சிந்திய   ஆனந்தக்      கண்ணீரே”   இந்நாடகத்திற்கான சிறப்புப் பரிசென அறிவித்தார். 


அந்தத் தமிழ்ச் சான்றோரின் கண்ணீர்த் துளிகளே கனகமணிகளினும் மேலாய் இன்றும் என்னுள்ளத்தில்  .





                     அம்மேடை நாடகத்தின் உரையாடல்கள் திருச்சி வானொலி    நிலையத்தாரால் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டு,  திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது .

                  இது போன்ற இலக்கிய வரலாற்று நாடகங்களை உரிய பின்புலங்களோடு நடத்த வேண்டுமென என்னுள் அரும்பிய எண்ணங்களை ஈடேற்ற,  மணிமன்றத்தின் முப்பதாம் ஆண்டு விழா மேடையில் ,    குறுந்தொகையில்  பெண்கொலை புரிந்த நன்னன் என வரும் வரியினை மையப்புள்ளியாகக் கொண்டு  “ துணை தேடும் கணையாழி”  என்னும்  வரலாற்று நாடகத்தை ஆக்கி  பொது வெளி மேடையில்    அரங்கேற்ற முனைந்தேன்.  

அந்த நாடக அரங்கேற்றத்தில்   இதுவரை பட்டிராத  பட்டறிவு எங்களுக்கு.

              என்னவென அறிய ஆவலா? 
       -----பொறுத்திருங்கள்  அடுத்த தொடரில் வரும்.  

Wednesday, June 7, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் . தொடர்ச்சி-28

புகழ்ச்சியில்   பணிவும்,  
இகழ்ச்சியில்  துணிவும்

                 வரலாற்று நாடகப் பயணத்தில், பொதுவெளி மேடை நாடக அரங்கேற்ற அனுபவங்களுக்கு முன், பள்ளி மேடைகளில் அரங்கேறிய வரலாற்று நாடக அனுபவங்களில் ஒன்றிரண்டைப் பதிவிடலாமென நினைக்கிறேன்.


                 நான்  நகராட்சிப் பள்ளியில்   ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆண்டில் (1969) நாடெங்கும் காந்தியடிகள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.

                பள்ளிகளில் காந்தியடிகளின் வாழ்வியல் சிறப்புகளை, பாட்டு. நடனம், முதலான கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று அரசின் சுற்றறிக்கை.

               பலபள்ளிகளில்  காந்தியின் புகழ்பற்றிய பாடல்கள், நடனங்கள் தயாரிக்கப்பட்டன. நான் பணிபுரிந்த மாலையீடு நகராட்சிப் பள்ளி,  நகராட்சி ஆணையரின் நிருவாகத்தின் கீழ் இருந்தது.  பள்ளிச் செயல்முறைகளைப் பார்வையிட வந்த பள்ளித்துணை ஆய்வாளர்  திரு பரமசிவம் அவர்கள்   என்னை அழைத்து  “எல்லாப் பள்ளிகளிலும் பாட்டும் ஆட்டமுமா இருக்கு . நீங்க காந்தி பற்றி ஒரு சின்ன  நாடகத்தைத் தயாரிங்க” ன்னார்.

            அவர் அப்படி என்னைப் பணித்தமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நான் புதுக்கோட்டையில்  ஆதார ஆசிரியர் பயிற்சி படித்த காலத்து  அவர் எனக்கு ஆசிரியர் பயிற்றுநராக இருந்தவர்.   பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்து  விடுதி விழாவில்  நான் நடத்திய  “வழிகாட்டி” என்ற நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியவர்.

               இன்னொன்று  1964ல் இருந்து நான் மணி மன்றம் 
தொடங்கி,  பிச்சத்தான்பட்டியில்     பொது மேடையில் நடத்திய நாடகங்களை நகர வாசியாய் இருந்து  பார்த்தவர். 

             அந்த நம்பிக்கையில்தான்  என்னிடம்  நாடகப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது.

             அவர் பணித்ததைத் தட்ட முடியாமல்  “காந்தியின் அகிம்சை” என்ற பெயரில்    ஒரு  பத்து நிமிட நாடகத்தைத் தயாரித்திருந்தேன்.

             மாவட்ட விழாக்குழு அந்த நாடகத்தைத் , காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் நடத்தத் தேர்வு செய்து விட்டனர்.

             இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு திறந்த ட்ரக்கில்  அந்த நாடகக் குழு  நகரின் முக்கிய இடங்களில்   நாடகத்தை  நடித்துக் கொண்டே விழா மேடைக்குச் செல்ல வேண்டும். அதாவது நகரும் நாடகக்குழுவாக.

              மூன்றாம் வகுப்பில் ஒரு மாணவனை மொட்டை யடிக்கச் செய்து உடன்  நடிக்கும்     நான்கு மாணவர்களையும்  ட்ரக்கில் ஏற்றி அவர்களுடன் ஊர்வலத்தின் முன்னே எங்கள் பள்ளியின் நகரும் நாடகக்குழு நகர்ந்தது.  நான்கு இடங்களில் நடித்துக் காட்டி நிறைவாக திருவப்புரில் நடந்த நிறைவு விழாவில் அரங்கேற்றியது.

              அது முதலாக நான் பணிபுரிந்த 13 நகராட்சிப் பள்ளிகளிலும்  பள்ளி ஆண்டுவிழா என்றால் கலை நிகழ்ச்சிப் பொறுப்பு என் தலையிலேயே சுமத்தப்பட்டது.

             அப்படிப் பள்ளி ஆண்டுவிழாக்களில் நடத்திய வரலாற்று நாடகங்களில்   சிறப்பாகக்   குறிப்பிடத் தக்கவை     மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் சிறு துளியான “மலைநாட்டு மன்னன்”, 

          சிலப்பதிகாரத்தில் ”கண்ணகி” வழக்குரைத்த காதை, 

        பிரான்சு வீரமங்கை ஜோன் ஆப் ஆர்க்கின் “ நெருப்பில் வீழ்ந்த மலர்”  

 “ சாணக்கிய சபதம்”   “ தலைக்கு ஒரு விலை”

  ஜான்சி ராணி இலக்குமிபாய் வீரம் பற்றிய
“விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” முதலியன.

              பள்ளி மேடைகளில் வரலாற்று நாடகங்களை நடத்துவதில்  இரண்டு நெருக்கடிகளைச் சந்தித்தாக வேண்டும். ஒன்று பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் நாடகம் முடிய வேண்டும். ஏனென்றால் நடனம், பாடல், முதலான பல நிகழ்ச்சிகளுக்கு  பல வகுப்புப் பிள்ளைகளுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும்.

             இன்னொன்று குறைந்த பொருட்செலவில்தான் நாடகம் அமைய வேண்டும். 

           சிறிய அரங்கினுள் பெரிதாக எந்த காட்சி அமைப்பையும் செய்ய முடியாது. ஒன்று அல்லது இரண்டு திரைச் சீலைகள்தான்.  சிம்மாசனம், அரச உடைகள், கிரீடம் வாள் முதலிய அரங்கப் பொருள்களை   நாடகம் தயாரிப்பவரே  செய்து கொள்ள வேண்டும்.

               இந்த வரம்புக்குள் நடத்திய நாடகங்களிலும் வெற்றி பெற்றது  ஒரு வரலாற்று நாடகம்.  

              திருச்சி வானொலி நிலையத்தார்  புதுக்கோட்டை  வந்து  மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முதலான    சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில்  மக்கள் மன்றத்தில் நடந்த  “ விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது.  அதுவே மறுமுறை நகர் மன்றத்திலும் நடத்தப்பட்டது.


                அந்நாடகம் இங்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி வானொலியில் பலமுறை ஒலிபரப்பப் பட்டது.  நாட்டுப் பற்றை விளக்கும் கதை, உரையாடல், போர்க்களக் காட்சிகளில் யானை பிளிறல், குதிரைக் குளம்பொலி, கனைப்பு, வாள்களின் உரசல், துப்பாக்கிகளின்  வெடிச் சத்தம் முதலான வற்றுக்கு எளிய கருவிகளால் உரிய ஒலிகளை அமைத்த  இசையமைப்புப் பாங்கு முதலானவற்றால் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நாடகம் அது..

                 எனது மேடை நாடகத்திற்கு ஒருமுறை தலைமை தாங்கி நாடகம் முழுமையையும் பார்த்து வியந்து பாராட்டிய  வானொலி அண்ணா திரு இளசை சுந்தரம் அவர்கள் அளித்த அந்த வாய்ப்பை என்றும் மறக்க முடியாது. 

              அதன் தொடர்ச்சியாக நான் திருச்சி வானொலி நாடகங்களில் நடிக்கவும் நாடகங்கள் எழுதவும் வந்த வாய்ப்புகள் தனிக்கதை.

            பள்ளி மேடை நாடகங்களில் நடித்த மாணவர்களின் திறமைகளையும் அவர்கள் இன்று வகிக்கும் பொறுப்புகளையும் நோக்க  வியப்பாகவும் நகைப்பாகவும்    இருக்கிறது.

           அன்று கண்ணகியாக  உரிமைக்குப் போராடிய  மாணவி, இன்று காவல் துணை ஆய்வாளராக இருக்கிறார்.
 ( பெயர்கள் வேண்டாமென நினைக்கிறேன்)  

           அன்று அகிம்சைவாதி காந்தியாக நடித்தவர் இன்று  கராத்தே மாஸ்டராக இருக்கிறார்.   

          இராணி இலட்சுமி பாய் பாத்திரமேற்றவர் இன்று ஒரு பெரிய  தனியார் நிறுவன  நிருவாகியாக இருக்கிறார்.  

         அவுரங்கசீப்பை அலற வைத்த கலகக்காரனாக நடித்தவர் இன்று ஒரு நீதிமன்ற நடுவராக இருக்கிறார். 

          அவர்களுக்கு ஆசிரியராக இருந்த நான்  அவர்களை உயர்த்திவிட்ட ஏணியாகவே ஓய்வு பெற்று, அவர்களின் உயர்வில் பெருமைப்பட்டு  இருக்கிறேன்.

         ஒரு முறை  ஒரு சிறுபான்மை    தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் , வீர சிவாஜி நாடகத்தை நடத்தக் கேட்டார்கள். நான் அப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம்  பெண்பாத்திரமே இல்லாத ஒரு நாடகத்தை வெறும் பெண் குழந்தைகளை வைத்து எப்படி நடத்துவது ? என்று கேட்டேன். அதில்தான் உங்கள் திறமையைக் காட்ட வேண்டுமென்று ஒரு சவால்போலச் சொன்னார்கள். 

              நானும் அதைச் சவாலாகவே எடுத்துக் கொண்டு அம்மாணவியர்க்குப் பயிற்சியளித்தேன். 

             அப்பள்ளி  ஆண்டுவிழாவில்   சிறந்த நிகழ்ச்சிக்கு பரிசளிப்பதுண்டு என்பதால் பல கலைநிகழ்ச்சிகள் போட்டிக்கானவையாகவே நடந்தன. 

           ஆண்டுவிழா நிறைவில் பரிசுக்குரிய நிகழ்ச்சியாக
 “ மலைநாட்டு மன்னன்”  நாடகம்  அறிவிக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. 



                 எல்லாக் குழந்தைகளிடமும் எல்லாத்திறமைகளும் புதைந்துதான்  கிடக்கின்றன. அகழ்ந்தெடுக்கும்போதுதான் அதனதன் மகத்துவம் புரிகின்றது.

              அதே போல புதுக்கோட்டை ஜே.சி.ஐ யும் கண்ணதாசன் நற்பணி மன்றமும் நடத்திய நாடகப் போட்டியிலும்  மாணவர்கள் நடித்த மலைநாட்டு மன்னன் நாடகம் முதல் பரிசு பெற்றதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

              பரிசு பெற்றதைப் பெருமையாக நினைக்கும்  அதே வேளையில்  புறக்கணிக்கப்பட்டபோது பட்ட  வேதனையையும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்.

         1970 களில் புதுக்கோட்டையில் மாவட்ட நிருவாகம் “ஆடிப்பூரம் ” பொருட்காட்சி நடத்திய காலம். பலதுறை சார்ந்த சிறப்புகள்  பொருட்காட்சி அரங்குகளில்  வைக்கப்படும். ஒவ்வொருநாள் மாலையும் இரண்டு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

              அப்படி ஒருநாள் கல்வித்துறை சார்பான கலை நிகழ்ச்சியில்,   நான் பணிபுரிந்த பள்ளி சார்பாக  “ தலைக்கு ஒரு விலை” என்ற  எனது    முப்பது நிமிட   நாடகம் நடத்த வாய்ப்பு தரப்பட்டது.  

              குமணவள்ளல் பற்றிய வரலாற்று நாடகம்  அது. பொதுமக்கள் கூடும் பெருவெளி மேடை என்பதால்   திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடுமையாகப் பயிற்சியளித்திருந்தேன். 

              கல்வித் துறை அலுவலரும் முழு ஒத்திகையைப் பார்த்து அருமை எனப் பாராட்டி அரங்கேற வாய்ப்பளித்தார். 
 அரச இருக்கை, உடைகள். வாள், கிரீடம் முதலியவற்றை வாடகைக்கு எடுத்து மாலை 6.30 மணி நாடகத்திற்கு 4.00 மணிக்கே ஒப்பனை செய்து மாணவர்களை ஆயத்த நிலையில்  வைத்திருந்தேன்.

            தொடக்கத்தில் நடந்த நாதசுர கச்சேரிக் காரர்கள் 6.45க்குத்தான் மேடை விட்டார்கள். அரசவை நடனத்துடன் தொடங்கிய நாடகம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது.

              படைத்தளபதியின் சூழ்ச்சியால் இளங்குமணனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு குமணன் காட்டுக்குச் செல்கிறான். 

             காட்டில் அவன் தனித்து வருந்தும் உணர்ச்சி மயமான காட்சி நடந்து கொண்டிருந்தது.  

     “போதும் நிறுத்துங்க நாடகத்தை” என்ற குரல் மேடையின் பக்க மறைவிலிருந்து வந்தது.

        அதை பொருட்படுத்தாது நாடகத்தைத் தொடர்ந்தேன்.  

            குமணனிடம்  மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க விரும்பாமல் குமணனின் தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன்கழஞ்சு என முரசடிக்க வைக்கிறான் தம்பி இளங்குமணன். 

    “ இப்போ நிறுத்தப் போறியா இல்லையா?”

 கோபாவேசத்தோடு ஒருவர் மேடைக்குள் நுழைந்தார்.

யார் இவர்? ஏன் நிறுத்தச் சொல்கிறார்? புரியாமல் விழித்தேன்.

             --- அடுத்து நடந்ததை அடுத்த தொடரில் 


   

Sunday, June 4, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-27

விழி திறந்து ஒளி தந்த மகளே

                 “தனிக்குடித்தனம்”  நாடகத்திற்கு தலைமையேற்ற சிறப்பு விருந்தினரை வழியனுப்பிவிட்டு, நாடகத்தைத் தொடங்க வேகமாக மேடைக்கு ஓடியபோது, அங்கே  நாடகத்தில் நடிக்கக் கூடிய மன்ற நடிகர்கள் எல்லோரும்   திரை திறந்த ஒளிமேடையில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.

            என்னைப் பார்த்ததும் “ மாட்டோம்  மாட்டோம் நாடகத்தில் நடிக்க மாட்டோம்” என ஆர்ப்பாட்டக் குரல் கொடுத்தார்கள்.
“என்னப்பா பிரச்சனை?”
 “நிறைவேற்று நிறைவேற்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்று”
“ என்னப்பா உங்க கோரிக்கை?“
“நிறைவேற்ற உறுதி கொடு”
“என்னன்னு சொன்னாத்தானே முடியுமா முடியாதான்னு சொல்லமுடியும்”
“ உங்களாலே முடியும். உறுதி கொடுங்க ”
 “ நேரமாயிடுச்சு,  எதுவானாலும் நாடகம் முடிஞ்சு பேசிக்குவோம்“
“முடிஞ்ச பிறகு எதுக்கு? தொடங்கும் முன்னே செய்யுங்க”
“ என்ன செய்யணும் சொல்லுங்க”
செய்யுறேன்னு சொல்லுங்க”
 “ இப்போ நாடகத்தை நடத்தப் போறீங்களா இல்லே கல்லெறி வாங்கப்போறீங்களா? -- பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு குடிமகனின் மிரட்டல்  குரல்.

“செல்வின் சார், நீங்க சிலைடைப் போடுங்க” நாடகத்தை ஆரம்பிப்போம்”  - ஒளிப்பதிவாளரிடம்  நான்

” போடாதே போடாதே. சிலைடு போடாதே”  கூட்டாக எதிர்ப்புக் குரல் மேடைக் கலைஞர்களிடமிருந்து 

 “  இப்ப என்னதான் செய்யணுங்குறீங்க?“

“ முதல்ல நாங்க கேக்குறதைச் செய்யுறேன்னு சொல்லுங்க”

 அட செய்யுறேன்னுதான் சொல்லேய்யா”  தர்ணாவுக்கு ஆதரவாக ஒரு ரசிகரின் குரல்.

“ சரி செய்யுறேன், என்ன செய்யணும்?

“அப்படிவாங்க வழிக்கு,  30நாள் 40 நாள்ன்னு எங்களை ஒத்திகை ஒத்திகைன்னு போட்டு வதைக்கிறீங்கல்ல, எங்களை யாருன்னு மக்களுக்கு அடையாளம் காட்டுறீங்களா?”  கதைத்தலைவனா நடிக்க இருந்தவரின் கேள்வி
“என்னப்பா நாடகத் துண்டறிக்கையிலே எல்லோருடைய பெயர்களையும்  அச்சடிச்சுத் தானே விளம்பரம் பண்றோம்.”

“நோட்டீசிலே சரி, மேடையிலே....?”

 ”அதான் வெள்ளைத் திரையில வண்ண சிலைடுல பெயர்களைப்  போடுறோமுல்ல”

“அது எங்க ஆயி அப்பன் வச்ச பேரு, இந்த மூனு மணி நேரத்துக்கு  எங்களுக்கு  என்ன பேரு?
.......

“ சார் , நாடகத்திலே என்ன பேருல நடிக்கிறோம்” மன்றத் தலைவரின் கேள்வி

“ நீங்க காதர்பாட்சாவா. அவரு பாட்டு வாத்தியார் பசவப்பா”

“அப்படி கேரக்டர் பேரைச் சொல்லி எங்களை மேடையில அறிமுகப் படுத்துங்க”

“அவ்வளவுதானே. செஞ்சுடுறேன். எல்லாம் எந்திரிச்சு அந்த நீலத்திரைக்குப் பின்னாலே போங்க” ன்னு சொல்லிட்டு அவங்க கோரிக்கையை நிறைவேற்றத் தொடங்கினேன்.

               ஒவ்வொருவருடைய நாடகப் பாத்திரப் பெயரையும் நடிப்பவர் பெயரையும் நான் சொல்லச் சொல்ல ஒவ்வொருவராக வந்து தங்களின் “பஞ்ச்” டயலாக் ஒன்றைச் சொல்லிச் சென்றனர்.

             நாடகம் பார்வையாளர்களின் கையொலியுடன் கலகலப்பாகத் தொடங்கியது .

             நாங்கள் முன்னரே திட்டமிட்டுச் செய்த ஒருவகை
 “அறிமுக உத்தி” என்பது பார்வையாளர்களுக்குத் தெரியவா போகிறது?

                                                   பெண்சிசுக் கொலை.

 பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியும், நெல் மூக்கைச் செருகியும் கொன்றழிக்கும் ஈனச்செயல்  தென்மாவட்டக் குக்கிராமங்களில் நடப்பதான செய்தி நாளேடுகளில் பரபரத்த வேளை.

               பெண்சிசுக் கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தி 1994ல் ஆக்கப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த மேடை நாடகம்தான்
 “ விடியலைத்தேடி”





                 பெண்களுக்குத் திருமணத்தின்போது சீர்வரிசை செய்வதைச் சுமையாகக் கருதி, அந்தியுர் என்ற கிராமத்தில், பெண்குழந்தை பிறந்தால் உடனே அக்குழந்தையின் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியோ, நெல்சுனையை அக்குழந்தையின் தொண்டைக்குள் செருகிக் கொன்று புதைத்து விடும் சமூகஅநீதிச் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.     பள்ளி.  போக்கு வரத்து செய்தித் தொடர்பு என்ற எவ்வித   வசதிகளும்    இல்லாத    அந்த மலைக்கிராமம்    கங்காணியார் குடும்பம்  என்ற ஒரு தனிக் குடும்பத்தின் சர்வாதிகாரத்தில்   இயங்கும் 
ஒரு  த னித் தீவாகவே இருந்து வந்தது.

              இரண்டு முறை பெண்குழந்தை பிறந்து அவற்றைக் கொன்ற   பின்னர் மூன்றாவதும்  பெண்குழந்தையாகப்    பிறந்தால், அப்பெண் தன் கணவனை விலக்கிவிட்டு ஆண்குழந்தை வேண்டி  வேறு கணவனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற  முரண்பாடான நடை முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது அக்கிராமத்தில்.

                அந்த கங்காணி மகள் குருவம்மாவுக்கு  மூன்றாவதாகப் பிறந்த  பெண்  குழந்தையைக் கொன்று புதைக்க அக்குழந்தையின் தந்தை  கொண்டையனிடமே ஒப்படைக்கிறார்  கங்காணி.  அவன் அக்குழந்தையைக் கொல்ல விரும்பாமல்  அடுத்த ஊர்    தமுக்கு அடிக்கும் கொம்பேறி என்பவனிடம்   வளர்க்க  ஒப்படைத்து  விட்டு கரடிக்காட்டிற்குள் தலைமறைவாகிறான் கொண்டையன்.

               தாய் முகம் தெரியாது, தன்னை  வளர்த்த    கொம்பேறியே தனது தந்தை என நினைத்து  வேணி என்னும் பெயரில்   வளர்கிறாள்  அக்குழந்தை .  அப்படி வளர்ந்த அந்தப்பெண்   படித்துப் பட்டம்பெற்று   புலனாய்வுக்  காவல் ஆய்வாளராகிறாள்.

                அந்தியுரில் நடக்கும்  சிசுக் கொலை தடுப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட வேணி,  மாறுவேடத்தில்    அந்தியுர் வந்து  கங்காணி வீட்டில்  எடுபிடியாக இருக்கும்  ஊமைத்துரை என்னும் வெகுளியோடு பழகி  இரகசியங்களைச் சேகரிக்கிறாள்.



                 கொண்டையனை விலக்கிவிட்டு புலிக்குட்டி என்பவனைத் தன் மகள் குருவம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் கங்காணி. வெடிவிபத்தில் கங்காணி இறந்ததும்  குருவம்மாள் அந்த கிராமத்தையே  ஆட்டிப் படைக்கிறாள்.

              பெண்சிசுக்களைக் கொல்வதில் கொடூரமாக நடந்து கொள்ளும்        கு ருவம்மாவுக்கு   அவளுடைய     மகன் கோபால் முரடனாகத்  தாயின் அன்முறைக்கு துணையாகிறான்.

              உளவுபார்க்க வந்திருக்கும்    வேணியை  ஊரைவிட்டு விரட்ட அவளின் தந்தை  வெட்டியான்  கொம்பேறியை அடியாள்களை வைத்துத் தாக்குகிறான். கடுமையான தாக்குதலால் இறக்கும் நிலையில்,  கொம்பேறி வேணியோடு பழகும் ஊமையனிடம்   தனது மகள் இல்லை,  கொண்டையன் மகள் என்பதைச் சொல்லி இறந்து விடுகிறான்.

               தன் தந்தை இறப்புக்குக் காரணமான கோபாலைச் சட்டத்தின் முன் நிறுத்த வேணி முயற்சிக்கையில் அவளை தன் கூலிப்படை மூலம் கடத்திக் கொல்ல முயற்சிக்கிறாள்  குருவம்மா.

              கொம்பேறி இறந்ததையும், அவனால் வளர்க்கப்பட்ட தன் மகள்     வேணி குருவம்மாவால் கொடுமைப் படுத்தப்பட இருப்பதையும்  ஊமைத்துரை மூலம் அறிந்த கொண்டையன்,  வேணியைக் காப்பாற்ற  வருகிறான். 

               வேணியைத்தூணில் கட்டி வைத்து மண்ணெண்ணையை ஊற்றி எரிக்க முயலும்  குருவம்மாவைத் தடுத்து,  வேணி தங்கள் மகள் என்னும் உண்மையைச் சொல்கிறான்  கொண்டையன்.


                பெண்களால்தான் ஒருசமூகம் முன்னேறமுடியும். மாற்றத்திற்கான விதைகள் பெண்களாலே விதைக்கப்படுகிறது. பெண்கள் இல்லாத உலகு விடியல் இல்லாத  இருளாகவே இருக்கும், மணம்தரும் மலர்களை அரும்பில் அமிலம் ஊற்றிக் கருக்கலாமா? எனப் பெண்களின் அருமை பெருமைகளை குருவம்மாவுக்கு உணர்த்துகிறான் கொண்டையன். 

                     பெண்சிசுக் கொலைக்கு ஒரு பெண்ணான தானே காரணமாகியிருந்த தனது செயலுக்கு வருந்துகிறாள் , பெண்குழந்தைகளை அரும்பவிடாமல் அழித்து     மனித      குலத்தையே    குருடாக்கிய   தனக்கு   தன்மகளே விழி திறந்து  
ஒளிதந்தவள் எனப் பெருமை கொள்கிறாள்.  


            --- அடுத்த தொடரில் வரலாற்று நாடக அனுபவங்கள்.



       









Thursday, June 1, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி- 26


நாற்றங்காலும் நடவுப் பயிரும் 


                    மாற்றுக் கருத்துகளைக்   கருத்து ரீதியாக எதிர் கொள்வர்   கொள்கை வாதிகள் சிலர்  . குள்ளநரிகளாய்  கூட இருந்தே அடுத்துக் கெடுப்பவர் பலர். 

                  எனது முற்போக்கு நாடகக் கருத்தகளை விரும்பாத   அத்தகு குள்ளநரி ஒன்று. “ கரையேறிய அலைகள்” நாடகத்தில் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடிக்க, இருபது நாள்களாகப் பயிற்சி பெற்றிருந்த ஒருவரை நாடகத்தின் முதல்நாள் கடத்திவிட்டார்.

                 இறுதி முழு ஒத்திகையின்போது  அவரைக் காணாது தேடினால் அவரது அண்ணன் அவரை மேல்மருவத்தூருக்கு ஒரு  அவசர    ஆன்மீகப் பணிக்காக அனுப்பி  விட்டதாகத் தெரிந்தது.

                “அவளுக்கு ஒரு நீதி”  நாடகத்தில்  கதைத் தலைவனாக நடிக்கப் பயிற்சியெடுத்தவர்  திடீரென    பணி மாறுதல் காரணமாக சென்னை சென்றுவிட, நான் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கசப்பான பட்டறிவால்,  அடுத்தடுத்த நாடகங்களில் நான் எந்த முதன்மைப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்காமல் என்னை எதற்கும் தயாரான நிலையிலேயே  ( ஒரு ஜோக்கர் போல ) வைத்திருப்பேன்.   

               எந்த க்காலி  இடத்தையும்  இட்டு  நிரப்பும் திறமை யுள்ளவன்தான்   ஒரு மேடைநாடக இயக்குநராக இருக்க முடியும் என்பது எனது மேடை நாடக அனுபவம்.

             அந்த வகையில் இந்த  நாடகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்கக்  காவல்  ஆய்வாளர் பாத்திரத்தை நானே    ஏற்று நடித்து, நாடகம்  நின்றுபோகும் எனக் குள்ளநரி கண்ட   கனவினைக் களைத் தொழித்தேன்.  

            “இத்தனைக்குப் பிறகும்  மேடை நாடகத்தைத் தொடர வேண்டுமா?” என்ற   விரக்தியில் சோர்ந்து போயிருந்த  எனக்கு  அரசு வழக்குரைஞராக அப்போதிருந்த திரு எருதலான், திரைப்பட இயக்குநர்  மகேந்திரா போன்றவர்கள்  “சமூக மாற்றத்திற்கான கூர்ப்புள்ள கருவி மேடை நாடகங்கள்”, விடாது தொடருங்கள் எனப்  புத்துணர்ச்சியளித்துத் தொடரச் செய்தனர்.

             அந்தத் தெம்பினில்  1987ல் இரு முறையும், 1990ல் இருமுறையும்  சிறப்பாக அரங்கேறிய  சமூக நாடகம்தான் “ தனிக்குடித்தனம்”



                   இந்த நாடகக் கதையும்      ஒரு பெண்ணின் சீர்மைச் செயலை  உட்கருவாகக் கொண்டதுதான்.

                  ஒரு குடும்பத்தில் தலைமகனாய்ப் பிறந்தவன்தான் அந்தக் குடும்பத்தின்  அத்தனை பொறுப்புகளையும் வாழ்நாள் முழுதும் சுமக்கவேண்டுமா?  அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகளுக்குத்தான்  அத்தனை சுமைகளுமா?  என்ற கேள்விகளுக்கு , அந்த தலைமகனுக்கு மனைவியாய் வந்த பெண் மூலம்  விடை தேடுவதாய்  அமைந்தது இந்நாடகம்.

               படிப்பு, பருவம், உடல்திறன் அனைத்தும் இருந்தும் அண்ணன் வருவாயில் ஆடம்பரமாய் வாழ நினைத்த தனது கணவனின் தம்பி, தங்கை ஆகியோர்க்கு குடும்பப் பொறுப்பை உணர்த்த முயல்கிறாள்  தலைமகனின் மனைவி  பரிமளம். உடன் பிறந்த தங்களைவிட இடையில் வந்தவளுக்கு என்ன உரிமை என,
தங்கள் சுகபோகத்திற்குத் தடையாய்  இருப்பதாய்  அ ண்ணியின் அறிவுரையை அலட்சியம் செய்கின்றனர் தலைவனின் உடன் பிறப்புகள்.

                அவர்களுக்குப் பணத்தின் அருமையை உணர்த்தவும், வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கவும் , தான் ஒரு எதிர்த் தலைவியாக மாறித் தனது கணவனோடு  அந்த வளாகத்திலேயே ஒரு வீட்டிற்குத் தனிக்குடித்தனம் போகிறாள்  கதைத் தலைவி பரிமளம்.

               தங்களைத் தவிக்கவிட்டுத் தங்கள் அண்ணனோடு தனிக்குடித்தனம் சென்ற பரிமளத்தை அவள் கொழுநனும், நாத்தியும் எதிரியாக நினைத்து வெறுக்கின்றனர்.


           தனித்து விடப்பட்ட  இருவரும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதிலும், அவர்களுக்கு வருமானத்திற்கான வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும் , மறைமுகமாக உதவுகிறாள் பரிமளம்.

              தனது அண்ணனைவிட அதிக வசதிகளை அடைய,   குறுக்கு வழியில் பொருளீட்ட  முனைத்த  தம்பி   முத்து, ஒரு மோசடிக் கும்பலில் சிக்கித் தவிக்கிறான்.  தனது அண்ணியைவிட  மேலான நகை, புடவைகளுக்கு ஆசைப்பட்ட  விசயா ஒரு ஆடம்பரப் பிரியனை நம்பி மோசம்போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். 

            அவர்களை அவர்களின் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி,  இருவருக்கும் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து   வாழ்க்கை அனுபவங்களை உணர்த்துகிறாள் பரிமளம்.
 பரிமளத்தின் நல்லெண்ணச் செயல்களால் நாணப்பட்ட   இருவரும்  இறுதியில் கூட்டாகச் சேர்ந்து  வாழ விரும்புகின்றனர்.  

             தனியே இருக்கும் போதுதான் சொந்தக் காலில் நிற்கும் பொறுப்பு அதிகரிக்கும்.     குடும்பங்கள் பிரிந்து  இருந்தாலும்   பாசம்  என்றைக்கும்  சேர்ந்தே இருக்கும் என அறிவுறுத்தி அவர்களைத் தனிக்குடித்தனம்  அமர்த்துகிறாள் பரிமளம்.    

             நகைச் சுவை, செட்டிங், இவற்றால் இந்நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இந்த நாடகத்தில் இரண்டு  புதிய முயற்சிகள். 

                திரைகளைக் கொண்டு காட்சிப் பின்புலத்தை மாற்றுவதைத் தவிர்த்து,  ஒரே அரங்க அமைப்பில்,  மாடிப்படியோடு கூடிய  நான்கு குடியிருப்புகளைக் காட்டுவது.  மூன்று நுழைவாயில் கொண்ட  குடியிருப்புகள் கீழே.  மாடியில் ஒரு குடும்பம் வசிப்பதாகக் காட்டுவது .

             அதற்காக ஒரு மாதம் முயன்று செட்டிங் தயாரித்திருந்தேன்.   ஒவ்வொரு குடும்பத்தின் செயல் நடப்பை  அந்த வீட்டின் விளக்கால் பிரித்து அடையாளப்படுத்தி   யிருந்தேன்.

            விளக்குகள் எரிய வேண்டிய குறிப்புகளை ஒளியமைப்பாளர் ஒரு காட்சியில் மாற்றி எரியவிட,  குடியிருப்பு மாறிப்போன குழப்பம் ஓரிடத்தில்.

             மேடை மாடிப்படியில் ஏறிப்போனவர்கள்  இறங்க வழியின்றித் திண்டாடியதும், வெளியிலிருந்து காட்சிக்கு வரவேண்டியவர்கள்    இறங்காமல் அங்கேயே நின்ற தால்  அடுத்த காட்சிக்கு வெளியிலிருந்து வரமுடியாமல் தவித்த   முரண்நகைச் சுவைகளும் நடந்தன.



                 நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தவர்களை கவனித்துவிட்டு  நாடகத்தைத் தொடங்க மேடைக்கு நான் வந்தபோது...

             நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும்  “நடிக்க முடியாது” என்று மேடையிலேயே ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டனர்.  





               அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்?

               --- அடுத்த தொடரில்