Monday, September 26, 2016

புதிய கல்விக் கொள்கை - இசைப்பாடல்

 புதிதாக நடுவணரசு வகுக்க முனைந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், கல்வியாளர்களின், பொது மக்களின் கருத்தறியப்படாமல்  வெளியிடப்பட்டுள்ள உள்ளீடுகளின் பாதிப்பு மற்றும் முரண்களை நீக்கக் கோரி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த நிலையில் பாமர மக்களுக்கு அதன் எதிர்காலத் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு சென்றடைய, கலை வடிவங்களும் , இசைப்பாடல்களும்  ஓரளவு நல்ல பயனளிக்கும் என்பதால் இந்த இசைப்பாடலை ஆக்கியுள்ளேன்..

அறிவொளி காலத்து “ கடையாணி” பாடலின் இசையில் இப்பாடலைப் பாடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்
இசைப்பாடல்-  பாவலர் பொன்.கருப்பையா.

மாறவேணும் புதிய கல்விக் கொள்கைங்க - அதில
மக்கள்நலம் கொஞ்சங் கூட இல்லேங்க
தானானே தானேனன்ன தன்னன்னா - தானே
தானானே தானேனன்ன தன்னன்னா

சமத்துவத்தை மலர்த்துவதே கல்விதான் - அதைச்
சாத்தியமா ஆக்கும் பொதுப் பள்ளிதான்
சாதிக்கும் மாந்தரை உருவாக்கத்தான்- நாட்டில் 
சகலருக்கும் வேண்டும் புதிய கல்விதான்  -       மாறவேணும்

தேக்கமில்லாத் தேர்வு முறையில் மட்டுமே - எங்கும் 
தேடிக்கல்வித் தொடரும் வாய்ப்புக் கிட்டுமே
தோத்தவனை  தெரிஞ்ச தொழிலைச் செய்யவே - நெட்டித்
துரத்துவது குலக் கல்வித் திட்டமே.                 - மாறவேணும்

தேர்ச்சியிலே தரம் பிரித்தல் தர்மமா? - இது
தேசிய நீரோட்ட வர்க்க பேதமா?
வசதியாளர் பட்டம் பதவி ஆள்வதோ? - வாழ்வில்
வறுமைப் பட்டோர் துன்பத்திலே வீழ்வதோ?       -- மாறவேணும்

வேறுவேறு மொழிகள் பேசும் மண்ணிது - இதுல
வேதமொழிக் கல்வியை வலிந்து  திணிப்பதா?
வீரவர லாற்றை நூலில் மறைப்பதா? - மனுதர்ம
வேதகாலப் பழங் கதைகளை நுழைப்பதா?           - மாறவேணும்

அரசுப்  பள்ளி மாணவர்கள் குறைஞ்சிட்டா - அதை
அடுத்து தனியார் பள்ளியோடு இணைப்பதா?
ஆசிரியர்க்கு ஐந்தாண்டுக்கொரு மதிப்பீடா?- இதனால்
அரசுக்கல்வி அந்நிய  மயமா ஆகாதா?              - மாறவேணும்

மக்களைமேல் உயர்த்துவதே கல்வியின் எல்லை - தனியாய்
மாநிலத்தின் பட்டியலிலும் கல்விவர  வில்லை
மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயனிலாக் கொள்கை - மாற்றி
மலர்த்த வேண்டும் புதுசாஒரு கல்விக் கொள்கை. -- மாறவேணும்

No comments:

Post a Comment