Monday, February 22, 2016

இல்லறத் துணைநல ஏற்பு விழாவில் ...

திருவள்ளுவராண்டு2047 கும்பம் 9ஆம் நாள்( 21.02.2016) 
மதுரை பாண்டியன் திருமண அரங்கில் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் தமிழர் நெறிவழி நடைபெற்ற ஒரு திருமண விழாவில்  பல புதுமைகள் அரங்கேறியமை மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அழைப்பிதழிலேயே  திருவள்ளுவர்,  பெரியார்,பாரதிதாசன், பாரதியார், வள்ளலார் ஆகியோரின் அமுத மொழிகள் அச்சேறி அழகு செய்தன.

இணைந்து இல்லறமேற்போர் பெயர்களின் முன் தாய் தந்தையரின் பெயர் முதலெழுத்துகள் தமிழிலிருந்தது, சமக்கிருத ஆண்டு, பட்சம், நட்சத்திரம், யோகம், லெக்கனம் என்பவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, சூழியல் நெறிவழி உறுதி செய்தவாறு  மணவினைகள் நடந்தேறியமை முதலான பல சிறப்புகளைக் காண முடிந்தது.

 மொய் தவிர்க்கப்பட்டதும் வருகையும் வாழ்த்துமே விலையுயர்ந்த பரிசு எனக் குறிப்பிடப்பட்டதும் ஒரு மாறுபாடாவே இருந்தது.

 மணநிகழ்விற்கு முன்னதாக செவிச்சுவையாக
 “வாழ்க்கை உவகையால் நிறைந்தினிப்பது திருமணத்திற்கு முன்பா? பின்பா?“ என்னும் தலைப்பில்  கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில் மதுக்கூர் இராமலிங்கம், மகாராசன், நிசா, சோதி ஆகியோர் பங்கேற்ற  நகைச்சுவை பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.

மணவினை  நாவை .சிவம் அவர்களால் தொடங்கப்பட்டு
 தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் அவர்களால் தமிழ் நெறிப்படி  மெய்விளக்கத்தோடு நடந்தமை விழாக்காண வருகைதந்தோரை 
 சிந்திக்கவே வைத்தது.

மணமகன், மணமகள் அழைப்பு என்னும் சடங்குகளும் ஆடம்பர அலங்காரங்களும் தவிர்க்கப்பட்டிருந்தன.   

அந்நிரலில் புதுமையாக மூடநம்பிக்கைகளைச் சாடும், அறிவியலா? அற்புதமா? என்னும் மெய்விளக்க நிகழ்ச்சி பாவலர் பொன்.க அவர்களால் நடத்திக் காட்டப்பட்டது.  பில்லி சூன்யம், பெண்களுக்குப்  பேயோட்டுவதாக நடக்கும் வன்முறைகள், சாதகம், கைரேகை பித்தலாட்டங்கள்  முதலிய  மூடநம்பிக்கைகளைச் சாடி  போலிச் சாமியார்களால் மக்கள் ஏமாறும் நிலையினை விளக்கியதோடு சில அற்புதங்கள் அறிவியல் அடிப்படையானவையே என்பதைச் செயல் விளக்கங்கள் மூலம் செய்து காட்டினார். 

வெறும் கையில் தங்கச் சங்கிலி, திருநீறு. குங்குமம் வரவழைத்தல், அறிவியலறிஞர்களின் பெயர்களை ஒலிக்க அறுந்த கயிறுகள் இணைதல்,  நீளங்கள் மாறும் கயிறுகள், நெய் சொரிய நெருப்பின்றி எரியும் காகிதக் குவியல், எலுமிச்சம்பழத்திற்குள் இரத்தம், தேங்காய்க்குள் மலர்ந்த முல்லை மலர்கள் வரவழைத்தல், நீரூற்றப்  பற்றி எரியும் தேங்காய்,  நிறம் மாறும் சீட்டுகள், உடலில் தேய்த்தும் சுடாத தீப்பந்தங்கள். சூடம் விழுங்குதல், முதலான  பல தந்திரக் காட்சிகள் விழாவிற்கு வந்திருந்தோர்க்கு அறிவு விருந்தாக அமைந்திருந்தது. 

பலகுரல் இளவல் புதுகை வினி அவர்களின் பலகுரல் நகைச்சுவைத் தோரணம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவுமாக அமைந்திருந்தது.

அந்நிகழ்வில் பாவலர் பொன்.க.,  எழுதி இசையமைத்துப் பாடிய 
          அறிவியல் கருத்தமைந்த பாடல் இதோ.....

அறிவியலின் வழியில்தானே மாற்றம் நடக்குது- அதன்
அடிப்படைதான் மக்கள் வாழ்வில் மலர்ச்சி கொடுக்குது
அறியாமை இருட்டு இன்னும் அப்பிக் கெடக்குது- அதை 
அகற்றுவதில்  நமக்கு ரொம்பப் பொறுப்பு இருக்குது     - அறிவியலின்

கட்டுச்சோறு கட்டை வண்டி பயணங்கள் போச்சு- இப்பக் 
களைப்பில்லாம பாட்டியும் உலகைச் சுத்திவரலாச்சு
கடுதாசியும் தந்தியும்கூட கைவிட்டுப் போச்சு - உள்ளங்
கைகளுக்கும் உலகைக் காணும் இணையம் வந்தாச்சு  -- அறிவியலின்

கூட்டத் துவைக்க மின்னணுப் பொறிகள் எங்கும் வந்தாச்சு - வீட்டுள்
கொதிப்பைக் குளிரைக் கட்டுப் படுத்த எந்திரமாச்சு
கொடுத்த வேலைமுடிச்சுக் கொடுக்க ரோபோக்களாச்சு - விரும்பும்
குழந்தையினைக் குளோனிங்கில் பெறவும் வழியும் கண்டாச்சு - அறிவியலின்

நிலாவிலே  காலடிவச்ச  கதை பழசாச்சு - அங்கே 
நிரந்தரமாக் குடியிருக்க வழியும் கண்டாச்சு
செவ்வாய்க் கோளின் ஆராய்ச்சியிலும் தெளிவு வந்தாச்சு - பெண்ணுக்கு
செவ்வாய்தோசத் தடைகள் தீரும் நிலமை வந்தாச்சு  -- அறிவியலின்

கிரகங்களால் கெடுதல் என்னும் சாதகப் பேச்சு - இப்ப
கிக்ஸ்போசான் விண்வெளி ஆய்வால் பொய்யின்னு ஆச்சு
அணுவியலின் தொழில் நுட்பங்கள் அனைத்திலுமாச்சு - இனிமே
அறிவியலே அகிலத்தை ஆளும்  நிலைஒசந் தாச்சு    -- அறிவியலின்