Thursday, December 22, 2016

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.

Image may contain: 7 people, people standingபுதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் 18.12.2016 அன்று கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகமையில் LK Institute of Skill Development  நிறுவனம் தயாரித்து அளித்த கணினித் தமிழ்க் கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட அதனை கவிஞர் கீதாவும்ஈ பாவலர் ்பொன்.கருப்பையாவும் பெற்றுக் கொண்டனர்.

முகாம் தொடக்கத்தில்  பாடுவதற்காக பாவலர் பொன்.க எழுதி  இசையமைத்திருந்த பாடல், தொடக்கம்  திட்டமிட்ட  நேரத்தில் தொடங்கப்பட இயலாச் சூழலில் அப்பாடல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பாடல் இதோ...

புதிய பொலிவு பெறுகு தெங்கள் இனிய தமிழ்மொழி
புவியைச் சுருக்கி இணைக்கு திப்போ இணையத் தமிழவழி
கணினித் தமிழ்ச் சங்கம் காட்டும் பயிற்சி  யின்வழி
கடல் கடந்து விண்ணைத் தொடுது கன்னித் தமிழ்மொழி       - புதிய

மின்னஞ்சல் வழியில் செய்தி தமிழில் அனுப்புவோம்
மேன்மையான நடப்பைப் பிறர் அறிய வழங்குவோம்
வலைத் தளங்கள் உருவாக்கி வளமை பெருக்குவோம்
வகைவகை யாய்ப் படைப்பு களை வழங்கி மகிழுவோம்       - புதிய

முக நூலைத் தொடங்கித் தரவைப் பதிவு செய்யலாம்
முனைப் புடனே  செய்திப் படங்கள் ஏற்றிக் காட்டலாம்
நானி  லத்து மனிதர் களையும்  நண்ப  ராக்கலாம் 
நட்பு வட்டத்  தோடு செய்தி பகிர்ந்து கொள்ளலாம்    -- புதிய 

வலை யொளியில் காணொளி நல் காட்சி ஏற்றலாம்
உலகம் முழுதும் பார்த்தவரின் விருப்பமறியலாம்
விக்கி  பீடியாவில் தமிழில் கருத்தை எழுதலாம்
விரும்பும் நூலை பிடிஎப்பில் படித்து மகிழலாம்            - புதிய

திறன்  செயலிப் பேசிகளில் திரட்டி ஏற்று  வோம்
தேவைப் படும் வகையியல திறந்து பயன் படுத்துவோம்
கணினி வழி வன்மு றைகள் பரவுதல் தடுப்போம்
கடவுச் சொல்லை கமுக்க  மாக மூடியே வைப்போம் - புதிய 
Image may contain: one or more people and indoor

Tuesday, December 20, 2016

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய
இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் 18.12.16 அன்று காலை 10 மணியளவில் தொடக்கவிழாவோடு துவங்கியது.
வரவேற்புரை
கவிஞர் ராசிபன்னீர்செல்வன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
[விழா நடக்கும் இடத்திற்கான பொறுப்பு மற்றும் அவர்களே உணவும் தேநீரும் வழங்குவார்கள் என்று கூறி பெரிய நிதிச்சுமையை குறைத்தார் திட்டமிடலின் போது]
வாழ்த்துரை
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திருமிகு ஜெய்சன் ஜெயபரதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்களும் சிறப்பானதொரு வாழ்த்துரையை வழங்கினார்கள்.
பயிற்சி கையேட்டு நூல் வெளியிட்டு சிறப்புரை
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் பயிற்சி கையேட்டு நூலை வெளியிட அதை கணினித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களாகிய பாவலர் பொன்.கருப்பையா அவர்களும் ,கவிஞர் கீதாவும் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பானதொரு உரையை கவிஞர் தங்கம்மூர்த்தி வழங்கினார்.
பயிற்சி நோக்கவுரை
கணினித்தமிழ்ச்சங்கத்தின் தோற்றம்...தோற்றுவித்தவர்,ஏன் கணினித்தமிழை வளர்க்க வேண்டும் என கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.ஒவ்வொரு நாளும் தூங்காமல் திட்டமிட்டு அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது. 
வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நூல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நன்றியுரை
கவிஞர் கீதா நன்றியுரை கூற தொடக்கவிழா இனிதே நிறைவுற்றது.

பயிற்சி முதல்நிலை
முதல் பயிற்சியாக தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு முனைவர் பழனியப்பன் அவர்கள் மற்றும் புதுகை எல்.கே இன்ஸ்டியூட் உதயக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து 80 பேருக்குமேல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.அதில் 40 பேருக்கு மேல் அன்றைய பயிற்சியில் மின்னஞ்சல் துவங்கி, வலைப்பூவும் வடிவமைத்தனர்.
வலைப்பூவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.அனைவரும் தங்களது தளத்தை செம்மைப்படுத்திக்கொள்ள உதவினார்.
விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் என்ன?என்ன எழுதாலாம்....அதன் பயன்கள் என்ன என்று விக்கிபீடியாவைச்சேர்ந்த பிரின்ஸ் என்ராசு அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
முனைவர் ஜம்புலிங்கம் அய்யா தனது விக்கிபீடியா அனுபவங்களைக்கூறி எப்படி எழுத வேண்டும் .எதை எழுதக்கூடாது என்பதை கூறி..
பயிற்சியை மெருகூட்ட விக்கிபீடியாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்காக ஒரு கட்டுரை துவங்குகின்றேன் என்று துவங்கினார்கள்.நம்பிக்கைக்குரிய விக்கிபீடியா உறுப்பினராக அய்யா விளங்குகின்றார்..கணினித்தமிழ்ச்சங்கம் அளித்த முதல்பயிற்சியில் தான் அவர்கள் விக்கிபீடியாவைப்பற்றி அறிந்து பின் 300 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமிகு ரமேசு டி.கொடி திருச்சி
யூ ட்யூபில் எவ்வாறு வீடியோவைப்பகிர்வது என்பதைப்பற்றி சிறப்பாக விளக்கினார்.
அலைபேசி பயன்பாடு
அலைபேசியில் என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும்,கூகுளில் ஷார்ட்கட் முறைகளையும்,திருமிகு கோபிநாத் [ஜி டெக் எஜுகேசன்]அவர்களும் திருமிகு ராஜ்மோகன் அவர்களும் எடுத்துக்கூறியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவர்கள்
திருமிகு கில்லர்ஜி,
திருமிகு எஸ்.பி செந்தில்குமார்,
திருமிகு கோபிசரபோஜி,
திருமிகு தமிழ் இளங்கோ. ....
கவிஞர் செல்வா மற்றும் புதுகை செல்வா ஆகியோர் தங்களது வலைப்பூ அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பானதொரு மதிய உணவும் தேநீரும் தந்து உபசரித்த விதம் மிக அருமை.
அனைவரிடமும் கருத்து படிவம் வழங்கி கருத்துகளைப்பெற்றபோது..சிறப்பான பயிற்சி மேலும் வழங்க வேண்டும்,பிறமாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என அனைவரும் பயன் பெற்றோம் என்று எழுதியிருந்த போது ...அதுவரை பட்ட சிரமங்கள் எல்லாம் பனியாகக்கரைந்தன.
இப்பயிற்சி முழுமையடைய முழுமுதற்காரணம் கவிஞர் முத்துநிலவன் அண்ணா தான்.இரவுபகல் பாராது இதற்காக உழைத்துள்ளார்.அவர்களின் சீரான திட்டமிடலே முக்கிய காரணம்...கணினியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்..என்ற தாகத்தை அன்றைய பயிற்சி உருவாக்கியுள்ளது.

Friday, December 16, 2016

தமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க..

தமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க...

“தொன்று நிகழ்ந்த தனைத்து முணரந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் 
என்று பிறந்தவள்  என்றுண ராத 
இயல்பின ளாம் எங்கள் தாய்“ --

என்ற பாரதியின் வாக்கிற்கேற்பவும்  

“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்“ என்ற பாவேந்தர் 

மொழிவிற்கேற்பவும், உலகின் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் மூத்த,தொன்மை வாய்ந்த மொழியாய்த் தோன்றிய மொழி 
நம் தமிழ்மொழி.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ்மொழி என பிரித்தானியா கலைக் களஞ்சியம் சொல்லும் பெருமை கொண்ட மொழி தமிழ்மொழி.
இத்தகு பெருமையும் தனித்தன்மையும் மிக்க தமிழ்மொழியில் காலப்போக்கில் பிறமொழிகள் சிறிது சிறிதாகக் கெடுவாய்ப்பாகக் கலக்கத் தொடங்கின.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமற்கிருதம் போன்ற பிற மொழிச்சொற்கள் சில தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நம் தமிழ் நூல்களில் வந்து கலந்ததாக வரலாற்றாய்வாளர் கூறுகின்றனர்.         ( திருக்குறளில் வெறும் 17 சொற்களே பிறமொழிச் சொற்கள் என்பார் பாவாணர்)
தமி்ழைப் பிற உலக மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்ந்த கால்டுவெல்                        “ தமிழுக்கு அயன்மொழியின் துணை தேவையில்லை. 
பிறமொழிச் சொற்களை விலக்கினாலே தமிழுக்குப் பெருமை மிகும்” என்று குறிப்பிட்டார்.


தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக்கூறப்பட்ட களப்பிரர் காலத்தில் தான் பல  தமிழ் நூல்கள் பிறமொழிக் கலப்போடு புடைத்தெழுந்தன. 
காலச்சூழலில் ஆண்ட மன்னர்களின் பேதைமையாலும் ஆரிய ஆதிக்கம் மிகுந்தது.

அழிவின் விளிம்பில் இருந்த தமிழ்,  அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்  காரைக்கால் அம்மையார் போன்றோரின் திருமுறைகளால் ஓரளவு காப்பாற்றப்பட்டது என்றே கூறலாம்.  ஆழ்வார்களின் இறைஇசைப் பாடல்களும்கூட சமற்கிருதத்தைப் புறந்தள்ளியே இருந்ததைக் காணலாம். 

கம்பரும், ஒட்டக்கூத்தரும்  இயன்றவரை பிறமொழிச் சொற்களைத் தவிர்ததே தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். என்றாலும் பல புலவர்கள் பிறமொழிக் கலப்போடே படைப்புகளைத் தந்துள்ளமை வேதனைக்குரியதே.

பல்லவர் காலத்திலும் பின்பெழுந்த  மூவேந்தர் காலத்திலும்  வெறிகொண்ட சமற்கிருத தாக்கம் தமிழில் மிக்கிருந்தது வெள்ளிடைமலை.

 புலவர்களின் புனைவுகள், மன்னர்களின் கீர்த்திக் கல்வெட்டுகள் பிறமொழிக் கலப்போடே காணப்படுகின்றன. 
பிற்காலத்தில் தெலுங்கு கன்னடம், சமற்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடை தமிழின் தனித் தன்மைக்குப் பெரும் முட்டுக்கட்டையாய் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

அயல்நாட்டார் வருகை  காரணத்தால், இனிமைத் தமிழ்மொழி இனந்தெரியாப் பிறமொழிகளின் கலப்பிற்குட்பட்டுச் சிதையத் தொடங்கியது.

குறிப்பாக ஆங்கில, பாரசீக,போர்ச்சுகீசிய மொழிகள் தமிழில் இரண்டறக் கலந்து பேதமின்றி பேச்சு, எழுத்து வழக்கில் நிலைபெறத் தொடங்கிற்று.

பிறமொழிக் கலப்பால் தமிழ்மொழி தன் தனித்தன்மையை இழந்து நாளடைவில் கலப்பு மொழியாகி அழிந்து விடும் என்கிற மொழிக்காப்பு உணர்வில்தான்  மறைமலையடிகள்,  பரிதிமாற்கலைஞர்,தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து , தமிழினத்தை ஓர் அறிவுக் குமுகமாக மாற்றி நிலை நிறுத்தும் அரிய பணியினைத் தொடர்ந்தனர்.

கால்டுவெல் , சி.யு.போப், வீரமாமுனிவர் போன்ற் அயலகச் சான்றோரும் தனித் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளனர்.
தனித்தமிழின் வளர்ச்சிக்கு  தமிழ்த் தென்றல் திரு.வி.க. கி.ஆ.பெ.விசுவநாதன் போன்ற பலரின் இதழியல் தொண்டும் மறக்கவியலாதவை. 

கடந்து நூற்றாண்டின் இணையற்ற பாவலர்கள் பாரதியும் பாரதிதாசனும் தங்களின் படைப்புகளின்வழி தனித்தமிழின் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர்.

“தாய்ப்பாலில் நஞ்செனவே
தமிழில்வட மொழி சேர்த்தார்
தவிர்த்தல் வேண்டும்.
தமிழ்ப் புலவர் தனித் தமிழில்
நாடகங்கள் படக்கதைகள் 
எழுத வேண்டும்“  எனத் தனது “தமிழியக்க“ நூலில் பாவேந்தர்  பகர்ந்துள்ளது நோக்கத் தக்கது.
தமிழ் வரலாற்றில் முதன்முறையாக வடசொல் ஆட்சிகளைத் தவிர்க்கும உணர்வோடு தனித்தமிழிலேயே எழுதும் முயற்சியில் இலக்கியங்களைப் படைத்த பெரும்பாவலர் பாரதிதாசன் என்று செக்.மொழியறிஞர் கமில்சுவலபில் கூறியுள்ளார் .
ஆனால் இன்று  தமிங்கிலம் தலைதூக்கிய நிலை. சமற்கிருதமும் இந்தியும் தலைமொழிகளாய்ப் புகும் நிலை. 

இப்படிக் காலங்காலமாய்  தமிழில் பிறமொழிக் கலப்பை நோக்குங்கால்        “ மெல்லத் தமிழினி சாகும் என்றந்த பேதை“ சொன்னதுபோல் எங்கே தமிழ்மொழி அழிந்து போகுமோ என்ற கவலையால் தமிழ்த்தாய் கண்ணீர் வடிப்பது  வேதனையளிப்பதாகவே உள்ளது.

இந்நிலை இப்படியே தொடர விடப்போகிறோமா? 
ஒரு மொழி அழியும்போது அம்மொழி பேசும் இனமுமல்லவா அழிந்துபடும்.
“இந்நிலைமாற வேண்டுமெனில்... 
பேச்சில் எழுத்தில்  இதழ்களில் , சின்னத்திரை, வண்ணத்திரை  காட்சி  ஊடகங்களில்,சமூக மின்னணு ஊடகங்களில்., பிறமொழிக் கலப்பில்லாத படைப்புகள் வரத் ்துறைதோரும் பரப்புரை மேற்கொள்வோம்”. 
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ,
 “தனித்தமிழ் இயக்கம் தொடர்வோம்” 

பிறமொழிப் பெயர்கள் தவிர்த்து 
“தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவோம்.”

 “தாய்மொழிவழி நம் குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்வோம்.” தாய்மொழிவழிச் சிந்தனையே பிறமொழி கற்றலுக்கு உதவும் .

“பிறமொழி நூல்களைத் தனித்தமிழில் மொழிபெயர்ப்போம்.”
தனித்தமிழில் பேசுவோம். 
தனித்தமிழ்ப்  படைப்புகளை உருவாக்குவோம். 
 தமிழ்த்தாயின் கண்ணீரைத் துடைப்போம். 
தமிழினம் காப்போம். 




Wednesday, October 26, 2016

யாருக்கு நல்லதுங்க?

25.10.2016 அன்று  கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி மற்றும் திராணிப்பட்டியில் கிராம சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செஸ்டாட், மற்றும் வேபாக் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட  
சுகாதார விழிப்புணர்வு முகமையின் நான்காவது நாள் நிகழ்வாக கல்லுப்பட்டி மற்றும் திராணி்ப்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கல்லுப்பட்டி ஊ.ஓ.தொடக்கப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திட்டத்தின் பயிற்சியாளர் திருமிகு உஷாநந்தினி, ஆர்.சுப்பிரமணியன், செஸ்டாட்ஸ்  வீரமுத்து , பாவலர் பொன்.கருப்பையா ஆகியோர், வீடுகளின் உள்ஒழுங்கு, வெளிப்புற நேர்த்தி, வீட்டுத் தோட்டம், கழிப்பறை ஆகியவற்றின் அடிப்படையில்  அனைத்து வீடுகளையும் பார்வையிட்டு சிறந்த பத்து வீடுகளைத் தேர்வு செய்தனர்.
தேர்வான வீடுகளுக்குப்  பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் பாடலை பாவலர் பொன்.க எழுதி, இசையுடன் பாடி மக்களைப் பாட வைத்தார்.

பாடல்
யாருக்கு நல்லதுங்க? - இது
யாருக்கு நல்லதுங்க?
நமக்கு நல்லதுங்க - இது
ஊருக்கு நல்லதுங்க

சோப்புப் போட்டுக் கையக்கழுவி
சுத்த மாக நாமிருந்தா                    -- யாருக்கு நல்லதுங்க?
கருத்த ஒடம்போ செவத்த ஒடம்போ
தினமும் குளிச்சு நாமிருந்தா    -- யாருக்கு நல்லதுங்க?

ஆடுமாடும் கட்டுத் தறியும் கோழிக் 
 கிடாப்பும் சுத்தமா இ ருந்தா           --யாருக்கு நல்லதுங்க?
மக்குற குப்பையும் மக்காத குப்பையும் 
தனித்தனியா பிரிச்சுப் போட்டா  -- யாருக்கு நல்லதுங்க?

மக்குன குப்பை எருவா மாறி
மளமளன்னு பயிரு வளந்தா         --யாருக்கு நல்லதுங்க?
வீட்டைச் சுத்தித் தோட்டம் போட்டு
விதவிதமாக் காய் வெளைஞ்சா  --யாருக்கு நல்லதுங்க?


தெருஓரத்துல மரங்க வளர்த்து
இளைப்பாற  நிழலைத்  தந்தா     --யாருக்கு நல்லதுங்க?
ஊரைச் சுத்திக் ்காடு வளர்த்து
ஒய்யாரமா பலன் கெடைச்சா   -- யாருக்கு நல்லதுங்க?


காய்ச்சல் தடுக்கும் கசப்பு மருந்தைக்
கண்ணைமூடிக் குடிச்சுக் கிட்டா  --யாருக்கு நல்லதுங்க?
கழிப்பறையை வீட்டுக்கு வீடு 
கட்டிநாம பயன் படுத்துனா  --யாருக்கு நல்லதுங்க?

யாருக்கு நல்லதுங்க? - அது 
நமக்கு நல்லதுங்க
யாருக்கு நல்லதுங்க - அது
ஊருக்கு நல்லதுங்க.

Sunday, October 23, 2016

வீதி கலை இலக்ககியக் களம் -32


இன்று வீதி கலை இலக்கியக் களம் -32 ஆவது நிகழ்வு புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரியில்  திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக  பாண்டிச்சேரி முனைவர் செல்வக்குமாரி அவர்களும், தோழர் பிரியா பாபு அவர்களும் கலந்து கொண்டனர்.

திருநங்கையர் பற்றிய சிறப்புக் கூட்டமாக அமைத்திருந்தனர்  கூட்ட அமைப்பாளர்கள் திருவாளர்கள் செல்வா மற்றும் மீரா செல்வகுமார் ஆகியோர்.

திருநங்கை பற்றிய கவிதைகள் அரங்கேறின. கவிஞர்  கீதா அவர்கள் சிறுகதை வாசிக்க  கருத்துகள் பகிர்வு நடந்தது.

திருநங்கையரின்  சமூக நிலைப்பாடு பற்றி முனைவர் செல்வக்குமாரி அவர்கள் உரையாற்றினார்,  தோழர் பிரியாபாபு நான் எவ்வாறு திருநங்கையானேன்?  திருநங்கையர் எவ்வாறு பாலின சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்பாக முகநூல் நண்பர்கள் திருநங்கை பற்றிப் பகிர்ந்த கவிதைகள் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சி முழுமையும்  காணொளிப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்    “ ஆணாகப்பிறந்து” என்ற பாடலை, 
பாவலர் பொன்.கருப்பையா எழுதி இசையமைத்து   அவரே பாடினார்.

பாடல்
ஆணாகப் பிறந்து பெண்ணாகி வாழும் 
நங்கையரே திருநங்கையரே
ஆணவம் தவிர்த்து அன்பினில்  தழைத்து
ஆற்றல் வாய்ந்ததிரு நங்கையரே

அர்ச்சுணன் சிகண்டிஉம் முன்னோடிகள்
அழகிய வரலாற்றுக் கண்ணாடிகள்
இரக்கமும் வலிமையும் இருக்கும் உம்மை
இரண்டும் கெட்டான்என எவன் சொன்னது?

விடைதேடும் இயற்கையின் விளைவுகளே
வேண்டுமென்றா வேடம் புனைந்து கொண்டீர்?
வளரிளம் பருவத்தின் மாற்றம் கண்டே 
வலியின் வலிதாங்கி மாற்றிக் கொண்டீர்.

நிசங்களின் வெளிச்சம் போனாலென்ன?
நிழலின் இருட்டினில் சிரித்துக் கொள்வீர்
உறவுகள் வெறுத்தும்மை ஒதுக்கியென்ன?
உலகெங்கும் உமக்குறவு பறந்திடுவீர்

பாகனின் துரட்டிவழி துதிக்கை நீட்டும்
பலமறியா யானைபோலா நீங்கள்?
பாவிகளின் பாரத்தை சுமத்தல்விட்டு
பணிசெய்வீர் பாலின பேதம்விட்டு.

Tuesday, September 27, 2016

வீதி கலை இலக்கியக் களம் - 31

25.09.2016 அன்று புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையல் ்கலைக் கல்லூரியில்  வீதி கலை இலக்கியக் களம் -31 ன் சிறப்பான கூட்டம் நடை பெற்றது.
கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், இலக்கியச் சொற்பொழிவு என அடுக்கடுக்கான நிகழ்வுகளில், இத்திங்களில் கவிதை நூல் வெளியீடு என்னும் புதிய பக்கமும் இணைந்து பொலிவு பெற்றது.

       வயது வேறுபாடற்ற இருபது கவிஞர்கள் ஒன்னுமில்லீங்கஎன்னும் தலைப்பில் எழுதிய கவிதைகளின்  தொகுப்பு ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது.

            இத்திங்கள் கூட்டத்தின் அமைப்பாளர்கள் கவிமதி சோலச்சி மற்றும் கவிஞர் மாலதி ஆகியோருடன் அச்சுப்பணியில் மலையப்பன் அவர்களின் பங்களிப்பும் சேர,  கவிதைத் தொகுப்பு நூல் மிகச்சிறப்பாக அமைந்தது.

அத்தொகுப்பினை வீதியின் மூத்த வரிச்சு என்பதால்,
 பாவலர் பொன்.கருப்பையா அவர்களை வெளியிட வைத்துப் பெருமைப் படுத்தினர் அமைப்பாளர்கள். அதனை கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொகுப்பின் அத்தனை கவிதைகளுமே முத்துச்சரமாய் அமைந்திருந்தது.. பெரும்பாலானவர்களின்  விருப்பத்திற்கிணங்கி, பாவலர் பொன்.க .  எழுதித் தானே இசையமைத்த  “ஒன்னுமில்லீங்க” என்ற பகுத்தறிவுச் சிந்தனைப் பாடலை இசையோடு பாடினார். 

இதோ அப்பாடல்...

அறிவை விரிவுசெய் அகிலமுன் வசமாகும் 
                அதிலொன்னும் குத்தமில்லே
ஆசையும் அச்சமும் அடிமைப் படுத்துதே
               அதுதானே ரொம்பத்தொல்லை.
பட்டம்  பதவியால் பணங்காசு சேக்கலாம் 
                பண்பாடு மாறலைங்க
பகுத்தறி  வில்லாத செயல்களால் வாழ்க்கைக்குப் 
                பயனொன்னும்  இல்லீங்க.                      -- அறிவை

கைக்குள்ளே உலகத்தைக் காட்டுற கணினிக்குள் 
               கைரேகை பாக்குறாங்க
கதிதேடிப் பஞ்சாங்கக் குழிக்குள்ளே வீழ்ந்துமே 
               கடனாளி  ஆகுறாங்க
கழுதைக்கும் தவளைக்கும் கல்யாணம்பண்ணியே 
               மழைபெய்ய வேண்டுறாங்க
கடவுளின்  செயலுன்னு  கைகட்டி நின்னாக்கப்  
                பலனொன்னும் இல்லீங்க                      -- அறிவை

சாதீயப் பொருத்தம் சரியில்லை  எனச்சொல்லிக்     
               காதலைக் கொல்லுறாங்க
சாதிகள் கடந்த காதல் மணங்கதான் 
               சமத்துவம் சொல்லுதுங்க
சாதிக்கத் துடிக்கும்  தலைமுறைக் கிடையுறு 
                சாதீயத் தொல்லையிங்க
சமூகம் மாறிட சமநீதி மலர்ந்திடும்
               தீதொன்னும் இல்லீங்க                              -- அறிவை

மனுதர்மம் தலைதூக்கும் மண்ணுக்குள் மனிதம் 
               முடங்கியே கிடக்குதுங்க
மனசுக்குள் கசிந்திடும் அன்பினால் மானுடம் 
               நிமிர்ந்தேதான் நடக்குமுங்க
மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும்  
               நிலையின்னும் மாறலைங்க
மதம்பிடித் தலையாமல் மனிதனாய் வாழ்ந்திடத்  
               தடையொன்னும் இல்லீங்க                   -- அறிவை

சாத்திரம் சகுனம் சம்பிரதாயங்கள்
               சலிச்சுமே போகலேங்க
சனியிடம் பெயர்ந்தும் குருவீடு மாறியும்
              சங்கடம் தீரலேங்க
முனிய  சாமியோ அய்யனா  ரப்பனோ
             துணைக்கேதும் வரலையேங்க
துணிவோடு இனியொரு புதுவிதி செய்திட
             தடையொன்னும் இல்லீங்க.                        -- அறிவை


Monday, September 26, 2016

புதிய கல்விக் கொள்கை - இசைப்பாடல்

 புதிதாக நடுவணரசு வகுக்க முனைந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், கல்வியாளர்களின், பொது மக்களின் கருத்தறியப்படாமல்  வெளியிடப்பட்டுள்ள உள்ளீடுகளின் பாதிப்பு மற்றும் முரண்களை நீக்கக் கோரி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த நிலையில் பாமர மக்களுக்கு அதன் எதிர்காலத் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு சென்றடைய, கலை வடிவங்களும் , இசைப்பாடல்களும்  ஓரளவு நல்ல பயனளிக்கும் என்பதால் இந்த இசைப்பாடலை ஆக்கியுள்ளேன்..

அறிவொளி காலத்து “ கடையாணி” பாடலின் இசையில் இப்பாடலைப் பாடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்
இசைப்பாடல்-  பாவலர் பொன்.கருப்பையா.

மாறவேணும் புதிய கல்விக் கொள்கைங்க - அதில
மக்கள்நலம் கொஞ்சங் கூட இல்லேங்க
தானானே தானேனன்ன தன்னன்னா - தானே
தானானே தானேனன்ன தன்னன்னா

சமத்துவத்தை மலர்த்துவதே கல்விதான் - அதைச்
சாத்தியமா ஆக்கும் பொதுப் பள்ளிதான்
சாதிக்கும் மாந்தரை உருவாக்கத்தான்- நாட்டில் 
சகலருக்கும் வேண்டும் புதிய கல்விதான்  -       மாறவேணும்

தேக்கமில்லாத் தேர்வு முறையில் மட்டுமே - எங்கும் 
தேடிக்கல்வித் தொடரும் வாய்ப்புக் கிட்டுமே
தோத்தவனை  தெரிஞ்ச தொழிலைச் செய்யவே - நெட்டித்
துரத்துவது குலக் கல்வித் திட்டமே.                 - மாறவேணும்

தேர்ச்சியிலே தரம் பிரித்தல் தர்மமா? - இது
தேசிய நீரோட்ட வர்க்க பேதமா?
வசதியாளர் பட்டம் பதவி ஆள்வதோ? - வாழ்வில்
வறுமைப் பட்டோர் துன்பத்திலே வீழ்வதோ?       -- மாறவேணும்

வேறுவேறு மொழிகள் பேசும் மண்ணிது - இதுல
வேதமொழிக் கல்வியை வலிந்து  திணிப்பதா?
வீரவர லாற்றை நூலில் மறைப்பதா? - மனுதர்ம
வேதகாலப் பழங் கதைகளை நுழைப்பதா?           - மாறவேணும்

அரசுப்  பள்ளி மாணவர்கள் குறைஞ்சிட்டா - அதை
அடுத்து தனியார் பள்ளியோடு இணைப்பதா?
ஆசிரியர்க்கு ஐந்தாண்டுக்கொரு மதிப்பீடா?- இதனால்
அரசுக்கல்வி அந்நிய  மயமா ஆகாதா?              - மாறவேணும்

மக்களைமேல் உயர்த்துவதே கல்வியின் எல்லை - தனியாய்
மாநிலத்தின் பட்டியலிலும் கல்விவர  வில்லை
மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயனிலாக் கொள்கை - மாற்றி
மலர்த்த வேண்டும் புதுசாஒரு கல்விக் கொள்கை. -- மாறவேணும்

Friday, September 2, 2016

இளம் விஞ்ஞானிகளுக்குத் தெம்பேற்றம்.

உடல்நலக்குறைவால் சில மாதங்கள் எந்த செயல்விளக்க நிகழ்ச்சிகளிலும் ஈடுபடாதிருந்த நான்,

01.09.2016 அன்று இனிய நண்பரும் ஸ்ரீ வெங்கடேசுவரா பதின்ம மேல்நிலைப்பள்ளித் தாளளருமான கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் அன்பான அழைப்பினை ஏற்று, 06.09.2016ல் அப்பள்ளியில் புதிய தலைமுறை நடத்த உள்ள “வீட்டுக்கொரு விஞ்ஞானி” நிகழ்ச்சிக்காக அப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாட்டுக் கருவிகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு செயல் விளக்கக் கருத்துப் பகிர்வு நிகழ்வினை நடத்தினேன்.

எனது முன்னாள் மாணவரும் இந்நாள் அப்பள்ளியின் துணை முதல்வருமாகிய திரு சு.குமாரவேல் என்னை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்பள்ளியில் இயக்குநர் கவிஞர் ஆரா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.

மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு அறிவியல் காலந்தோறும் வளர்ந்து வந்த நிரலை விளக்கி, இன்று உலகை மாற்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் மாணவர்களுக்கு சுவைபட விளக்கினேன்.

ஒரு விஞ்ஞானி உருவாக அவன் மனதில் முதலில் அறிவியல் உணர்வு தூண்டப்பட வேண்டும். அறிவியல் மனப்பான்மையினை உருவாக்க, பள்ளி, வீடு, சமூகம் அவனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பிறர் சொன்னவற்றையே்ா, படித்த, பார்த்தவற்றையே அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் 

ஏன், எதற்கு, எப்படி, எதனால் என்னும் கேள்விகளுக்கு அவற்றை உட்படுத்தி ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏற்றுக் கொள்ளும் அறிவியல் மனப்பான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தானே முயன்று, தடைகளையும், விமர்சனங்களையும் கடந்து, தன்னம்பிக்கையோடு. விடாமுயற்சியுடன் உழைப்பதாலேயே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் என்பதை, மாணவர்களுக்கு  சர் ஐசக் நியுட்டன், ஆர்க்கிமிடிஸ், கலிலியோ தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைச் சுட்டிக்காட்டித் தெம்பு ஊட்டினேன்.

ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் உள்ள அறிவியல் உண்மைகளை, எளிய அறிவியல் ஆய்வுகளைச் செய்துகாட்டி விளக்கிய போது,

 மாணவர்கள் ஆர்வமுடன்  உள்வாங்கிக் கொண்டதையும், தாங்களே முன்வந்து சில ஆய்வுகளை ஈடுபாட்டோடு செய்ததையும் கண்டு வியந்துபோனேன்..


உணவு இடைவேளை நேரம் கடந்தும் மாணவர்கள் சோர்வின்றித் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டது உண்மையில் அப்பள்ளியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி உருவாவது திண்ணம் என்ற மகிழ்வில் நிகழ்வினை நிறைவு செய்தேன்.

Monday, March 28, 2016

வீதியில் ஒதுங்கிய வரிகள்

“வீதி ” கலை இலக்கியக் களம் பற்றி எழுந்த எண்ணங்கள்
25 ஆவது  சிறப்பு நிகழ்வின் அடர்த்தி மற்றும் கால நெருக்கடி குறித்து அரங்கில் பகிரப்படாத வரிகள் இங்கே...


          

இதயமெழு  எண்ணங்களை ஈடேற்ற வாய்த்த களம்
          இலக்கிய தாகம் தீர்க்கும் இன்சுவை நீர்த்தடாகம்
கருத்துக் கதிர் விளைக்கும் கலைஇலக்கியக் கழனி
         கற்பனைச் சிறகடிக்கக் கைகொடுக்கும் காற்றுவெளி

பண்பாட்டுப் பயிர் விளையும் பசியநல் நாற்றங்கால்
         பல்சுவைத் திறன் வளர்க்கும் பயன்மிகு பயிற்சிக்கூடம்
தயக்கநடை பயில்வோரைத்  தாங்கித் தள்ளும் நடைவண்டி
          தளர்வினில்  சுகமளிக்கும் சுமைதாங்கி மேடைக்கல்

திறன்களைத் திரட்டித் தரும் தீஞ்சுவைத் தேன்கூடு
            திகட்டாத விருந்தளிக்கும் தெள்ளமுதக் கனிச்சோலை
வாடாது மணம் பரப்பும் வண்ணமலர்த் தோட்டம் - அது
            வெள்ளித் ்திங்கள் காணும் வேட்கைமிகு வீதிக்களம்.

Sunday, March 27, 2016

வீதி கலை இலக்கியக் களம் -25

வீதி கலை இலக்கியக் களத்தின்  25 ஆவது திங்கள்  சிறப்புக் கூட்டம் இன்று தி.பி 2047 மீனம் 14 ஆம் நாள் புதுக்கோட்டை நில அளவையர் சங்கக் கூட்ட அரங்கில் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆக்சுபோர்டு சுரேசு, பாவலர் பொன்.கருப்பையா, இரா.செயலெட்சுமி, கு.ம.திருப்பதி, ச.கத்தூரி ரெங்கன், பசீர்அலி ஆகியோர் முன்னிலையேற்றனர். 

வரவேற்பினை வைகறை கவிதைநடையில் வழங்கினார்.
வீதி கூட்ட அறிக்கையினை கவிஞர் மு.கீதா வழங்கினார்.
வீதியில் கவிஞர் ஆர்.நீலா எழுதிய அலைகளின் குரல்கள் என்னும் கவிதைத் தொகுப்பு நூலினை ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்கள் வெளியிட்டு பாராட்டுரை வழங்கினார். நூலின் முதல் பிரதியினை திரைப்படக் கலைஞர் பாலசக்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். வளரி இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்கள் நூல் மதிப்புரையாற்றினா்ர்,

சுரேசுமான்யா, குருநாதசுந்தரம், தூயன், மணிகண்டன், சலீல், ஆகியோர் வீதியில் தங்கள் அனுபவங்கள் பற்றி சிற்றுரை நிகழ்த்தினர்.
சச்சின், மாலதி, ரேவதி, சூரியாசுரேசு, பவல்ராசு, அமிர்தா தமிழ், சுகன்யாஞானசூரி, மீனாட்சிசுந்தரம், நாகநாதன், நிலாபாரதி, மகேசுவரி முருகபாரதி ஆகியோர் கவிதைகள் வழங்கினர்.

ஏற்புரையினை கவிஞர் நீலா வழங்கினார். வீதி நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஆய்ந்து வெளியிட்ட “புதுக்கோட்டை பாறை ஓவியங்கள்” ஆவணப்பட முன்னோட்டத்தினை செல்வா வெளியிட்டார். கவிஞர் ராசி பன்னீர்செல்வம் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியினை மகா.சுந்தர் மற்றும் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

பொன்.க, சோலச்சி,மற்றும் ஓவியா ஆகியோர் இசைப்பாடல்கள் வழங்கினர்.
ஓவியக்கவிதைக் கண்காட்சி சிறப்பாக அமைந்திருந்தது. அனைவருக்கும் இயற்கைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது,

இன்றைய வீதியில் எனது தொடக்கப்பாடல்

நினைப்பதை நல்லதாக நினைப்போம்- அதை
நேர்வழியில் செயல்படுத்தி முடிப்போம் 
சந்தேகம் கிளம்பி விட்டா - பல 
சலசலப்புக் குறுக்கில் வரும்
சாதிக்கிற நினைப்பையே தடுக்கும் - மனம்
சஞ்சலமாக் குழம்பி நம்மை முடக்கும்

துணிஞ்சு செய்யும் செயலதிலே 
தொடர்ந்துமே முன்னேற்றம் இருக்கும்
தோல்வி தன்னை நினைச் சுப்புட்டா
தொடக்கமே தடுமாறிக் குழப்பும்
ஏற்றம் தரும் வழிகளைப் பெருக்கு - உன்னை
எடறிவிடும் எண்ணங்களை நொறுக்கு
மாற்றமொன்றே உன்னுடைய பொறுப்பு - அதுக்கு
மனசில் பற்றவேணும் புதுநெருப்பு

தடைகடக்கும் நடை முறைதான்
தரணியில் மேம்பட்டு நெலைக்கும்
தரைபிளந்து விதை முளைக்கும் 
தாவரந்தான் விளைச்சலைப் பெருக்கும்
தனிக்காட்டு ராசாவா முழங்கு -
தடைக்கல்லை படிக்கட்டா மாற்று-ஏறித்
தலையாய வெற்றிகளை ஈட்டு

சாதனை  களத்த னையும்
சங்கடத்தைக் கடந்து வந்தவையே 
சாதித் திட்டமாந்  தர்களும்
சந்தித்த வேதனை எத்தனையோ
சுகமாக வாந்திடவா பொறந்தோம் - நிலவும்
சோர்வுகளைப் போக்கஏனோ மறந்தோம்
சோதனையை வென்று செயலாற்று - உலகம் 
சொந்தமுன்னு சொல்லுமுனைப் பார்த்து.

Monday, February 22, 2016

இல்லறத் துணைநல ஏற்பு விழாவில் ...

திருவள்ளுவராண்டு2047 கும்பம் 9ஆம் நாள்( 21.02.2016) 
மதுரை பாண்டியன் திருமண அரங்கில் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் தமிழர் நெறிவழி நடைபெற்ற ஒரு திருமண விழாவில்  பல புதுமைகள் அரங்கேறியமை மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அழைப்பிதழிலேயே  திருவள்ளுவர்,  பெரியார்,பாரதிதாசன், பாரதியார், வள்ளலார் ஆகியோரின் அமுத மொழிகள் அச்சேறி அழகு செய்தன.

இணைந்து இல்லறமேற்போர் பெயர்களின் முன் தாய் தந்தையரின் பெயர் முதலெழுத்துகள் தமிழிலிருந்தது, சமக்கிருத ஆண்டு, பட்சம், நட்சத்திரம், யோகம், லெக்கனம் என்பவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, சூழியல் நெறிவழி உறுதி செய்தவாறு  மணவினைகள் நடந்தேறியமை முதலான பல சிறப்புகளைக் காண முடிந்தது.

 மொய் தவிர்க்கப்பட்டதும் வருகையும் வாழ்த்துமே விலையுயர்ந்த பரிசு எனக் குறிப்பிடப்பட்டதும் ஒரு மாறுபாடாவே இருந்தது.

 மணநிகழ்விற்கு முன்னதாக செவிச்சுவையாக
 “வாழ்க்கை உவகையால் நிறைந்தினிப்பது திருமணத்திற்கு முன்பா? பின்பா?“ என்னும் தலைப்பில்  கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில் மதுக்கூர் இராமலிங்கம், மகாராசன், நிசா, சோதி ஆகியோர் பங்கேற்ற  நகைச்சுவை பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.

மணவினை  நாவை .சிவம் அவர்களால் தொடங்கப்பட்டு
 தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் அவர்களால் தமிழ் நெறிப்படி  மெய்விளக்கத்தோடு நடந்தமை விழாக்காண வருகைதந்தோரை 
 சிந்திக்கவே வைத்தது.

மணமகன், மணமகள் அழைப்பு என்னும் சடங்குகளும் ஆடம்பர அலங்காரங்களும் தவிர்க்கப்பட்டிருந்தன.   

அந்நிரலில் புதுமையாக மூடநம்பிக்கைகளைச் சாடும், அறிவியலா? அற்புதமா? என்னும் மெய்விளக்க நிகழ்ச்சி பாவலர் பொன்.க அவர்களால் நடத்திக் காட்டப்பட்டது.  பில்லி சூன்யம், பெண்களுக்குப்  பேயோட்டுவதாக நடக்கும் வன்முறைகள், சாதகம், கைரேகை பித்தலாட்டங்கள்  முதலிய  மூடநம்பிக்கைகளைச் சாடி  போலிச் சாமியார்களால் மக்கள் ஏமாறும் நிலையினை விளக்கியதோடு சில அற்புதங்கள் அறிவியல் அடிப்படையானவையே என்பதைச் செயல் விளக்கங்கள் மூலம் செய்து காட்டினார். 

வெறும் கையில் தங்கச் சங்கிலி, திருநீறு. குங்குமம் வரவழைத்தல், அறிவியலறிஞர்களின் பெயர்களை ஒலிக்க அறுந்த கயிறுகள் இணைதல்,  நீளங்கள் மாறும் கயிறுகள், நெய் சொரிய நெருப்பின்றி எரியும் காகிதக் குவியல், எலுமிச்சம்பழத்திற்குள் இரத்தம், தேங்காய்க்குள் மலர்ந்த முல்லை மலர்கள் வரவழைத்தல், நீரூற்றப்  பற்றி எரியும் தேங்காய்,  நிறம் மாறும் சீட்டுகள், உடலில் தேய்த்தும் சுடாத தீப்பந்தங்கள். சூடம் விழுங்குதல், முதலான  பல தந்திரக் காட்சிகள் விழாவிற்கு வந்திருந்தோர்க்கு அறிவு விருந்தாக அமைந்திருந்தது. 

பலகுரல் இளவல் புதுகை வினி அவர்களின் பலகுரல் நகைச்சுவைத் தோரணம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவுமாக அமைந்திருந்தது.

அந்நிகழ்வில் பாவலர் பொன்.க.,  எழுதி இசையமைத்துப் பாடிய 
          அறிவியல் கருத்தமைந்த பாடல் இதோ.....

அறிவியலின் வழியில்தானே மாற்றம் நடக்குது- அதன்
அடிப்படைதான் மக்கள் வாழ்வில் மலர்ச்சி கொடுக்குது
அறியாமை இருட்டு இன்னும் அப்பிக் கெடக்குது- அதை 
அகற்றுவதில்  நமக்கு ரொம்பப் பொறுப்பு இருக்குது     - அறிவியலின்

கட்டுச்சோறு கட்டை வண்டி பயணங்கள் போச்சு- இப்பக் 
களைப்பில்லாம பாட்டியும் உலகைச் சுத்திவரலாச்சு
கடுதாசியும் தந்தியும்கூட கைவிட்டுப் போச்சு - உள்ளங்
கைகளுக்கும் உலகைக் காணும் இணையம் வந்தாச்சு  -- அறிவியலின்

கூட்டத் துவைக்க மின்னணுப் பொறிகள் எங்கும் வந்தாச்சு - வீட்டுள்
கொதிப்பைக் குளிரைக் கட்டுப் படுத்த எந்திரமாச்சு
கொடுத்த வேலைமுடிச்சுக் கொடுக்க ரோபோக்களாச்சு - விரும்பும்
குழந்தையினைக் குளோனிங்கில் பெறவும் வழியும் கண்டாச்சு - அறிவியலின்

நிலாவிலே  காலடிவச்ச  கதை பழசாச்சு - அங்கே 
நிரந்தரமாக் குடியிருக்க வழியும் கண்டாச்சு
செவ்வாய்க் கோளின் ஆராய்ச்சியிலும் தெளிவு வந்தாச்சு - பெண்ணுக்கு
செவ்வாய்தோசத் தடைகள் தீரும் நிலமை வந்தாச்சு  -- அறிவியலின்

கிரகங்களால் கெடுதல் என்னும் சாதகப் பேச்சு - இப்ப
கிக்ஸ்போசான் விண்வெளி ஆய்வால் பொய்யின்னு ஆச்சு
அணுவியலின் தொழில் நுட்பங்கள் அனைத்திலுமாச்சு - இனிமே
அறிவியலே அகிலத்தை ஆளும்  நிலைஒசந் தாச்சு    -- அறிவியலின்