Monday, January 12, 2015

இளந்தென்றல் கலைமன்றம்-10ஆம் ஆண்டு பொங்கல் விழா.

            நான் வசிக்கும் புதுக்கோட்டை சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதியின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் குறிக்கோளுடனும்  இளந்தலைமுறையினரின் பல்திறன் மிளிர்த்தும் நோக்கோடும்,  இளந்தென்றல் கலைமன்றம் என ஒரு அமைப்பினை தி.பி.2036 ஆம் ஆண்டு சுறவம் முதல்நாள் (14.01.2006)ல் தோற்றுவித்து,  ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

          இளைய தலைமுறையினரிடம் பொதிந்து கிடக்கும் பல்வகைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அவர்களுக்கான பேச்சு, பாட்டு, கவிதை, ஓவியம். நடனம், விளையாட்டு ஆகிய போட்டிகளை நடத்தி அன்றைய நாளில் பொதுமேடையில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டி வருகிறோம்.

          இச்செயல்பாட்டில் இப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து  விழாவினை மேன்மேலும் சிறப்படையச் செய்து வரு்கின்றது.

          அவ்வகையில் இவ்வாண்டின் (10ஆம் ஆண்டு) தமிழர் திருநாளாம்  பொங்கல் விழாவினையொட்டி,   குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகள் 11.01.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பகுதி சாராத நடுவர்களைக் கொண்டு, குடியிருப்புப் பகுதியினை மூன்று பிரிவாகப் பிரித்து,  வண்ணக் கோலப்போட்டி நடைபெற்றது. அனைத்து இல்ல வாயில்களும் வண்ணக்கோலங்களால் மிளிர்ந்தது. தேர்வுசெய்வதில் நடுவர்களே பெருந்திகைப்படைந்தனர்.

          இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவர்க்கும் ஆறுதல் பரிசளிக்க விழாக்குழு முடிவுசெய்துள்ளது.

          எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2046 சுறவம் திங்கள் முதல்நாள்        ( 15.01.2015 ) காலை விளையாட்டு வீரர்கள் விளையாட்டுச் சுடரேந்தி நகர்வலம் வர உள்ளனர்.

        அதனைத் தொடர்ந்து  நடக்கத் தெரிந்த குழந்தைகளிலிருந்து நடைதளர்ந்த முதியவர் மற்றும்  மகளிர் பங்கேற்கும் பலவகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

           அன்று மாலை6.00 மணிக்குப் பொது மேடையில் பகுதிக் குழந்தைகளின்  மாற்றுடைப் போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன.

           அறிவுத்திறன் மற்றும்  உடல்திறன் போட்டிகளின் வெற்றி யாளர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு  அன்று மாலை நடைபெற உள்ளது.

           கடந்த ஆண்டு தொலைக்காட்சி புகழ் கவிஞர் நா.முத்துநிலவன் குழுவினர் பங்கேற்ற பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற்றது. 

இவ்வாண்டு   இராபர்ட்-புவனர் குழுவினரின் கிளாசிக் குழு திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழர் திருநாளைத் தரணியெங்கும் இதுபோலக் கொண்டாடுவோமே.



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

Post a Comment