Monday, December 8, 2014

22 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேசிய அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றக்குழு மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து , திசம்பர்த் திங்கள் 7,8, 9 ஆகிய நாள்களில் புதுக்கோட்டை லேணா விலக்கு மவுண்ட் சீயோன்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்  22ஆவது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நடத்தியது. மாநில அறிவியல் இயக்கத்துடன் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்திருந்தனர்.

எனது குடும்பத்தில் எனது தம்பி சுரேசைத் தொடர்ந்து பெயரன் பரிதி இளம்வழுதியின் இழப்பையும் அடுத்தடுத்து சந்தித்த துயரத்தில் கடந்த பல நாள்களாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாது இருந்த என்னை மாநாட்டு வரவேற்புக்குழுவில் இடம்பெறச் செய்தனர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாவட்டப் பொறுப்பாளர்கள். அந்த வகையில் நான் கலந்து கொண்ட நிகழ்வு இது.

தனிமனிதத் துயரினும் மேலாக மனித குலத்தையே அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் மற்றும் வெப்பநிலையைப்புரிந்து கொள்ளுதல் என்னும் கருப்பொருள் பற்றிய இம்மாநாட்டில் இயன்ற பங்கினை ஆற்றிட முனைந்தேன்.
திசம்பர் 6ஆம் நாள் தொடக்கவிழாவி்ல் “புவியைக் காத்திடும்” என்னும் பாடலுடன் எனது பணி தொடர்ந்தது. மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி அவர்கள் தலைமையிலும் மவுண்ட் சீயோன் கல்விக்குழுமத் தலைவர் திரு .ஜெயபரதன் செல்லையா அவர்கள் முன்னிலையிலும் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் அறிவியல் கண்காட்சியினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்..

அறிவியலறிஞர் த.வி.வெங்கடேசுவரன் அவர்களின் தொடக்க உரையினைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் அவர்களின் கருத்துரையும் கல்வியாளர்களின் வாழ்த்துரையும் நடைபெற்றது.
“நீங்களும் விஞ்ஞானியாகலாம்” என்னும் அமர்வில் இளம் விஞ்ஞானிகளுடன் முது விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.

மாநாட்டில்32 மாவட்டங்களலிருந்து 253 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 1600 குழந்தை விஞ்ஞானிகளும் 200 வழிகாட்டி ஆசிரியர்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பெற்றோர், பார்வையாளர் என 2000 பேர் பங்குபெற்ற மிகப் பெரிய மாநாடாக இருந்தது.
இரண்டாம் நாள் பிற்பகல்  40 கருத்தாளர் பங்குபெற்ற 15 இணை அமர்வுகள் நடை பெற்றன.

அதில் “மந்திரமா தந்திரமா?” என்னும் தலைப்பில் நான் கருத்தாளராக இரண்டு மணி நேரம் இளம் விஞ்ஞானிகளுடன் கருத்துகளைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது.
ஆசிரியர் கருத்தரங்கத்தினை அடுத்து த.அ.இ. மாநிலச் செயலாளர் திரு அமலராசன் அவர்கள் தலைமையில் மேநாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆலோசகர் முனைவர்  பொன்ராஜ் அவர்கள் அறிவியல் பேருரையும் மாணவர் சந்திப்பும் நடந்தது.
அந்நிகழ்வின் தொடக்கத்தில் “காலநிலை மாறிப்போச்சுங்க“ என்னும் பாடலைப்  பாடும் வாய்ப்பு எனக்களிக்கப்பட்டது.

பாடல் பின்னர்...


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கருத்தாளராக கருத்துக்களை பரிமாறிக் கொண்டமைக்கும், பாடலைப் பாடியமையும் மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
நன்றி

மணிச்சுடர் said...

நன்றி நண்பரே.

Post a Comment