Tuesday, October 7, 2014

மூன்று நூல்கள் வெளியீட்டு விழா.

தி.பி.2045 கன்னித்திங்கள் பத்தொன்பதாம் நாள் (05.10.2014) ஞாயிறு மாலையும் முன்னிரவும் ஒரு மகத்தான பொழுதுகளாயின.... ஆம் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” “புதிய மரபுகள்“., ” கம்பன் தமிழும் கணினித் தமிழும்” ஆகிய மூன்று முத்தான நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வுதான் காரணம்.

ஒரு படைப்பாளி ஒரே நேரத்தில் இப்படி சமூக அக்கறை கொண்ட மூன்று நூல்களை வெளியிட எத்தனை முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும் என்பது  எனது முதல் வியப்பு. 

அடுத்து ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கிய வாதிகள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் இயக்க வாதிகள், சமூகச் சிந்தனையாளர்கள். படைப்பாளியின் ஆசிரியர்கள், அவரின் மாணவர்கள். கிராமங்களிலிருந்தும், அயல் மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் திரளாக வந்திருந்தது மேலும் வியப்பு.

அரங்கில் அமர இடமின்றி இறுதிவரை நின்றவாறே விழாவைச் சுவைத்த காட்சியும் இந்த நிகழ்வில்தான் கண்டேன்.

இப்படிப் பல வியப்புகள் இருந்தாலும் எனக்குள் எழுந்த பெருவியப்பு  அரசுப்பள்ளிகளின் மேன்மை, தமிழ்வழிக் கல்வி,  வணிகமயமாகும் கல்விக்கு எதிரான கருத்துகள் அடங்கிய நூல்களை சில  மெட்ரிக் கல்வி வள்ளல்கள்! கட்டுக் கட்டாய் வாங்கியதுதான்.

ஒருவேளை இந்த நூல்களைப் படித்தபின்னர் சமச்சீர் கல்விக்கும்,தமிழ் வழிக் கல்விக்கும்  அவர்களின் ஆதரவுகள் பெருகினாலும் நல்லதுதானே.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

விழாவினை நானும் நேரில் கண்டு மகிழ்ந்தேன் ஐயா

Post a Comment