Monday, April 28, 2014

வீதி கலை இலக்கிய அமைப்பு - ஏப்ரல்-14


           இன்று 20.04.2014 முற்பகல் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் “வீதி” கலை இலக்கிய அமைப்பின் ஏப்ரல் திங்கள் கூட்டம் முனைவர் நா. அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

         கவிஞர் செ.சுவாதி அவர்கள் சந்தக் கவிதையில் வரவேற்புரை யாற்றினார்.
         பாவலர் பொன்.க. அவர்கள் கடந்த மார்ச்சு திங்கள் கூட்ட அறிக்கையினை வாசித்தார். 'மோசம்' என்னும் தலைப்பில முனைவர் வீ.கே.கஸதூரிநாதன் அவர்களும் 'தொலைதூரத்தை அறிதல்' என்னும் தலைப்பில் சுரேசு மான்யா அவர்களும் கவிதைகள் வழங்கினர்.

          2975 லும் என்னும் அறிவியல் நுட்ப கவிதை இழையோடிய காதல் சிறுகதையினை கவிஞர் இராசி.பன்னீர் செல்வன் அவர்கள் வழங்கினா்ர்.

         “பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” என்னும் தலைப்பில் ஊடறு- பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு நூல் பற்றி கவிஞர் மு.கீதா அவர்கள் நூல் திறனாய்வு செய்தார்.

        சிசிலியன் ஆங்கில புதினத்தின் திரைத் தழுவல்களாக வந்த “பீமா” “சுப்பிரமணியபுரம்“ ஆகிய திரைப்படங்களின் ஒப்பீட்டாய்வினை திரு கஸ்தூரி ரெங்கன் அவர்கள் வழங்கினார்.

        “தாழ்ந்த என் தாயகமே“ என்னும் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலினை திரு கும.திருப்பதி அவர்கள் அறிமுகம் செய்தார்.

         நிறைவுரையாற்றிய முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்“ வீதி” இலக்கிய அமைப்பின் வளர்ச்சிக்கான கருத்துகளை வகுத்தளித்தார். 

        திருமதி பிரியதர்சினி அவர்கள் நன்றி கூறினார்.
இத்திங்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்திருந்த கவிஞர்கள் கீதா, சுவாதி அவர்களின் பெருமுயற்சியால் புதுகையின் புகழ்மிக்க இலக்கிய ஆர்வலர்கள் நிறையப் பேர் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. 

Friday, April 11, 2014

பொன்மாரி கல்வியியல் கல்லூரியில்...

11.04.2014 அன்று பொம்மாடிமலை பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் “கற்பது கற்கண்டே“ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி மேலாண்மை இயக்குநர் அ.லெ.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையேற்க தமிழ்த்துறைப் பேராசிரியர் செல்லையாஅவர்கள் வரவேற்புரை வழங்கினார். பேரா.தயாகரன் அவர்கள் முன்னிலையேற்றார்

 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத்தலைவர்  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு, தமிழ் ஆகிய பாடங்களை எளிய , செலவில்லாத கற்பித்தல் துணைக் கருவிகள் தயாரித்துக் கற்பித்தலை எவ்வாறு சுவைமிக்கதாக ஆக்குவது எனப் பயிற்சியளித்தார்.

தமிழில் சொற்படிக்கட்டு அமைத்தல்.  தொடரும் சொல்லாட்சி முறை. சுழல் அட்டைகள் ,சிந்தனைச் சிறுகதைகள். மனப்பாடப் பகுதிகளை இசையுடன் பாடிக் கற்பித்தல் முதலியவற்றில் பயிற்சி யளித்தார்.

கணக்கு கற்பித்தலில் மாணவர்களை ஈர்க்கத்தக்க  கூட்டல் கழித்தல். பெருக்கல், வகுத்தல் களில் எளிய வழிமுறைகள், வேடிக்கைக் கணக்குகள், புதிர்க் கணக்குகள் . வடிகங்கள், கனஉருவங்கள் ஆகியன வரைதலும் தயாரித்தலும் ஆகியன பற்றி செயல்முறை விளக்கமளித்தார்.

அறிவியலில் எளிய, செலவில்லாத, பயன்படுத்தி ஒதுக்கும் எழுதுபொருள்கள், குடுவைகள், உறிஞ்சு குழல்கள், பலூன்கள் ஆகியவற்றைக் கொண்டு. காற்று, வெப்பம், உராய்வு, பரப்பு் இ்ழுவி்சை , சடத்துவம், குவிய தூரம், வேதிமாற்றம், மின்னியல், ஒத்த இயக்க உறுப்புகளின் செயலாக்கம் ஆகிய பகுதிகளைச் சுவைபடக் கற்பிக்கும் உத்திகளை கல்வியியல் மாணவர்களுக்கு செய்முறை விளக்கங்களோடு பயிற்சியளித்தார்.

இரண்டு மணி நேரம் நடந்த இப்பயிற்சியில் அனைத்து கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்றமை சிறப்பு.
நிறைவில் கல்வியியல் கல்லூரி முதல்வர் பேரா.இராசலிங்கம் நன்றி கூறினார்.