Tuesday, March 11, 2014

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி பயிற்சி முகாம்.

              புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்  தமிழாசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டை இராணியார் உயர்நிலைப் பள்ளியி்ல் நடைபெற்றது.

             இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக முனைவர் துரைக்குமரன் மற்றும் குருநாதசுந்தரம் ஆகியோர் செயல்பட்டனர். வல்லுநராக பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.

            நெருங்கி வரும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் தமிழ்த்தேர்வில்  அதிக மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தமிழாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பற்றி பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

            தமிழ் முதற்றாளில் எளிமையாக அதிக மதிப்பெண் எடுக்க மாணவர்களை ஆயத்தம் செய்யும் வழிமுறைகளை கருத்தாளர் தமிழ்த்திரு குருநாத சுந்தரம் அவர்கள் விளக்கினார். 

          தமிழ் இரண்டாம் தாள் வினாக்களுக்கு எவ்வாறு விடையளிப்பது, அதிக மதிப்பெண் பெறவைப்பது பற்றி கருத்தாளர் முனைவர்  துரைக்குமரன் எளிமையாக விளக்கினார்.

         தேர்வுக் காலத்தில்  தமிழாசிரியர்கள் மாணவர்களைக் கையாள வேண்டிய வழி முறைகள் , பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி    வல்லுநர் பாவலர் பொன்.கருப்பையா 25 கருத்துருக்களை நெறிமுறைகளாக பயில்வோர்க்கு வழங்கினார்.

         இப்பயிற்சியில் மாணவர்கள் தேர்வு பயமின்றி, பதற்றப்படாமல், நம்மால் முடியும் என்னும் நம்பிக்கையோடு முனைந்து படித்தால் முதலிடத்தைப் பெறலாம் என்பதை இசைப்பாடலாக பாவலர் பொன்.க . வழங்கினார்.

                          நம்பிக்கையோடு முயல்க... நாளை உனது.

நம்பிக்கையின்    வழியில்தானே      முயற்சி     பெருகிடும்
நெம்பித்தள்ளும் முயற்சியிலுந்தன் வெற்றி   அமைந்திடும்
படிக்கப் படிக்கத்   தானேபாடம்       எளிதில்    புரிந்திடும் - நீ
பயிற்சிசெய்யச்  செய்யஎதுவும்      மனதில்    பதிந்திடும் -- நம்பிக்கையின்

பின்தேங்கி    இருப்பவர்கண்டு       நிறைவு   கொள்வதோ?
முன்னோக்கிப் பாய்ந்துவெற்றிக் கனியை  வெல்லவா
முந்திநிற்கும் மாணவர்கண்டு      சங்கடம்    எதுக்கு? -அவரை
முந்தநீயும்  முனைந்துவிட்டால் முதலிடம்   உனக்கு  -- நம்பிக்கையின்

நாளைநாளை   என்றுபடிக்க    நாளைக்   கடத்தலோ
நாலுநாளில்     தேர்வுக்குரிய    பாடம்       சுமக்கவோ?
வேளைதோறும் பசிக்குஉணவை வயிறு  மறுக்குமோ?  -தினம்
காலைமாலைக்  கற்கஇறுதித்   தேர்வு   கசக்குமோ?  -- நம்பிக்கையின்

தேர்வுக்காலம்    நெருங்கும்போது    பதற்றம்  கூடாது
தேர்ந்தபகுதி      திரும்பப்படிக்கக்     கலக்கம்  வாராது
தேவையற்ற    கேளிக்கைவிருந்து   நாடல்     ஆகாது- நீ
தெளிந்தமன     மகிழ்ச்சியோடு    தேர்வினை  நாடு     -- நம்பிக்கையின்

வேண்டுதல்கள்   மட்டுமேஉன்னை   உயர்த்தி   விடாது
தூண்டுதல்கள்    இல்லாவிளக்கோ   சுடரைத்   தராது
தோண்டுமளவே ஊற்றும்நீரைத்  தரும்  தவறாது - நீ
ஆண்டுமுழுதும்  கற்றதைமீட்கப்   பயமும்   வராது.  -- நம்பிக்கையின்

கடைசிநேரப்     பரபரப்பில்உன்   கவனம்     சிதறுமே
காலப்பகுப்பில்  விடைமுழுதும்  எழுத        முடியுமே 
கருத்துகளைத்  தெளிவா்ய்எழுதும்  பாங்கு போதுமே - உன்னைக்
களிப்புடனே   முதலிடத்தில்  கொண்டு    சேர்க்குமே. -- நம்பிக்கையின் 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னம்பிக்கை தரும் அற்புதமான வரிகள்...

வாழ்த்துக்கள் ஐயா...

Post a Comment