Monday, March 3, 2014

இளங்கோவடிகள் இலக்கிய மன்ற இரண்டாமாண்டு விழா.

புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் இரண்டாமாண்டு சிலப்பதிகாரவிழா தி.பி.2045 கும்பம் 17,18,தேதிகளில்         ( 01.03.2014-02.03.2014) புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

கும்பம் கஎ ஆம் நாள் (1.03.2014 ) காரிக்கிழமை ( சனிக்கிழமை ) மாலை கலைவளர்மணி எம்.பி.எஸ் கருணாகரன் குழுவினரின் மங்கல இசையோடு விழாத் தொடங்கியது. செல்வி சு.சுபாசினி திங்களைப் போற்றுதும் வாழ்த்துப்பா இசைக்க, இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் தலைமையேற்க. கம்பன் கழகத் தலைவர் தமிழ்த்திரு ரெ.இராமையா, உலகத்திருக்குறள் கழக மாவட்டத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திருமதியர் மயில்சுந்தரி வைரமாணிக்கம், தருமாம்பாள் மலையப்பன், சத்தியபாமா இராமுக்கண்ணு, வள்ளியம்மைசுப்பிரமணியன், திருமதி சுந்தரராசன் ஆகியோர் மங்கலச்சுடரேற்றினர்.

 மன்றத்தின் துணைத் தலைவர் தமிழ்த்திரு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நாவுக்கரசர் முனைவர் சோ.சத்தியசீலன்  பற்றிய அறிமுக உரையினை புலவர் மா.நாகூர்அவர்கள் அளித்தார். முனைவர் சத்தியசீலன் அவர்கள் தனது தொடக்க உரையில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் சீர்மைகளைச் சாறுபிழிந்து சுவைஞர்களுக்கு வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலப் பொருளாளர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையிலும், மெ.இராமச்சந்திரன் செட்டியார்  அவர்கள் முன்னிலையிலும்  புதுக்கோட்டை சாய் நாட்டியாலயா வின் “சிலப்பதிகார நாட்டிய நாடகம்” நடைபெற்றது.   நாட்டிய நாடகம் மூலம் சிலம்பின் சிறந்த காட்சிகளை பார்வையாளர்களுக்குப் பருகத் தந்த நாட்டியக் குழுவினரைப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் பாராட்டிப் புகழ்ந்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.புலவர் கு.ம.திருப்பதி அவர்கள் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க, திருமிகு கு.சுப்பிரமணியன் அவர்கள்  நன்றியுரையாற்றினார்.

இரண்டாம் நாள் கும்பம் கஅ (18) 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் தலைமையில் “சிலப்பதிகாரச் சிறப்பியல்புகள்” உரையரங்கம் நடைபெற்றது. 

செந்தூரான் கல்விக்குழுமத் தலைவர் தமிழ்த்திரு இராம.வைரவன், மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா ஆகியோர் முன்னிலையேற்றனர்.இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு மு.இராமுக்கண்ணு அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிலம்பொலி செல்லப்பனார் பற்றிய அறிமுகத்தை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் துணைத் தலைவர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் நிகழ்த்தினார். 

 இளங்கோவடிகளுக்கு நாடெங்கும் மன்றங்கள் பல்க வேண்டும், சிலப்பதிகாரக் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டும் எனத் தனது கருத்துரையில் சிலம்பொலியார் கூறினார். விரைவில் புதுக்கோட்டையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைந்தது போல இளங்கோவடிகளுக்கும் சிலை அமைக்கப்படும் என்றும், கண்ணகிக்குக் கோட்டம் ஒன்று அமைக்கப் படும் என்றும் இளங்கோவடிகள் மன்றத் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் கூறினார்.

தொடர்ந்து முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் “ சிலம்பின் எச்சரிக்கை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.உலகத் திருக்குறள் பேரவையின் மகளிரணித் தலைவர் திருமதி சந்திரா ரவீந்திரன் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்தளிக்க, புலவர் மகா.சுந்தர் அவர்களின் நன்றியுரையோடு காலை நிகழ்வுகள் நிறைவுற்றன.

மாலை புதுகை இசைப்பள்ளி தந்திக்கருவி வித்தகர் திருமிகு அம்பிகாபிரசாத் அவர்கள் வயலின் இசைக்க, கலைமுதுமணி புதுகை கே.இராசா, திருச்சி கோபு நாகராசன் ஆகியோர் மிருதங்கம் இசைக்க சிறப்பானதொரு இசையரங்கம் நடைபெற்றது. 

நிகழ்விற்கு ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால் செட்டியார் அவர்கள் முன்னிலையேற்றார்.

அந்நிகழ்வினையடுத்து வெங்கடேசுவரா கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஆர்.எம்.வி.கதிரேசன் அவர்கள் தலைமையிலும் குழந்தைகள்நல மருத்துவர் ச.இராமதாசு, எம்.ஆர்.எம். கல்விநிறுவனத் தலைவர் திருமிகு எம்.ஆர்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும்  “ நெஞ்சு அணி” என்னும் தலைப்பில் வாணியம்பாடி கவியருவி முனைவர் தி.மு.அப்துல்காதர் அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.

 இன்றையச் சமூகத்திற்கு சிலப்பதிகாரம் காட்டும் நெறிகள் எவ்வாறு நெஞ்சணிகளாக அமைந்துள்ளன என்பதை அரங்கு நிறைந்தோர் ஆழக்கொள்ளும் தகைமையில் அவரது உரைவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது..வரவேற்புரையினை முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் வழங்க, நன்றியுரையினை சிலட்டூர் இராமலிங்கம் அவர்கள் வழங்கினார்

விழாவின் நிறைவு நிகழ்வாக புதுக்கோட்டை வர்த்தகர் கழகத்தின் கவுரவத்  தலைவர் திருமிகு ஆர் சேவியர், பொன்மாரி கல்வி நிறுவனங்களின்  அறங்காவலர் திருமிகு அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் “சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஊழ்வினையா? ஆள்வினையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

ஊழ்வினையே என்னும அணியில் நகைச்சுவை அருவி இரா.மாது, கற்பனைக் களஞ்சிய நங்கை ரேணுகாதேவி ஆகியோரும், ஆள்வினையே என்னும்அணியில் சன்மார்க்க சீலர ஜோதி இராமலிங்கம் இசைப் பேரரசி ஜோதிலெட்சுமி ஆகியோரும் வாதிட்டனர்.

அமுதசுரபி இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் முனைவர் திருப்புர் குமரன் அவர்கள் நடுவராக இருந்து சீர்மை செய்தார். இருதரப்பு வாதங்களையும் ஒப்புநோக்கி “ சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஆள்வினையைவிட ஊழ்வினையே” எனத் தீர்ப்பளித்தார். பட்டிமன்றக் குழுவினரையும் முன்னிலையாளர்களையும் பார்வையாளர்களையும் திருமிகு  கோ.தனபதி அவர்கள் வரவேற்க, திருமதி ஜானகிகணேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியினை பாவலர் பொன். கருப்பையா சீராகத் தொகுத்தளித்தார்.  

இரண்டு நாள் நிகழ்வுகளுக்கும் புதுக்கோட்டையின் பல்வேறு சமூக, கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தமிழ்ச் சான்றோர்களும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தது பெருமைக்குரியதாக இருந்தது.

விழாவிற்கு வருகை தந்தோரில் பலர் இளங்கோவடிகள் மன்றத்தில் தங்களை வாழ்நாள் உறுப்பினராக, ஆண்டு உறுப்பினராக இணைத்துக் கொண்டது விழாக்குழுவினருக்குப் பெருமையாக அமைந்தது.



1 comment:

Kasthuri Rengan said...

அழைப்பு வந்தும் விழாவிற்கு வரமுடியாத சூழல் ..
அந்தக் குறையை தங்கள் பதிவு போக்கிவிட்டது..
நன்றி அய்யா

Post a Comment