Sunday, March 30, 2014

வீதி இலக்கியக் கூட்டம் மார்ச் -2014

           புதுக்கோட்டை “வீதி” இலக்கியக் கூட்டம் இன்று 30.03.2014 முற்பகல் புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையல் கலைக் கல்லூரியி்ல் சிறப்பாக நடைபெற்றது. 

           புலவர் மா.நாகூர்  அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்க, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் முன்னிலையேற்றார்.                           திரு குருநாதசுந்தரம் அவர்கள் வரவேற்றார்.

“கரிசல் தவம்” என்னும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய சிறுகதையினை திரு குருநாதசுந்தரம் படைத்து அளிக்க, அக்கதை பற்றிய கருத்துப் பகிர்வு நடந்தது. சிறுகதையின் சிறப்புகளும் முரண்களும் விவாதிக்கப்பட்டன..

“நான்சியும் நானும்” என்னும் திருமதி வள்ளிக்கண்ணு அவர்களின்   சிறுகதையும் வாசிக்கப்பட்டது.  
 படைப்பாளிகள் பாராட்டப் பட்டனர்.

 புலவர் மா.நாகூர்அவர்களின்  “ என்ன செய்வது?” எனும் கவிதையும், கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்களின் “எச்சில்”  எனும் கவிதையும் வீதி யில் பகரப்பட்டு பாராட்டப் பட்டது.

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் “இலவசங்கள் யாருக்காக?” என்னும் நிகழ்கால சமூகஅரசியல் தாக்கங்களோடு கூடிய கட்டுரையினை படைத்தளித்தார். பதிவு பாராட்டிற்குரியது

கவிஞர் மு.கீதா அவர்கள் அருந்ததிய மக்களின் அவலம் பற்றிய தனது கவிதையோடு , தான் படித்த மலர்வதியின் “தூப்புக்காரி” மற்றும் பாமாவின் “கருக்கு” ஆகிய புதினங்களையும் ஒப்பிட்டு விளிம்பு நிலை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய கருத்தினைப் பதிவு செய்தார்.
ஒப்பீடு சிறப்பாக இருந்தது.

முனைவர் துரைக்குமரன்அவர்கள்  யோசி, ஏழைதாசன், புதுகைத் தென்றல், காக்கைச் சிறகினிலே, ஆனந்தசோதி, இனிய உதயம், ஆகிய திங்களிதழ்களையும், திண்ணை, பதிவுகள், அதிகாலை, வல்லினம், தங்கமீன், ஊடறு, கவிதைச் சங்கமம், முத்துக்கமலம் முதலிய இணைய இதழ்களையும் அறிமுகம் செய்தார்.

நிறைவாக அனைத்து நிரல்களிலும் கலந்து கொண்டவர்களுக்கும் , படைப்புகள் அளித்தவர்களுக்கும் முனைவர் துரைக்குமரன்அவர்கள்  நன்றி கூறினார்.

Monday, March 24, 2014

நேரு இளையோர் மையம்- தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

          21.03.2014 முதல் 24.03.2014 வரை நான்கு நாள்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளகாகத்தில் நடைபெற்ற நேரு இளையோர் மைய  தென்மாநிலங்களின் தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் மூன்றாம் நாள் 23.03.2014 அன்று பாவலர்  பொன்.கருப்பையா அவர்களின் மணிச்சுடர் கலைக் கூடம் சார்பாக “தமிழக நாட்டுப்புறக் கலைகளும் பண்பாடும்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

                     ஓய்வு பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

                 முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

                  கருநாடக மாநிலம் தும்கூர், ஆந்திரமாநிலம் விசாகப் பட்டிணம், பாண்டிச்சேரி காரைக்கால், கேரளமாநிலம் பாலக்காடு, தமிழ்நாடு திருச்சி,புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 120 நேரு இளையோர் மைய இளைஞர்கள் முகாமில் பயிற்சி பெற வந்திருந்தனர்.

                 தமிழக நாட்டுப் புற நிகழ்த்துக் கலைகளான கும்மி, கோலாட்டம். கரகம். காவடியாட்டம். ஒயில், துகிலாட்டம், ஆகிய வற்றுள் பொதிந்திருக்கும் மக்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியன பற்றிய தெம்மாங்குப் பாடல்களைப் பாவலர் பொன்.கருப்பையா மற்றும் சிதம்பர ஈசுவரன் ஆகியோர்,திருநாளுர் சண்முகம் தவில் இசையுடன் பாடியும் ஆடியும் பயிற்சியளித்தனர்.

                தொழில்முறை, தொழுமுறைப் பாடல்களின் கருத்தினை ஆங்கிலத்தில் பொன்.க விளக்கியதும் சிதம்பர ஈசுவரன் பெண் குரலில் பாடியதும் கருத்தரங்கப் பயிற்சியாளர்களை மிகவும் ஈர்த்தது.

             ஒவ்வொரு மக்களிசைப் பாடலின்போதும்  முகமையர் மேடையேறி ஆடியது அவர்களின் ஆர்வ மிகுதியை வெளிப்படுத்தியது.

            தேசிய ஒருமைப்பாடு, இளைஞர் பண்பாடு. மனிதநேயம், வாழ்வியல் மேன்மை குறித்த பாடல்களை முகமையர் மிகுந்த ஈடுபாட்டோடு சுவைத்துக் கற்றனர்.

Tuesday, March 11, 2014

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி பயிற்சி முகாம்.

              புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்  தமிழாசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டை இராணியார் உயர்நிலைப் பள்ளியி்ல் நடைபெற்றது.

             இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக முனைவர் துரைக்குமரன் மற்றும் குருநாதசுந்தரம் ஆகியோர் செயல்பட்டனர். வல்லுநராக பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.

            நெருங்கி வரும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் தமிழ்த்தேர்வில்  அதிக மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தமிழாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பற்றி பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

            தமிழ் முதற்றாளில் எளிமையாக அதிக மதிப்பெண் எடுக்க மாணவர்களை ஆயத்தம் செய்யும் வழிமுறைகளை கருத்தாளர் தமிழ்த்திரு குருநாத சுந்தரம் அவர்கள் விளக்கினார். 

          தமிழ் இரண்டாம் தாள் வினாக்களுக்கு எவ்வாறு விடையளிப்பது, அதிக மதிப்பெண் பெறவைப்பது பற்றி கருத்தாளர் முனைவர்  துரைக்குமரன் எளிமையாக விளக்கினார்.

         தேர்வுக் காலத்தில்  தமிழாசிரியர்கள் மாணவர்களைக் கையாள வேண்டிய வழி முறைகள் , பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி    வல்லுநர் பாவலர் பொன்.கருப்பையா 25 கருத்துருக்களை நெறிமுறைகளாக பயில்வோர்க்கு வழங்கினார்.

         இப்பயிற்சியில் மாணவர்கள் தேர்வு பயமின்றி, பதற்றப்படாமல், நம்மால் முடியும் என்னும் நம்பிக்கையோடு முனைந்து படித்தால் முதலிடத்தைப் பெறலாம் என்பதை இசைப்பாடலாக பாவலர் பொன்.க . வழங்கினார்.

                          நம்பிக்கையோடு முயல்க... நாளை உனது.

நம்பிக்கையின்    வழியில்தானே      முயற்சி     பெருகிடும்
நெம்பித்தள்ளும் முயற்சியிலுந்தன் வெற்றி   அமைந்திடும்
படிக்கப் படிக்கத்   தானேபாடம்       எளிதில்    புரிந்திடும் - நீ
பயிற்சிசெய்யச்  செய்யஎதுவும்      மனதில்    பதிந்திடும் -- நம்பிக்கையின்

பின்தேங்கி    இருப்பவர்கண்டு       நிறைவு   கொள்வதோ?
முன்னோக்கிப் பாய்ந்துவெற்றிக் கனியை  வெல்லவா
முந்திநிற்கும் மாணவர்கண்டு      சங்கடம்    எதுக்கு? -அவரை
முந்தநீயும்  முனைந்துவிட்டால் முதலிடம்   உனக்கு  -- நம்பிக்கையின்

நாளைநாளை   என்றுபடிக்க    நாளைக்   கடத்தலோ
நாலுநாளில்     தேர்வுக்குரிய    பாடம்       சுமக்கவோ?
வேளைதோறும் பசிக்குஉணவை வயிறு  மறுக்குமோ?  -தினம்
காலைமாலைக்  கற்கஇறுதித்   தேர்வு   கசக்குமோ?  -- நம்பிக்கையின்

தேர்வுக்காலம்    நெருங்கும்போது    பதற்றம்  கூடாது
தேர்ந்தபகுதி      திரும்பப்படிக்கக்     கலக்கம்  வாராது
தேவையற்ற    கேளிக்கைவிருந்து   நாடல்     ஆகாது- நீ
தெளிந்தமன     மகிழ்ச்சியோடு    தேர்வினை  நாடு     -- நம்பிக்கையின்

வேண்டுதல்கள்   மட்டுமேஉன்னை   உயர்த்தி   விடாது
தூண்டுதல்கள்    இல்லாவிளக்கோ   சுடரைத்   தராது
தோண்டுமளவே ஊற்றும்நீரைத்  தரும்  தவறாது - நீ
ஆண்டுமுழுதும்  கற்றதைமீட்கப்   பயமும்   வராது.  -- நம்பிக்கையின்

கடைசிநேரப்     பரபரப்பில்உன்   கவனம்     சிதறுமே
காலப்பகுப்பில்  விடைமுழுதும்  எழுத        முடியுமே 
கருத்துகளைத்  தெளிவா்ய்எழுதும்  பாங்கு போதுமே - உன்னைக்
களிப்புடனே   முதலிடத்தில்  கொண்டு    சேர்க்குமே. -- நம்பிக்கையின் 

Sunday, March 9, 2014

தமிழகத் தமிழாசிரியர் கழக முப்பெரும் விழாவில்...

                                தி.பி.2045 கும்பம் 25 ( 09.03.2014) ஞாயிறன்று புதுக்கோட்டை எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா அதன் மாவ்ட்டத் தலைவர் திருமிகு கு.ம.திருப்பதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

                பாவலர் பொன்.க அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து ,கழக மாவட்டச் செயலாளர் திருமிகு சி.குருநாதசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

               கழகத்தின் மேனாள் மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையேற்றனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார் அவர் தனது உரையில் தமிழ்மொழியின் சிறப்புகளை  விளக்கி, தாய்மொழியாம் தமிழ்மொழிவழிச் சிந்திப்பவரே வாழ்க்கையின் மேன்மைகளை அடைவர் என்பதை வலியுறுத்தினார்.

 தொடக்க உரையினைத் தொடர்ந்து கழகத் தமிழ்த்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற  660 மாணவர்களுக்குக் கேடயங்களும், பாவேந்தர், பாரதியார் நூல்களும் பரிசுகளாக வழங்கப்பெற்றன.

             பரிசுகளை  முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வழங்கினார். அவர் தனது பாராட்டுரையி்ல்  அதிகம் படிப்பறி வில்லாத பெற்றோரின் தமிழ்வழிப் பயிலும் குழந்தைகளே தமிழில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளமையினைத் தன்னையேச் சான்றுகாட்டி எந்த மொழியினைக்  கற்றாலும் தமிழ்மொழியில் பயிலுவோரே வாழ்க்கைப் பாடத்தை முழுமையாக அறிந்து கொள்பவர்களாக உள்ளனர் என்பதை மாணவர் மனங்கொள்ள எடுத்துரைத்தார்.

        அவரைத் தொடர்ந்து சுப.காந்திநாதன், முத்தமிழ்ப் பாசறை திருமிகு நெ.இரா.சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

       அதனையடுத்து  தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வேர்ச்சொல் ஆய்வறிஞர் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்னும் தலைப்பில்  விழாப் பேருரையாற்றினார். அனைத்து மொழிகளும் தமிழ்மொழியின் வேர்ச் சொல்லில் இருந்து பகிர்ந்து கொண்ட சொற்களைச் சான்றுகாட்டி தமிழ்வழிக் கற்றலே  எதிர்கால இளைய தலைமுறையினை உலக அரங்கில் உயர்த்தும் என்பதைப் பதிவு செய்தார்.

            அவரைத் தொடர்ந்து  தோழமைச் சங்களின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு ரெ.ரெங்கராசு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அமைப்புச் செயலாளர் திருமிகு ஆ.மணிகண்டன் , பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் திருமிகு மு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      விழாவின் முன் நிகழ்வாக, பாவலர் பொன்.கருப்பையா, செல்வி சுபாசினி ஆகியோரின்  தமிழிசைப் பாடல்கள்  இசைநிகழ்ச்சி நடைபெற்றது

            உணவு இடைவேளைக்குப் பின்னர் பள்ளி அளவில் தமிழ்ப் பாடத்தில் உயர்நிலை எய்திய மாணவர்களுக்கு வலுஊட்டல் பயிற்சியினை முனைவர் சு.துரைக்குமரன், முனைவர் பெரி.சே.இளங்கோவன் ஆகியோர் அளித்தனர்.

           அடுத்ததாக பணிஓய்வு பெற்ற கழகச் செம்மல்கள், அரங்கில் சிறப்பிக்கப் பட்டனர்.அவர்களை மாநில மதிப்பியல் தலைவர் புலவர் சந்தானமூர்த்தி அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

         தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற கழகச் செம்மல்களுக்குப் பாராட்டு செய்யப் பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு இளங்கோவடிவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

          முப்பெரும் விழாவினை அரங்கு நிறைந்த ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும்  சுவைத்து மகிழ்ந்தனர். 

          விழா நிகழ்வினை மாநில செயற்குழு உறுப்பினர் திரு மகா.சுந்தர் அழகுற தொகுத்து வழங்கினார்.

        கழக மாவட்டப் பொருளாளர் திருமிகு சந்தான ஆரோக்கியநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார். 

         விழா ஏற்பாடுகளை கழக மாவட்ட, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Saturday, March 8, 2014

நினைவஞ்சலிக் கூட்டம்


புதுக்கோட்டை திருக்குறள் தலைவராக இருந்து கடந்த 05.02.2014 அன்று இயற்கை எய்திய திரு பா.இராமையா அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் 08.03.2014 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடந்தது.

திருக்குறள் கழகமும், புதுக்கோட்டை மூத்த குடிமக்கள் அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச்செம்மல் திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையேற்று மறைந்த திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா அவர்களின் திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்தார்.

தமிழிசைச் சங்கத் தலைவர் திருமிகு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் பா.இராமையா அவர்களின் சிறப்புகளைத் தனது  அறிமுக உரையில்  கூறினார் .

காலமான பா.இராமையா அவர்கள் தனது இல்லத்தின் உப்பரிகைப் பகுதியினைத் தமிழ்ப்பணிக்காக பாலா தமிழரங்கம் எனப் பெயரிட்டு தொடர்ந்து  திங்கள் தோறும் அவ்வரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவுகள் நடத்தியமை, அவ்வரங்கம் முழுமையும் போற்றத்தகு தமிழறிஞர்களின் திருவுருவப் படங்கள் பொதிந்துள்ளமை, தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழிசைச் சங்கம், மூத்தகுடிமக்கள் அமைப்பு ஆகியவற்றை நிறுவியமை, ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டுவிழாக்களை தமிழ் மணம்கமழ நடத்தியமை, திருக்குறள் மாநாடு நடத்தியமை, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி திருச்சியோடு இணைக்கப்பட்டதைக் கண்டித்து இயக்கம் நடத்தியமை, தமிழ் செம்மொழியாக்கப்பட நடைப்பயணம் மேற்கொண்டமை.  

2010ல் சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தோடு இணைந்து சங்க இலக்கியப் பயிலரங்கத்தினை பத்துநாள்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தியமை, திருக்குறளின் தேர்ந்த 330 திருக்குறள்களுக்கு ஆங்கில உரை எழுதி நூலாக வெளியிட்டமை, அறமும் புறமும் என்னும் நூல் வெளியிட்டமை, புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைப் புரந்தமை, அனைத்திற்கும் மேலாக புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே திருவள்ளுவர் சிலையினை அமைப்புக்குழுத் தலைவராக இருந்து நிறுவியமை ஆகிய அன்னாரது சிறப்புகளை நிகழ்விற்கு வருகை தந்திருந்த புதுக்கோட்டையின் இலக்கிய சமூக அமைப்பினர் நினைவு கூர்ந்து அஞ்சலி உரையாற்றினர்.

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் திருமிகு.ரெ.இராமையா, இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு இராமுக்கண்ணு, உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டனை நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, புதுக்கோட்டை வர்த்தகக்கழக கவுரவத் தலைவர் திருமிகு இரா.சேவியர், உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு சண்முக பழனியப்பன், திலகவதியார் திருவருள் ஆதினத் தலைவர் திருமிகு தயானந்த சந்திரசேகரன்,  புலவர் துரை.மதிவாணன், ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால்செட்டியார், திருக்குறள் கழகப் பொதுச் செயலாளர் திருமிகு வே.இராமதாசு, மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா, சர்வசித் அறக்கட்டளையின் தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு,  இலக்கியப் பேச்சாளர்கள் தஞ்சை வி.விடுதலை வேந்தன், செயசீலன், மதுரை பத்திரிகையாளர் திருமிகு தி.அரப்பா,  முனைவர் தா.மணி, முனைவர் சு.மாதவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், வரலாற்றுப் பேரவை முனைவர் இராசாமுகம்மது, திருவள்ளுவர் மன்றத்தலைவர் திருமிகு மா.கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் இலக்கிய மன்றத் தலைவர் திருமிகு முகேசு , திரு ஆரோக்கியசாமி, தொழிலதிபர்கள்  திரு மைக்கேல்  ஏ.வி.எம் .நல்லையா.நட்புறவு இயக்கத் தலைவர் திரு முத்துச்சாமி ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்.

புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலிகளைச் செலுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்குறள் கழக இணைச் செயலாளர் திரு மா.மீனாட்சி சுந்தரம், பாவலர் பொன்.க ஆகியோர் செய்திருந்தனர். திருக்குறள் கழகப் பொருளாளர் திருமிகு கோ.கோவிந்தசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Wednesday, March 5, 2014

சேவைக்குப் பாராட்டு

புதுக்கோட்டை மத்திய சுழற்கழகமும்.புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகமும் இணைந்து 04.03.2014 அன்று சுழற்கழக அரங்கத்தில் ஆளுநரின் அலுவல் சார்ந்த வருகைக் கூட்டத்தினை நடத்தியது.

                 அந்நிகழ்வில் இரண்டு அமைப்புகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

                பல துறைகளிலும் செயற்கரிய சேவையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

                புதுக்கோட்டையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதரவற்று இறந்த, கோரப்படாத 149 உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து பெற்று முறையாக நல்லடக்கம் செய்தும், 

              அகவை முதிர்ந்த முதியோர்களுக்கு இல்லங்களிலேயே சென்று மருத்துவ உதவிகள் செய்தும், 

               நடக்க இயலாத நோய்வாய்ப்பட்டவர்களை ஆம்புலன்சு வண்டி மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் வரும் சர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளை சிறந்த சேவை நிறுவனமாகப் பாராட்டப் பட்டது

              அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மு.சரவணன், தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு, செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, அறங்காவலர் திரு.அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் சுழற்கழக ஆளுநர்  ரொட்டேரியன் கோபால் அவர்கள் வழங்கிய அவ்விருதினை பலத்த கையொலிகளுக்கிடையே பெற்றனர். 

Monday, March 3, 2014

இளங்கோவடிகள் இலக்கிய மன்ற இரண்டாமாண்டு விழா.

புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் இரண்டாமாண்டு சிலப்பதிகாரவிழா தி.பி.2045 கும்பம் 17,18,தேதிகளில்         ( 01.03.2014-02.03.2014) புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

கும்பம் கஎ ஆம் நாள் (1.03.2014 ) காரிக்கிழமை ( சனிக்கிழமை ) மாலை கலைவளர்மணி எம்.பி.எஸ் கருணாகரன் குழுவினரின் மங்கல இசையோடு விழாத் தொடங்கியது. செல்வி சு.சுபாசினி திங்களைப் போற்றுதும் வாழ்த்துப்பா இசைக்க, இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் தலைமையேற்க. கம்பன் கழகத் தலைவர் தமிழ்த்திரு ரெ.இராமையா, உலகத்திருக்குறள் கழக மாவட்டத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திருமதியர் மயில்சுந்தரி வைரமாணிக்கம், தருமாம்பாள் மலையப்பன், சத்தியபாமா இராமுக்கண்ணு, வள்ளியம்மைசுப்பிரமணியன், திருமதி சுந்தரராசன் ஆகியோர் மங்கலச்சுடரேற்றினர்.

 மன்றத்தின் துணைத் தலைவர் தமிழ்த்திரு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நாவுக்கரசர் முனைவர் சோ.சத்தியசீலன்  பற்றிய அறிமுக உரையினை புலவர் மா.நாகூர்அவர்கள் அளித்தார். முனைவர் சத்தியசீலன் அவர்கள் தனது தொடக்க உரையில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் சீர்மைகளைச் சாறுபிழிந்து சுவைஞர்களுக்கு வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலப் பொருளாளர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையிலும், மெ.இராமச்சந்திரன் செட்டியார்  அவர்கள் முன்னிலையிலும்  புதுக்கோட்டை சாய் நாட்டியாலயா வின் “சிலப்பதிகார நாட்டிய நாடகம்” நடைபெற்றது.   நாட்டிய நாடகம் மூலம் சிலம்பின் சிறந்த காட்சிகளை பார்வையாளர்களுக்குப் பருகத் தந்த நாட்டியக் குழுவினரைப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் பாராட்டிப் புகழ்ந்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.புலவர் கு.ம.திருப்பதி அவர்கள் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க, திருமிகு கு.சுப்பிரமணியன் அவர்கள்  நன்றியுரையாற்றினார்.

இரண்டாம் நாள் கும்பம் கஅ (18) 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் தலைமையில் “சிலப்பதிகாரச் சிறப்பியல்புகள்” உரையரங்கம் நடைபெற்றது. 

செந்தூரான் கல்விக்குழுமத் தலைவர் தமிழ்த்திரு இராம.வைரவன், மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா ஆகியோர் முன்னிலையேற்றனர்.இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு மு.இராமுக்கண்ணு அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிலம்பொலி செல்லப்பனார் பற்றிய அறிமுகத்தை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் துணைத் தலைவர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் நிகழ்த்தினார். 

 இளங்கோவடிகளுக்கு நாடெங்கும் மன்றங்கள் பல்க வேண்டும், சிலப்பதிகாரக் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டும் எனத் தனது கருத்துரையில் சிலம்பொலியார் கூறினார். விரைவில் புதுக்கோட்டையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைந்தது போல இளங்கோவடிகளுக்கும் சிலை அமைக்கப்படும் என்றும், கண்ணகிக்குக் கோட்டம் ஒன்று அமைக்கப் படும் என்றும் இளங்கோவடிகள் மன்றத் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் கூறினார்.

தொடர்ந்து முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் “ சிலம்பின் எச்சரிக்கை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.உலகத் திருக்குறள் பேரவையின் மகளிரணித் தலைவர் திருமதி சந்திரா ரவீந்திரன் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்தளிக்க, புலவர் மகா.சுந்தர் அவர்களின் நன்றியுரையோடு காலை நிகழ்வுகள் நிறைவுற்றன.

மாலை புதுகை இசைப்பள்ளி தந்திக்கருவி வித்தகர் திருமிகு அம்பிகாபிரசாத் அவர்கள் வயலின் இசைக்க, கலைமுதுமணி புதுகை கே.இராசா, திருச்சி கோபு நாகராசன் ஆகியோர் மிருதங்கம் இசைக்க சிறப்பானதொரு இசையரங்கம் நடைபெற்றது. 

நிகழ்விற்கு ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால் செட்டியார் அவர்கள் முன்னிலையேற்றார்.

அந்நிகழ்வினையடுத்து வெங்கடேசுவரா கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஆர்.எம்.வி.கதிரேசன் அவர்கள் தலைமையிலும் குழந்தைகள்நல மருத்துவர் ச.இராமதாசு, எம்.ஆர்.எம். கல்விநிறுவனத் தலைவர் திருமிகு எம்.ஆர்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும்  “ நெஞ்சு அணி” என்னும் தலைப்பில் வாணியம்பாடி கவியருவி முனைவர் தி.மு.அப்துல்காதர் அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.

 இன்றையச் சமூகத்திற்கு சிலப்பதிகாரம் காட்டும் நெறிகள் எவ்வாறு நெஞ்சணிகளாக அமைந்துள்ளன என்பதை அரங்கு நிறைந்தோர் ஆழக்கொள்ளும் தகைமையில் அவரது உரைவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது..வரவேற்புரையினை முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் வழங்க, நன்றியுரையினை சிலட்டூர் இராமலிங்கம் அவர்கள் வழங்கினார்

விழாவின் நிறைவு நிகழ்வாக புதுக்கோட்டை வர்த்தகர் கழகத்தின் கவுரவத்  தலைவர் திருமிகு ஆர் சேவியர், பொன்மாரி கல்வி நிறுவனங்களின்  அறங்காவலர் திருமிகு அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் “சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஊழ்வினையா? ஆள்வினையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

ஊழ்வினையே என்னும அணியில் நகைச்சுவை அருவி இரா.மாது, கற்பனைக் களஞ்சிய நங்கை ரேணுகாதேவி ஆகியோரும், ஆள்வினையே என்னும்அணியில் சன்மார்க்க சீலர ஜோதி இராமலிங்கம் இசைப் பேரரசி ஜோதிலெட்சுமி ஆகியோரும் வாதிட்டனர்.

அமுதசுரபி இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் முனைவர் திருப்புர் குமரன் அவர்கள் நடுவராக இருந்து சீர்மை செய்தார். இருதரப்பு வாதங்களையும் ஒப்புநோக்கி “ சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஆள்வினையைவிட ஊழ்வினையே” எனத் தீர்ப்பளித்தார். பட்டிமன்றக் குழுவினரையும் முன்னிலையாளர்களையும் பார்வையாளர்களையும் திருமிகு  கோ.தனபதி அவர்கள் வரவேற்க, திருமதி ஜானகிகணேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியினை பாவலர் பொன். கருப்பையா சீராகத் தொகுத்தளித்தார்.  

இரண்டு நாள் நிகழ்வுகளுக்கும் புதுக்கோட்டையின் பல்வேறு சமூக, கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தமிழ்ச் சான்றோர்களும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தது பெருமைக்குரியதாக இருந்தது.

விழாவிற்கு வருகை தந்தோரில் பலர் இளங்கோவடிகள் மன்றத்தில் தங்களை வாழ்நாள் உறுப்பினராக, ஆண்டு உறுப்பினராக இணைத்துக் கொண்டது விழாக்குழுவினருக்குப் பெருமையாக அமைந்தது.