Wednesday, February 26, 2014

சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள்.

பிப்பிரவரி 28 தேசிய அறிவியல் நாளையொட்டி 26.02.2014 அன்று புதுக்கோட்டை சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை வளர என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையும் எளிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் முறைகளும் பற்றிய செயல் விளக்கங்கள் அளித்தார்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்று ஆசிரியர்கள் செயல்வழிக் கல்வியினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக்
கூறினார்.

கருத்துரையாற்றிய பாவலர் பொன்.க. பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் புதிய உத்திகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால்  பள்ளிவயதில் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.

செயல்வழி கற்பித்தல் மாணவர்களைத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடச் செய்யும். ஒவ்வொரு  ஆசிரியரும் கற்பித்தல் துணைக் கருவிகளைப் பயன்படுத்துதலும்  மாணவர்களை  செய்து பார்க்க வாய்ப்பளிப்பதும்  அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.

அறிவியல் மனப்பான்மை வளர, ஆக்கப் புர்வமான செயல்கள் பெருகும். அறிவியலை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் நாட்டின் சமூக, பொருளாதார நிலை மேம்படும் என்பதை வலியுறுத்திய அவர் செலவில்லாத, குறைந்த செலவிலான கற்பித்தல் துணைக்கருவிகளைத் தயாரிக்கும் முறைகளைக் கல்வியியல் மாணவர்களுக்கு செயல்விளக்கமாகச் செய்து காட்டினார்.

ஏறத்தாழ மூன்றுமணிநேரம் நடந்த இக்கருத்தரங்கில்  பேராசிரியர்களும் கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுத் தாங்களாக முன்வந்து சில ஆய்வுகளைச் செய்தமை பாராட்டிற்குரியதாக இருந்தது..

Thursday, February 6, 2014

திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.

புதுக்கோட்டை அண்ணலார் பு.அ. சுப்பிரமணியனார் அவர்களால் தொடங்கப்பட்ட திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்த திரு.பா.இராமையா அவர்கள் 06.02.2014 அன்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி என் போன்ற தமிழ் உணர்வாளர்களையும் சமூகச் சிந்தனையாளர்களையும் பெரிதும் பாதித்து விட்டது.

 இந்தியன் வங்கி மேலாளர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .  புதுக்கோட்டை வடக்கு அரச வீதியில் தனது வசிப்பிட உப்பரிகையில் “பாலா தமிழரங்கு“ என ஒரு அரங்கினை அமைத்து, கடந்த 1999லிருந்து திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்து  திங்கள் கூட்டங்களை தொடர்ந்து நடத்தித்  தமிழ்ச்சான்றோர்களை அழைத்து கருத்துரையாற்றச் செய்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்.

அதே அரங்கில் மூத்த குடிமக்கள் அமைப்பினையும் நிறுவி, தமிழிசைச் சங்கத்தினையும் இயக்கி வந்தவர்.

அவ்வரங்கு முழுமையும் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்த  சான்றோர்களின் ஒளிப்படங்களைப் பரப்பி மிளிரச் செய்தவர்.

கடந்த 2010 திசம்பர்த் திங்களில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு திருக்குறள் கழகத்தையும் இணைத்து பத்து நாள்கள் “சங்க இலக்கியப் பயிலரங்கத்” தினை கலை இலக்கியச் சுவையோடு நடத்தியவர்.

அன்னாரின் அருமுயற்சியால் புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே உருவாகி  உயர்ந்து நிற்கும் “ திருவள்ளுவர் சிலை “ அவரைக் காலமெல்லாம் நினைக்கத் தூண்டும் ..

ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டு விழாவினை கலை இலக்கிய நிகழ்வுகளோடு நடத்தி சிறந்த தமிழறிஞர்களுக்குக் “ குறள்நெறிச் செம்மல்“ விருதுகளை வழங்கி  வந்த அவர் கடந்த  23.11.2013 ல் திருக்குறள் கழகத்தின்        59 ஆம்  ஆண்டுவிழாவினை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை வைத்து, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பொ.திராவிடமணி அவர்களுக்கு “அண்ணலார்-சி.இலக்குவனார் குறள்நெறிச் செம்மல் விருதினை“ வழங்கிச் சிறப்பித்தார்.

திருக்குறளின் பால் தீவிர ஆர்வமுடைய இவர் “ திருக்குறள் ஆங்கில உரை விளக்கம்“ மற்றும் “ அறமும் புறமும்” ஆகிய இரு நூல்களைப் படைத்து அவற்றை சென்னை ஊடகவியலார் திரு.க.அய்யநாதன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்.

 தமிழியச் சிந்தனையும் பகுத்தறிவுச் சீர்மையும் கொண்டு  தன் வாழ்நாள் முழுவதும் தமிழின மேம்பாட்டிற்காக உழைத்த அன்னாரது மறைவு புதுக்கோட்டை இலக்கிய வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

Saturday, February 1, 2014

நாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.

01.02.2014 அன்று புதுக்கோட்டை அழகம்மாள் புரத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு “முதலுதவி பற்றிய விழிப்புணர்வு” கருத்துரையினைச் செயல் விளக்கத்தோடு முகமையர்க்கு நடத்தினார்.


இயற்கைச் சீற்றங்கள், பேரிடர், வருமுன்னர் காத்தல், பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டியன, விபத்து, பேரிடர்களில் பாதிக்கப் பட்டோர்க்குச் செய்ய வேண்டிய முதலுதவி ஆகியன பற்றி நடப்பியல் சான்றுகளுடன் விளக்கமளிக்கப் பட்டது.

மூர்ச்சையடைந்தவரை  இயல்பு நிலைக்குக் கொணர்தல், சி.பி.ஆர் என்னும் மார்பழுத்த சிகிச்சை , செயற்கைச் சுவாசமளித்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழிமுறைகள்,  எலும்பு முறிவுகளின் வகைகளும் அவற்றிற்கான கட்டுகளும், முதலுதவியில் பயன்படும் முடிச்சுகள், தீக்காயம் பட்டோர்க்கான முதலுதவி, நீரில் மூழ்கியவரை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப்பட்டோரை தூக்கிச் செல்லும் முறைகள், நச்சுக்கடிகள், மின்விபத்துகளுக்கான முதலுதவி முதலானவை செயல் விளக்கங்களோடு மாணவியர்க்கு பயிற்றுவிக்கப் பட்டது.

கதை, பாடல், நகைச்சுவையோடான இந்நிகழ்வில் முகமையர் சிறிதும் சோர்வின்றி ஈடுபாட்டுடன் பங்கேற்றமை சிறப்பாக இருந்தது.