Friday, January 31, 2014

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை விழிப்புணர்வு பரப்புரை

30.01.2014 அன்று புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் , தேசிய விவசாயம்  மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியுடன் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும வளர்ச்சி ஆய்வு மையம் இணைந்து வங்கிச் சேவைகள் குறித்த கிராம அளவிலான விழிப்புணர்வு பரப்புரை முகாமினை நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.மனோகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர்                                           திரு துரை.குமரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நபார்டு வங்கி  மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. எஸ்.சோமசுந்தரம் அவர்கள் கருத்துரையாற்றினார்.

வங்கிச் சேவைகள் குறித்த பாடல்களுடன் பாவலர் பொன்.கருப்பையா மக்களிடையே பரப்புரை நிகழ்த்தினார.

ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் திரு.எஸ்.சந்துரு, செஸ்டாட்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு எல்.பிரபாகரன், இந்தியன் வங்கி மேலாளர் திரு.சி.வி.என்.ஜனார்தன், இந்தியன் ஓவர்சீஸ வங்கி மேலாளர் திரு ஆர். இராமநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 



செஸ்டாட்ஸ் மேலாளர் திரு வீரமுத்து அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பகுதி மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கினார்.

Monday, January 27, 2014

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை.

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதுக்கோட்டை அறிவியல் , தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியுடன் இணைந்து கடந்த இருவாரங்களாகப் புதுக்கோட்டையின் பல சிற்றூர்களில் முகாம்களை நடத்திவருகிறது.
அவ்வகையில் இன்று (27.01.2014) ஆவுடையார் கோயி்ல் ஒன்றியம் துஞ்சனூர் கிராமத்தில் விழிப்புணர்வு பரப்புரை முகாம் நடைபெற்றது.
கரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவி திருமதி இராஜேசுவரி தலைமையேற்றார்.
ஆவுடையார் கோயில் அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஜெயந்தி வரவேற்புரையாற்றினார்.
செஸ்டாட்ஸ் மேலாளர் திரு மா.வீரமுத்து  வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.
அவர் தனது உரையில் கிராமப்புற வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, கிராமப்புற மக்கள் வங்கிகளில் கணக்குத் தொடங்கவேண்டியதன் அவசியம், சிக்கன வாழ்க்கையும் சேமிப்பும், வங்கிகளில் வரவு-செலவு செய்தல், வங்கித் தொடர்பாளர்களை அணுகுதலும் அவரது சேவையினை பயன்படுத்தலும், சிறுதொழில், வேளாண்தொழில், மேற்படிப்பு, கட்டுமானப் பணிகள் முதலானவற்றிற்கு வங்கிகள் மூலம் கடன் பெறும் வழிமுறைகள், வங்கிக்கடன்களைத் திரும்பக் கட்டுதலும் தொழில் மேம்பாட்டிற்கு புதியகடன்கள் பெறுதலும் முதலான கருத்துகளைக் கதை, பாடல் மூலம் நகைச்சுவையாக மக்களுக்கு விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து கரூர் கனரா வங்கி மேலாளர் திரு கார்த்திக் தனது கிளை வங்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கியுள்ள கடன்கள், மக்கள் சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கலந்துரையாடல் மூலம் விளக்கினார்.

சிறப்புரையாற்றிய  நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு சோமசுந்தரம்  கிராமத்து மகளிர் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்

நிறைவாக அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் திரு ஆ.செல்வராசு நன்றி கூறினார்.
இம்முகாமில் வங்கிக் கடன் மூலம் எத்தகைய தொழில்களைத் தொடங்கலாம் என்பது பற்றி பாவலர் பொன்.க எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

சிறுதொழில் குறுதொழில் சுயமாகத் தொடங்கிட
                                                         நாடுங்கள் வங்கிகளை
செய்கின்ற தொழிலினில் வருமானம் பெருக்கிட
                                                      செயல்திட்டம் போடுங்களே
பதினெட்டு வயசுக்கு மேலுள்ள யாவரும்
                                                        பயன்பெறும் வகையினிலே
கடன்தந்து உதவிட வங்கிகள் இருக்குது 
                                                        உடன்அதை நாடுங்களே

சுயதொழில் தொடங்கிடுங்கள் - அதன்வழி
சோர்வின்றி உயர்ந்திடுங்கள்                                           -- சிறுதொழில்


கைத்தறி நெசவையும் கம்மியர் தொழிலையும்                                                                                     கடன்பெற்றுத் தொடங்கிடலாம்
தையல்கடை வைக்கத் தச்சுத் தொழில்செய்யத்                                                                                                            தடையின்றிக் கடன்பெறலாம்
முறுக்குத் தொழில்செஞ்சும் முன்னேற வழியுண்டு  
                                                   முனைந்துமே இறங்கிடுங்கள்
மூங்கில்பாய் முடைஞ்சு முறுக்கிக் கயிறுசெய்ய
                                                        முறையாகக் கடன்பெற்லாம்
                                                                                                      -- சிறுதொழில்

அனுபவம் இருக்கின்றத் தொழிலினைத் தொடங்கிட
                                                        ஆர்வமாய் முன்வருக
அதற்கான அறிவினைப் பெறவுமே அடிப்படைப்        
                                                         பயிற்சியை மேற்கொள்ளுக
இருக்கின்ற பகுதியில் சுயதொழில்மேற்கொள்ள 
                                                         இடம்பொருள் காட்டிடுக
ஈட்டிடும் வருவாயில் கடன்கட்டிச் சேமித்து
                                                         ஏற்றமாய் வாழ்ந்திடுக.
                                                                                                     -- சிறுதொழில்

Thursday, January 23, 2014

புகையில்லாப் போகி - துளிர் இல்ல நிகழ்வு

புதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் 13.01.2014 அன்று துளிர் இல்ல மாணவர்கள் “ புகையில்லாப் போகி ” நிகழ்வினை ஊர்வலம் மற்றும் ஓவியப் போட்டிகளுடன் கொண்டாடினர்.

நிகழ்வில் துளிர் இல்லக் குழந்தைகளுடன் பாவலர் பொன்.க. மற்றும் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள்.

இடப்பக்கம் திருப்பு

Sunday, January 19, 2014

திருவள்ளுவர் நற்பணி மன்ற விழா

புதுக்கோட்டை மச்சுவாடி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் 16ஆம் ஆண்டு விழா 19.01.2014 அன்று வெள்ளி அரங்கில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற மக்கள் கலைவிழாவில் “பாரதிகலைக்குழுவினர்” வழங்கிய மாத்தியோசி  பல்சுவை நிகழ்ச்சியினை பாவலர் பொன்.கருப்பையா,  தான் எழுதி இசையமைத்த “ தைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு” மற்றும் ”திருவள்ளுவர்” பற்றிய பாடல்களைப் பாடி  நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.

                                வள்ளுவரே... வள்ளுவரே ..   இசைப்பாடல் 

உலகுக்கு    உயிர்கொடுக்க  உதித்தஒரு  ஆதவன்போல்
உயர்திருக் குறளைத்தந்த   பாவலரே - உங்கள்
வழியி்ல்  இந்தப்  புவிசுழலும்  வல்லவரே
வள்ளுவரே... திருவள்ளுவரே

அறம்பொருள் இன்பமென்று  அழகியமுப்    பாலைத் தந்தாய்
அகிலத்தில்    வாழும்மாந்தர்  அனைவருக்கும் பொதுமை சொன்னாய்
அன்புடனே    அறிவும்ஓங்க   அதிகாரம்     பலவும்   செய்தாய்
ஆள்வோர்க்கும்  வாழுவோர்க்கும்  அரியநெறிகள்  ஆக்கித் தந்தாய்
வள்ளுவரே.... திருவள்ளுவரே

இயங்கிடும்  உலகம் என்றும்   ஏரின்பின்னே   நடக்குமென்றாய்
இயலாத    தொன்றுமில்லை   முயற்சிசெய்யக் கிடைக்குமென்றாய்
ஈதல்          இசைபடவே       வாழ்ந்திடவும்     வழியைச்சொன்னாய்
ஈடில்லா  இல்லறத்தின்   மேன்மைஅன்பு    அறத்திலென்றாய்
வள்ளுவரே...திருவள்ளுவரே

ஏற்றநல் அறம்புரிய இனியபொருள் விளையுமென்றாய்
ஏகாந்த வீடுபேற்றின் இறுதிநீக்கி இன்பம் வைத்தாய்
இன்பத்துப் பாலதிலே எத்தனையோ நுட்பம் வைத்தாய்
என்றும்குறள் வழிநடப்போர் ஏற்றம் வாழ்வின் அமையுமென்றாய்
வள்ளுவரே... திருவள்ளுவரே.

Saturday, January 18, 2014

தமிழ்ப் புத்தாண்டு தையே.

தைத்திங்கள்  முதல்நாளே  தமிழருக்குப் புத்தாண்டு
        தமிழ்ப்பண்  பாட்டோடு  மகிழ்ந்துநீ  கொண்டாடு  -- தைத்திங்கள்

ஞாலத்தின்  முதல்தொழிலாய்  வேளாண்மைத்  தனைக்கொண்டு
      காலத்தை  அதன்வழியே   வகுத்தானே  நம்தமிழன்                                              ஆடிப்பட்டம் தேடி விதைத்து மார்கழியில   மகசூல்கண்டு                                            கூடிக்களிக்கும் நாளாய்க் கொண்டானே தைமுதல்நாளை                                                                                                                    
                                                                                    -- தைத்திங்கள்

சுழல்கின்ற  புவிசெழிக்கச்  சூரியனை  முதன்மை  கொண்டான் 
          சூரியவீதியில்  தங்கும்  உடுக்கள்  பன்னிரண்டு  கண்டான்
சுறவம்முதல்  சிலைஈறாய்ச்  சுழன்றிடும்  ராசிகள் பெயரைச்                             சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைமுதலென்றான்                              
                                                                                        -- தைத்திங்கள்

கார்கூதிர்  முன்பனி  பின்பனி  இளவேனில்  முதுவேனில் என
    காலநிலைக் கேற்பபொழுதைப் கணக்காகப்  பகுத்து வைத்தான்
வெயில்மழை முன்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில்
    விளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைத்தநாளே                                                                                                                   
                                                                                      -- தைத்திங்கள்





Wednesday, January 15, 2014

அனைத்துத் தோழமைகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்திருநாள், திருவள்ளுவர்நாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்.

கடந்த ஒரு வாரகாலமாகத் தொடர்ந்து இணையத்தில் இருக்கையிட நேரமின்றி நெருங்கிய பணிகள்.
நபார்டு வங்கி மற்றும் செஸ்டாட் அமைப்பின் மூலம்  கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை பற்றிய விழிப்புணர்வு பரப்புரைக்காகப் பாடல்கள் எழுதி,  இசையமைத்துப் பாடி, குறுந்தகடு ஒலிப்பதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து.... கிராமியச் சாயலில் வங்கிகள் தரும் வளர்ச்சி பற்றி “ அண்ணே ஒரு சந்தேகம்” என்னும் நிகழ்ச்சியினைத் தயாரித்து  இயக்கி காணொளிப் பதிவு செய்து குறுவட்டு வெளியிட்டமையிலும் கிராமத்துச் சொந்தங்களுக்கு பரப்புரை நிகழ்வுகளில் கலந்து கொண்டமையிலும் பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன.

அதனைத் தொடர்ந்து கவிநாடு மேற்கு சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதி இளந்தென்றல் கலை மன்றத்தின் 9 ஆம் ஆண்ட தமிழர்திருநாள் பொங்கல்விழா,  கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் ஆயத்த முனைப்பு.

4.01.2014 அன்று பகுதிக் குழந்தைகளுக்கு கவிஞர் செ.சுவாதி, கவிஞர்.மு.கீதா , தலைமை ஆசிரியர் இரா.சிவகுருநாதன் ஆகியோரைக் கொண்டு பேச்சு, பாட்டு. திருக்குறள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல், விழிப்புணர்வுப் பாடல் போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தியது

12.01.2014 அன்று சண்முகநகர், மங்களம் நகர், கே.கே.நகர், சாய்ராம்நகர், கிருஷ்ணாநகர், விரிவாக்கப் பகுதி ஆகிய பகுதிகளில் மூன்று பிரிவாக ஆறு நடுவர்களைக் கொண்டு வண்ணக்கோலப்போட்டி நடத்தியது.
13.01.2014 அன்று  கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் புகையிலாப் போகி, மற்றும் இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தியது.

அன்று மாலை வெள்ளியரங்கில் நடந்த நல்லிணக்கப் பொங்கல் நிகழ்வு மன்றும் மனிதநேய மாண்பாளர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டது.

14..01.2014 தமிழர்திருநாளன்று  பகுதி இல்லங்களில் பொங்கலிட்டு  இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம்  இணைந்து சிறுவர் முதல் பெரியவர் வரைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள்முழுவதும் நடத்தியது.

அன்றுமாலை, பகுதிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மே டையேற்றியது.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு.
நிறைவாக கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களை நடுவராகக் கொண்டு ” மக்களின் மனங்களில் பெரிதும் நிலைத்திருப்பவை “பழைய திரைஇசைப்பாடல்களா? புதிய திரையிசைப் பாடல்களா?“ என்னும் இன்னிசைப் பட்டிமன்றம்.  பழையபாடல்களே அணியில் கீழாத்தூர் மக்களிசைக் கலைஞர் ரெ.வெள்ளைச்சாமி, நன்னிலம் மகேசுவரி, ஆலங்குடி லெ.வடிவேலு ஆகியோரும், புதிய திரையிசைப் பாடல்களே


அணியில் இராச.ஜெய்சங்கர், திண்டுக்கல் கிலோனா மணிமொழி, புலவர் மகா.சுந்தர் ஆகியோரும் வாதிட்டனர். சிறப்பாக அமைந்தது.
15.01.2014 அன்று காலை புதுக்கோட்டை சின்னப்பாத் திடலருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி, பொங்கலிட்டு வாழ்த்துப் பகிர்வு.
அதனைத் தொடர்ந்து பிச்சத்தான்பட்டி இளைஞர் நற்பணிமன்றத்தினர் நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்து நடத்தியது. 
இத்தகு நிகழ்வுகளால் நட்புகளோடும், உறவினர்களோடும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் மகிழ்வினையும் உளமாறப் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன்.