Monday, June 17, 2013

தமிழ்வழிக் கல்வி கூட்டு இயக்கம்

                                                மாற்றங்களை யோசிப்போம்.
17.06.2013 மாலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வழிக்கல்வி கூட்டிணைப்பின் பரப்புரைக் கூட்டம் புலவர் மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலிமிருந்து தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர். அண்மையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அரசாணை யால்  தமிழினத்  தலைமுறைப் பாதிப்புகள் பற்றித் தமிழறிஞர்கள் உரையாற்றினர்.  அக்கூட்டத்தில் பாவலர் பொன்.க இயற்றி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

                                          கொந்தளிக்கும் வெந்தணல்

உரிமைபறி         போகுதிங்கே      உறைக்கலையா       தமிழா?
உணர்ச்சியற்ற மரக்கட்டையா உறங்குறியா               தமிழா?
உயர்தனிச்      செம்மொழிதான்நம்  பயிற்றுமொழி  தமிழா  -  அதை
உதறிவிட்டு  ஆங்கிலவழிக்    கல்விஎதுக்குத்              தமிழா?                           -- உரிமை

தாய்ப்பாலில்     வளரும்பிள்ளைத்  தாக்கும்நோயை    தாங்கிடுமே
தட்டுக்கெட்டப்  புட்டிப்பாலில்            எளிதாநோயும்         புகுந்திடுமே
தமிழ்வழியில்   படிச்சவங்கலாம்    தரணிபோற்றப்        பெருகலையா?
தரமிழந்த            கல்விமுறைக்கு    ஆங்கி்லந்தான்             மறுதலையா?        -- உரிமை

கிளிவளரும்        கூண்டுக்குள்ளே     கழுகைநுழைச்சு       வளர்ப்பதா?
கழுகுப்பசிக்குக்  காலப்போக்கில்     கிளியும்உயிரை       இழப்பதோ?
மொழிசிதைச்சு  இனமழிக்கும்         முயற்சிக்குக்கை      கொடுப்பதோ?
விழியிரண்டில்  வேறுவேறு               காட்சிபுகுத்த                நினைப்பதோ?       -- உரிமை

தெள்ளுதிணை        மாவின்பக்கம்         தேன்தடவி              நஞ்சைவச்சு
தேவைப்பட்டதை எடுத்துக்கோன்னு   தெளிவில்லாச்  சொல்லுவாங்களா?
திறன்வளர்த்து       மேம்படுத்தும்        தாய்மொழியைத்   தள்ளுவாங்களா?
தேசம்மறந்து       பொருள்திரட்டும்    தேய்மொழிப்பின்  செல்லுவாங்களா?  -- உரிமை

எந்தமொழிக்       கில்லாமேன்மை        நம்மொழிக்         கிருப்பதாலே
நொந்தமனத்        தந்திரிமாரின்            நெஞ்செரிச்சல்   மூண்டதோ?
சொந்தமண்ணில்   தமிழினமும்       அந்நியன்போல்   வாழ்வதோ?
கொந்தளிக்கும்  தமிழினத்தின்            வெந்தணல்           வீணாவதோ?              -- உரிமை

No comments:

Post a Comment