Saturday, December 21, 2013

பாரதியார் -வினாடி-வினா, சுற்று 4

பாரதியார் பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சியின் நான்காம் சுற்று.

                                            சுற்று -4 முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு முதல் பதிப்பு யாரால் எங்கு வெளியிடப்பட்டது?

2. தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் - இவ்வரிகள் பாரதியாரின் எக்காவியத்தில்  யாருடைய கூற்றாக அமைந்துள்ளது?

3. பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடியைப் பாரதிக்குக் கொடுத்துப் பா புனையச் சொன்ன புலவர் யார்?

4. உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி- இப்பாடல் வரிகளில் யாரை யாராகக் கண்டு பாரதி பாடியிருக்கிறார்?

5. துச்சாதனன் திரவுபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் செல்கையில் அதைத் தடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பாரதி எவ்வாறு இழித்துரைக்கின்றார்?

6. காதல்  காதல்  காதல்,  காதல் போயின் சாதல் சாதல் சாதல் - இவ்வரிகள் இடம்பெற்ற பாரதியின் படைப்பு எது

7.வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி - கண்ணம்மா கூறிய வார்த்தைகளாகப் பாரதி கூறியுள்ள வரிகள் யாவை?

8. பாப்பா பாட்டு யாருக்காக எழுதப்பட்டது?

9.எவற்றைப் புசி நறுநெய் குளித்துச் சீவிக்குழல் முடிப்பேன் எனப் பாஞ்சாலி சபதமேற்றாள்?

10. கண்ணன் என்தாய் என்ற பாடல் முதன்முதலாக எப்போது எவ்விதழில் வெளியிடப்பட்டது?

என்ன நண்பர்களே விடைகள் கண்டுபிடித்து விட்டீர்களா?

சரிபார்க்க “மணிமன்றம்-புதுகை“ வலைப் பக்கம் பாருங்கள்.

Thursday, December 19, 2013

வினாடி-வினா ( பாரதியார் ) சுற்று -3

பாரதியார் பிறந்தநாள் வினாடி-வினாப் போட்டியின் மூன்றாவது சுற்றில் கேட்கப்பட்ட வினாக்கள்.

                                             சுற்று - 3 ஞானப்பாடல்கள்

1.அச்சம் தேவையில்லையெனப் பாரதி கூறக் காரணம் என்ன?

2. காலனைப் பாரதி எவ்வாறு மதிக்கிறார்?

3. தெய்வம் என பாரதியார் கருதுவது எதனை?

4. பாரதி தன்னை யாரென வெளிப்படுத்துகிறார்?

5. எவற்றைச் சொப்பனமாகப் பாரதி கூறுகிறார்?

6. உயிர் துணிவுறுவது யாரால் எனப் பாரதி கூறுகிறார்?

7. எத்தகைய நெஞ்சம் வேண்டுமென்கிறார் பாரதி?

8. யாருக்கு அருள்வாய் என நெஞ்சிடம் உரைக்கிறார்?

9. எவை எங்கள் சாதி என்கிறார்?

10. அச்சமில்லை அச்சமில்லை எனும் பல்லவியின் அடுத்த வரி என்ன?

என்ன நண்பர்களே எல்லா வினாக்களுக்கும் விடை தெரியும் தானே?
ஒப்புநோக்க  “ மணிமன்றம் புதுகை” என்னும் வலைப்பக்கம் பாருங்களேன்.

Wednesday, December 18, 2013

பாரதியார் பிறந்தநாள் - வினாடி-வினாப் போட்டி- இரண்டாம் சுற்று.

13.12.2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் வினாடி-வினாப் போட்டியின் இரண்டாம் சுற்று வினாக்கள்

                         இரண்டாம்  சுற்று - பாரதியாரின் மொழிப் பற்று.

1. நெஞ்சை அள்ளும் காப்பியம் என எதைப்  பாரதியார் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.?

2. தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்.... இதன் அடுத்த வரி என்ன?

3. எதற்காக எட்டுத் திக்கும் சென்றிடுவீர்  எனப் பாரதியார் கூறுகிறார்?

4. புமிதனில் யாங்கனும் பிறந்ததில்லை என எம்மூன்று புலவர்களைப் பாரதியார் குறிப்பிடுகிறார்?

5. கற்றபின் நிற்க அதற்குத் தக எனும் குறள் கருத்தைப் பாரதியார் எப்படித் தன் ஆத்திச்சூடியில் கூறுகிறார்?

 6. சேமமுற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்கிறார் பாரதி?

7. முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு என்பதில் மாமுனி என யாரைக் குறிப்பிடுகிறார்?

8. பயில், பயிற்சி கொள் என எவற்றைப் பாரதியார் ஆத்திச்சூடியில் கூறுகிறார்?

9. எப்போது வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிறார்?

10. எல்லையொன்றின்மை என்று எந்தக் கவிஞரரிக் கவியைப் பாரதி சுட்டுகிறார்?

என்ன? விடைகளைத் தந்துவிட்டீர்களா?  சரிபார்க்க “ மணிமன்றம், புதுகை” வலைப்பக்கம் வாருங்கள்

Sunday, December 15, 2013

பாரதியார் - வினாடி-வினாப்போட்டி -விடைகள்

 முதல் சுற்று - பாரதியாரின் நாட்டுப் பற்றுப் பாடல்கள்- விடை

1. எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

2. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி... எனத் தொடங்கும் பாடலில்.

3. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்.

4. அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.

5. தனியொரு மனிதனுக் குணவில்லையெனில்.

6. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருணைநதி.

7. திருநெல்வேலி ஆட்சியர் விஞ்ச் துரைக்கு வ.உ.சி. உரைத்தாக.

8. 1917 உருசியப் புரட்சியை... ஜார் மன்னனின் வீழ்ச்சியை.

9. கிளிக்கண்ணிகள் தலைப்பில் - நடிப்புச் சுதேசிகளைப் பழித்து.

10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை... வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை.


ம்... எத்தனை மதிப்பெண்கள்?

Sunday, December 1, 2013

த.மு.எ.க.ச. நிருவாகிகள் கூட்டம்

            1.12.2013 அன்று த மு எ க ச புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் நிருவாகிகள் கூட்டம்  மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.க அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

          மாவட்டப் பொருளாளர்  மதியழகன் வேலையறிக்கை அளித்தார்.

கவிதைப் பயிற்சிப் பட்டறை நடத்துதல்,                                                           

குறும்படம், ஆவணப்படங்கள் பயிலரங்கம் ஆலங்குடியில் நடத்துதல் , 

உறுப்பினர் சேர்க்கை அதிகரித்தல், 

கிளைச் செயல்பாடுகள் மேம்பாட்டில் மாவட்டப் பொறுப்பாளர்கள் வேலைப் பகிர்வு

 முதலிய பொருள்கள் பற்றி கருத்துகள் பகிரப்பட்டன.

 மாநிலப் பொறுப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் உள்ளிட்ட மாவட்ட நிருவாகிகள் கலந்து கொண்டனர் .

 முனைவர் சு.மாதவன் நன்றி கூறினார்.

Friday, November 22, 2013

அரிய ஐசான் வால் நட்சத்திர பரப்புரை

வான்வெளியில்  29.11.2013 அதிகாலை 12.15 மணிக்கு நிகழ உள்ள, ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடெங்கும் சிறப்பாக நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டையில் இன்று கந்தர்வகோட்டை வித்ய விகாஷ் பள்ளி, பெருங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு நடத்திய அறிவியல் இயக்கக் குழு, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலையில் பரப்புரையினை மேற்கொண்டது.
பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் வால்நட்சத்திரம் பற்றிய பல்வேறு
வினாக்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.

வான் நோக்கு நிகழ்வும் நடத்திக் காட்டப்பட்டது.

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி

     22.11.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அழைப்பின் பேரில் கண்காட்சியினைக் காணச் சென்றேன். ஒவ்வொரு அரங்கிலும் மாணவர்களின் அருமையான அறிவியல் படைப்புகள் செய்முறையோடு விளக்கப்பட்டன.

    முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்  திருமயம் கோட்டை மற்றும் ஆலயங்களில் கண்டுபிடித்து வெளிப் படுத்தியிருந்த  ஓவியக் கண்காட்சி அரங்கம் சென்றதும் அதிர்ந்து விட்டேன்.

         காரணம் இத்தனை ஆண்டுகள் மனித நாகரிக காலம் கி.மு. 5000 வரையிலும் அறியப்பட்டிருந்த நிலையில் கோட்டை மற்றும் நழுவப்படக் காட்சி ஆதாரங்கள் தென்தமிழக வரலாறு கி.மு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருப்பது பெரும் வியப்பளித்தது.
அதைவிட அவ்வாதாரங்களை முதன்மைக் கல்வி அலுவலரே பார்வையாளர்களுக்கு விளக்கியது அதைவிட வியப்பு. இலக்கிய இலக்கண ஆய்வுகளில் புதிய புதிய பரிமாணங்களை ஆய்ந்து
வெளிப்படுத்திய முனைவர், வரலாற்றில் இத்தனை ஆழமாக, இதுவரை அறியப்படாத உண்மையினை வெளிக்கொணர்ந்துள்ளமை வரலாற்றாய்வாளர்களையே திகைக்க வைத்துள்ளது. 

அவரோடு இருந்து விளக்கங்கள் கேட்டறிந்த அந்தத் தருணம் ஒரு புதிய அனுபவம் .

இப்படியும் ஒரு அலுவலரா?

Wednesday, November 20, 2013

சிறுவர் செஞ்சிலுவைச் சங்க ஒருநாள் கருத்தரங்கம்

20.11.2013 அன்று புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் , புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஜே.ஆர்,சி. ஆலோசக ஆசிரியர் களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.அதில்  “முதலுதவி” பற்றிய கருத்துரையினைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.க. விபத்தில் காயமுற்றோர்க்கு முக்கோணக் கட்டுத்துணிகளைக் கொண்டு எவ்வாறு தாடைக்கட்டு போட்டு இரத்த ஒழுக்கை நிறுத்துவது என்பது பற்றிய செயல் விளக்கத்தினைச் செய்து காட்டினார்.
ஒரு ஆலோசக ஆசிரியருக்கு விலா எலும்பு முறிவுக்கு எப்படிக் கட்டுப் போட்டு முதலுதவி செய்ய வேண்டுமென்பதை விளக்கினார்.
இரண்டு அகலக் கட்டுத்துணிகளைக் கொண்டு விலா எலும்பு முறிவுக்கு ஆலோசகர் போட்ட கட்டினைக் காட்டி விளக்கியபோது..

தலைப் பகுதியில் பட்ட காயத்துள் கண்ணாடித் துண்டு, தகரம், ஆணி முதலியன இருக்குமானால் அவ்விடத்தில் பாதுகாப்புத் வளையம் வைத்துத் தலைக் கட்டு எவ்வாறு போடுவது என்பதைச் செய்து காட்டுகிறார்

Sunday, November 17, 2013

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்போம்

17.11.2011 அன்று புதுக்கோட்டை  ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் நடந்த             த மு எ க ச திருக்கோகர்ணம் கிளைக் கூட்டத்தில் பாவலர் பொன்.க . எழுதி இசைத்துப்                                                                                           பாடிய பாடல்.

ஓடுகிற ஓடைநீரைப் போல மனசு இருக்கணும்
ஒவ்வொரு நாளு விடியும் போதும் புதுசு புதுசாப் பொறக்கணும் -நாம                                               புதுசு புதுசாப் பொறக்கணும்                                                                                                  -- ஓடுகிற 

தேங்கிக் கெடக்கும் குட்டைநீரில்  தீங்குசெய்யும்   புழுக்கள்    நெளியும்
தேக்கி     வைக்கும்  துயரம்நெஞ்சில்  தேடலுக்குத் தடையா  அமையும்
தென்றல் நம்மைத்  தீண்டுமுன்னே  சூறாவளிக்  காற்றாய்த்  தோன்றும்
தேவையற்ற  சுமையை  நீக்கத் தேன்மலரின்  இதழ்கள்  விரியும்                     -- ஓடுகிற

வெம்மை   குளிரக்    கருமேகம்        மண்ணில்   மழையைப்        பொழியுது
வெடிச்சுச் செதறும்  மகரந்தந்தான்  வெளைச்சல்  பெருக்கித்  தருகுது
வெந்தனலாய்க்  கவலை  தேங்க      மனசில்         மகிழ்ச்சி             கருகுது
வெளியேறும்  வேர்வைத்  துளியே வியக்கு ம் உழைப்பைப்  பெருக்குது    -- ஓடுகிற

அழுத்தம்  நெறைஞ்ச  எடந்தனிலே  வெடிக்கும்  நிகழ்வு      இயற்கையே 
அரும்பும்  இடரைக்     கடப்பதிலே    ஆற்றல்  பெருகும்          நெறையவே                                         ஆற்றாத   சோகம்      ஆழியும்             அடுத்து    சுமையைப்       பகிரவே
ஆறுதலை ஏற்கும்      நெஞ்சில்            அமைதி    தவழும்           நெடுகவே          -- ஓடுகிற 

Saturday, November 9, 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு.

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மகாத்மா கல்வி நிறுவனங்களும் இணைந்து 09.11.2013 அன்று ஆரியுர் பொறியியல் கல்லூரியில் நடத்திய 21 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க., அறிவியல் இயக்க மாவட்ட மாநிலப் பொறுப்பாளர்களுடன்.

Thursday, October 10, 2013

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு மணிமன்றம் மரகதவள்ளி அறக்கட்டளை சார்பாக பாராட்டிதழ் வழங்கப் பட்டது.

Tuesday, October 1, 2013

திருக்கோகர்ணம் - நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்..

                   
    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஐந்தாம் நாள்  நிகழ்வுகள் திருவப்புர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்துள் நடைபெற்றது.

                    மாலை நிகழ்வாக “ இயற்கையை நேசிப்போம் ” என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்  நலப்பணித் திட்ட மாணவர் களிடையே உரையாற்றினார்.

                இயற்கையின் கொடைகளாக மனித சமூகம் பெறும் ஆற்றல்கள் பற்றியும், பல்லுயிரியப் பெருக்கம் நிலம், நீர், காற்று, வான், நெருப்பு ஆகிய ஐந்து மூலங்களின் சீற்றங்களும் அவற்றால் ஏற்படும் அழிவுகளையும் விவரித்துக் கூறினார்.

            புவியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது சரிதானா? என்னும் பாடல் மூலம் இயற்கையை எவ்வாறு மாசின்றி, அழிவின்றிக் காப்பது என்னும் விளக்ங்கங்களையும் மாணவர்களுக்கு உணர்த்தினார். 

             முகாம் மாணவர்கள் மிக்க ஈடுபாட்டுடன் இந்நிகழ்வில்  பங்கேற்றது சிறப்பு

           முகாமின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் அவர்கள் நன்றி கூறினார்.

பெரியார் 1000 வினா-விடை - பரிசளிப்பு

                      29.09.2013 பிற்பகல் புதுக்கோட்டை நில அளவையர் கூட்ட அரங்கில் மாநில பெரியார் உயராய்வு  மையம் நடத்திய “ பெரியார் 1000 வினா-விடை” ப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டஅளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

                மானமிகு மு.அறிவொளி அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்றார்.

               மாவட்டச் செயலாளர் மானமிகு ப.வீரப்பன் அவர்கள் வரவேற்றார்.  ஆ.சுப்பையா, ரெ.புட்பநாதன், ரெ.மு.தருமராசு ஆகியோர் முன்னிலையேற்றனர். 
           
               
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா வெற்றியாளர் களை அறிவிக்க,  பெரியார் மணியம்மை பல்கலைக் கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் மானமிகு முனைவர். க.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார். மண்டல இளைஞரணிச் செயலாளர் மானமிகு அ.சரவணன் நன்றி கூறினார். 


Friday, September 27, 2013

வழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்

         27.09.2013 அன்று புதுக்கோட்டை அடப்பன்காரச் சத்திரத்தில் வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடை  பெற்றது. 

        அம்முகாமில் “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமா?” என்னும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

        வழக்காடு மன்றத்தின் நடுவராக புலவர் மகா.சுந்தர் செயல்பட்டார்.

       வழக்கினைத் தொடுத்த இராச.ஜெய்சங்கர் மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயம் என்பது குற்றம். வீடே ஒரு மனிதனை மாமனிதனாக்குகிறது என வழக்கினைத் தொடுத்தார்.

       வழக்கினை மறுத்த பாவலர் பொன்.கருப்பையா  சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்   நட்பு வட்டாரம் சேவை அமைப்புகள் மனிதனுக்கு பட்டறிவினையும் சமூக ஈடுபாட்டையும் தருவன... அவ்வாறான சமூக ஈடுபாட்டாலேயே பெரியார், காந்தி, காமராஜ், அன்னை தெரசா, பெர்னாட்ஷா, அண்ணா, மார்க்ஸ் போன்றவர்கள் மாமனிதர்களாக விளங்குகின்றனர் எனச் சான்றுகளுடன் வழக்கினை மறுத்தார்.

         நிறைவில் வீடு நாற்றங்கால்... அது மனிதனை உருவாக்குகிறது.. சமுதாயம் விளைநிலம். ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு ஒளிமயமான சமூகத்திற்கு வழி வகுக்கிறது எனவே “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமே” என நடுவர் மகா.சுந்தர்  தீர்ப்பளித்து  வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

      நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரோடு, ஹரிமோகன், மஸ்தான் பஹ்ருதீன், பொன்.தங்கராசு, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
26.09.2013 அன்று நற்சாந்துபட்டியில் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்  “ இயற்கையை நேசிப்போம்“ என்னும் தலைப்பில் பாவலர் பொன்.கருப்பையா முகாம் மாணவரிடையே உரை நிகழ்த்தியபோது.

Tuesday, September 17, 2013

காசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.

             புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய்ப் பிரிவில் 17.09.2013 அன்று,  புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் சார்பில், நாள்தோறும் காசநோய் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவு தினமும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

           துணை இயக்குநர் ( காசநோய் ) மருத்துவர் எஸ்.ஆர். சந்திரசேகர் அவர்கள்  திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

          மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத் தலைவர் திரு.ஆர்.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன், வசந்தா ஆகியோர் நோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவினை வழங்கினர்.

           சிகிச்சை அமைப்பாளர் திருமதி மணிமேகலை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 

           ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள்.

17.09.2013 அன்று பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.இராமசாமி பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாளில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே, மின்வாரிய அலுவலம் எதிரில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாவட்டத் திராவிடர்கழகத்தினரோடு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா மாலை அணிவித்தார்.

Saturday, September 14, 2013

உலக முதலுதவி நாள் - ரெட் கிராஸ் பயிற்சி




உலக முதலுதவி நாளில்...                        14.09.2013 அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கூட்ட அரங்கி்ல், உலக முதலுதவி நாளை முன்னிட்டு, மாவட்ட ரெட்கிராஸ் சங்கம், மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு      “ தேடுதல் மற்றும் மீட்பு” பயிற்சியினை நடத்தியது.

                      மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் செயலாளர் திரு ராஜா முகம்மது அவர்கள் தலைமையில் பயிற்சி தொடங்கியது ரெட்கிராஸ் மாவட்டத் தலைவர் திரு சீனு.சின்னப்பா அவர்கள் பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.. அமைப்பின் பொருளாளர் திரு நாகப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் வரவேற்றார்.

                      மாவட்ட மீட்பு மற்றும் தீத் தடுப்பு நிலைய அலுவலர் திரு சத்திய கீர்த்தி அவர்கள்  பேரிடர், இயற்கைச் சீற்றம்,  வருமுன் காத்தல், வந்தபின் மேற்கொள்ள வேண்டியன, தீ.. விபத்துகள், தீத்தடுப்பு முறைகள், மீட்டல். தீயணைப்பான் வகைகள் பற்றி விளக்கமாகப் பயிற்சி யளித்தார்.

                     முன் அனுபவம் பெற்ற பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தொண்டு நிறுவனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர்க்கு வாயுத் தீயணைப்பானைக் கையாளும் முறை, மீட்டலில் உருவாக்கத் தூக்கி தயாரித்தல் ஆகியன பற்றிச்  செயல் விளக்கமளித்தார்.

                     எண்ணைத் தீயினை அணைக்கும் முறை செயல் விளக்கம் செய்து காட்டப் பட்டது. 

                     நிறைவு நிகழ்ச்சிக்கு வருகை தந்த செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் பயிற்சி அளித்தவர் களையும் பயிற்சி பெற்றவர்களையும் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார்.

அக்சயா-ரீச்-காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு - காலாண்டுக் கூட்டம்.

                 .14.09.2013 காலை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கி்ல், தமிழ்நாடு  அக்சயா திட்டத்தின் ரீச் தொண்டு நிறுவனமும், புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கமும் இணைந்து நடத்திய காலாண்டுச் செயல்திட்டக் கூட்டம்  திரு ஆர்.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் வரவேற்றார்.

                காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்க மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் கலந்து கொண்டு கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

              1.கிராமங்கள் தோறும் காசநோய் பாதிக்கப் பட்டவர்கள் கணக்கெடுப்பினை மேற்கொள்வது.

              2. வரும் 17.09.2013 அன்று நமது இயக்கம் மூலம்  புதுக்கோட்டைத் தலைமை அரசு மருத்துவ மனையில் காசநோயாளிகளுக்கு சத்துணவுப் பயறு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்குவது.

             3. தொண்டு நிறுவனங்களை மாவட்டக் காசநோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ்க் கொண்டுவர தமிழக அரசினைக் கேட்டுக் கொள்வது.

             
கூட்டத்தில்  இயக்கப் பொருளாளர் மாயழகு, துணைத் தலைவர் மேகலா, லெ.பிரபாகரன், தா.சிவராம கிருஷ்ணன், வீரமுத்து, பரமசிவம், வசந்தா, விஜயலெட்சுமி, மற்றும்  நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday, September 1, 2013

மாவட்டத் துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 01.09.2013 அன்று புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்திய மாவட்ட அளவிலான துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா போட்டிகளை நடத்திய போது.

துளிர் வினாடிவினா பரிசளிப்பு


31.08.2013 அன்று நடைபெற்ற துளிர் வினாடி வினாப் போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவிற்குத் தலைமையேற்றுப் பரிசுகள் வழங்கிய போது

பெரியார் ஆயிரம் வினா-விடை எழுத்துப் போட்டி

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 31.08.2013 அன்று நடைபெற்ற “பெரியார் 1000” வினா-விடை எழுத்துத் தேர்வினை பாவலர் பொன்.க மேற்பார்வையிட்ட போது.
புதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ துளிர் இலலத் திங்கள் கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் துளிர் இல்ல மாணவர்களுடன் பாவலர் பொன்.க..

Monday, August 26, 2013

காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பில்

                26.08.2013 முற்பகல் , புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில். ரீச் தொண்டு நிறுவனமும், செல்வா அறக்கட்டளையும் நடத்திய காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது.

               ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா மகேசுவரன் அவர்கள் தலைமையி்ல் , புதுக்கோட்டை மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு மையச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, காசநோய் பராமரிப்பிற்கான நோயாளிகளின் சாசனம் பற்றி விழிப்புணர்வுக் கருத்துகளை வழங்கினார்.

              செல்வா அறக்கட்டளை வாசுகி முகாமினை ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். த.நா.அ.இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். 

               ரீச் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டி நன்றி கூறினார்.

              காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் பயணடைந்தனர்.

கலிலியோ துளிர் இல்லத்தில்...

புதுக்கோட்டை கலீப் நகர் கலிலியோ துளிர் இல்லத்தில் 25.08.2013 காலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் துளிர் இல்ல மாணவர்களுக்கு , போரில்லாப் புது உலகம் படைப்போம் எனப் பாடி உணர்ச்சி ஊட்டிய பாவலர் பொன்.க.


Saturday, August 24, 2013

ஆனந்தஜோதி - ஐம்பெரும் விழாத் தொடக்கத்தில்...


             புதுக்கோட்டை நகர்மன்றத்தில், 24.08.2013 மாலை நடைபெற்ற “ஆனந்தஜோதி” ஐம்பெரும் விழாவின் தொடக்கத்தில் , பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைக்கு எதிராக, பயங்கர வாதத்திற்கு எதிராக, நகைமோகத்திற்கு எதிராகப்  பாடல்களோடு உரை நிகழ்த்தும் பாவலர் பொன்.க .

ஆனந்தஜோதி - திங்களிதழ் படைப்பாளர் சந்திப்பு

 .
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 24.08.2013 அன்று முற்பகல் நடைபெற்ற “ஆனந்தஜோதி“ தமிழ்த் திங்களிதழ் ஐம்பெரும் விழாவில், இதழுக்கான படைப்பாளர் சந்திப்பில்  பாவலர் பொன்.கருப்பையா  கவிஞர்.இரமா.ராமநாதன், ஹைக்கூ முருகேஷ், கவிஞர் இளங்கோ மற்றும் படைப்பாளிகளுடன்.

Friday, August 23, 2013

ஜூனியர் ரெட் கிராஸ் - செயற்குழு

                       23.08.2013 மாலை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் அறையில், புதுக்கோட்டைக் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கச் செயற்குழுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 மாவட்ட ஜே.ஆர்.சி.அமைப்பாளர் திரு வி.இராஜேஸ் சீனிவாஸ் 2012-13 ஆண்டறிக்கையினை அளித்தார், அதனைத் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்ட  நிதிநிலை அறிக்கை  பகிரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
               புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு. வெ.இராமச்சந்திரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திருமதி ஆ.சுசீலா, கவுரவ ஆலோசக  திரு த.இராமமூர்த்தி, இணை அமைப்பாளர்கள் ஹ.மீனாட்சி சுந்தரம், ஜே.அஜ்மீர் அலி, திருமதி சி.சாந்தி,  செயற்குழு உறுப்பினர்கள் திரு.கோ.முத்துரகுநாதன்,  திரு.சரவணன் ஆகியோர் அறிக்கை மற்றும் செயல் திட்டத்தின் மீதான கருத்துகளை வழங்கினர்.

              ஜே.ஆர்.சி.ஆலோசகர்களுக்கான ஒருநாள் முகாம் செப் 7 ல் கடையக்குடியில் நடத்துவது, 
            ஜூனியர்களுக்கான இரண்டுநாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் முதல் பருவ விடுமுறையில் நடத்துவது,  
             கல்வி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஜே.ஆர்.சி. இயக்க நடவடிக்கைகளை விரிவு படுத்துவது, 
            மெட்ரிக் பள்ளிகளை மேலும் அதிக அளவில் ஜே.ஆர்.சி இயக்கத்தில் இணைப்பது,                   கல்வி மாவட்ட அனைத்து ஜே.ஆர்.சி. இயக்கம் நடைமுறையில் உள்ள பள்ளிகளுக்கும் முதல் உதவிப் பெட்டி வழங்குவது                                                                                          ஆகிய முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

செயற்குழு உறுப்பினர் திரு. பாபு அவர்கள் நன்றி கூறினார்.

போரில்லாப் புது உலகம் படைப்போம்...

                         .23.08.2013 அன்று முற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக புதுக்கோட்டை கடையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி்ல் ஹிரோசிமா-நாகசாகி நினைவு நாள் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சே.பேச்சியம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
                     
                      பள்ளி ஆசிரியர் திருமதி செ.தெய்வானை அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் ஜப்பான் ஹிரோசிமா-நாகசாகியில் 1945ல் நடந்த அணுகுண்டு வீச்சின் வரலாற்றையும் அழிவினையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்

                    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.க உலகெங்கும் தொடரும் அணுஆயுதப் போர்கள், அதன் விளைவுகள் மனிதகுல அழிவு பற்றி மாணவர் மனங்கொளத்தக்க வகையில் பாடல் கதைகள் மூலம் விளக்கினார்
அவர் தனதுரையில்  மத,இன, சாதி பேதங்கள் நீக்கப்பட வேண்டியதையும், மனிதநேயத்தோடு இளைய தலைமுறை வளர்ந்து போர்களே இல்லாத புது உலகத்தைப் படைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

                  நிறைவில் பள்ளி ஆசிரியர் திரு வெங்கடசுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார். 

Thursday, August 22, 2013

அழகிய புவியினில் அமைதி நிலவிட...

                
               22.08.2013 அன்று பிற்பகல் புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி தங்கம் கிரேஸ் அவர்கள் தலைமையேற்றார்.
            
              பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு மாரிமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

              த.நா.அ.இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் அவர்கள் அணுஆயுதங்களால் ஆகும் அழிவுகள் பற்றியும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சப்பானின் இரு நகரங்கள் அணுகுண்டால் அழிக்கப்பட்ட அவலத்தையும் வரலாற்றுப் பின்னணியோடு  எடுத்துரைத்தார்.

               பாவலர் பொன்.கருப்பையா “ அழகிய புவியினில் அமைதி நிலவ...” எனும் தலைப்பில். உலகெங்கும் நடைபெறும் பயங்கர வாத நிகழ்வுகளையும், அவற்றால் மனிதகுலம் அழிவினையும் குறிப்பிட்டு, புவியி்ல் அமைதி நிலவ , மனிதநேயச் சிந்தனை இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

             அவர் மேலும் தனதுரையில் பண்டையத் தமிழகப் போர் நெறிமுறையில் பெண்டிர், குழந்தைகள், நோய்ப்பட்டோர், முதியவர்கள் பாதிக்கப்படாத அறமுறையினைச் சான்று காட்டி, அண்மையக் கால அணு ஆயுதப் போர்களால் பச்சிளங்குழந்தைகள்கூட அழிகின்ற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். 

            புவியில் அமைதி நிலவ அன்பு. கருணை, விட்டுக்கொடுக்கும் பண்பு, இன, மத, சாதிப் பாகுபாடில்லாத நேசம் வளர வேண்டும் என்பதைப் பாடல், கதைகளுடன் நகைச்சுவையாய் மாணவர்க்கு எடுத்துரைத்தார். 

           நிறைவில் பள்ளி வரலாற்றாசிரியர் திரு பொன்.தங்கராசு அவர்கள் நன்றி கூறினார்..

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு நாள்

              புதுக்கோட்டை, அசோக்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22.08.2013 அன்று ,முற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. 

           பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாஹிஜான் அவர்கள் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சபாரெத்தினம் முன்னிலையேற்றார்.

         வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினைப் பள்ளி மாணவி விநோதினி நிகழ்த்தியது புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது.
மாணவர்களின் அறிவியல் இயக்கப் பாடலைத் தொடர்ந்து, நியுட்டனின் மூன்றாவது் இயக்க விதி பற்றிய மாணவர் செயல் விளக்கம் நிகழ்ந்தது சிறப்பு.

        பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் த.நா.அ.இயக்க செயற்குழு உறுப்பினருமான திரு பழனிச்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

       த.நா.அ.இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் ஹிரோஷிமா-நாகசாகி குண்டு வெடிப்பு வரலாற்றினையும் அழிவுகளையும் பற்றி உரையாற்றினார்.

      அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க, புதுக்கோட்டை மாவட்டத் துணைத்தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்                       “ அணுவின் சக்தி ஆக்கத்திற்கே“ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதம், இனம், சாதி, மொழி பேதங்களின் அடிப்படையில் நடக்கும் போர்கள் மற்றும் வன்முறைப் பயங்கரவாதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். போர்களற்ற, மனிதநேயமிக்க சமூகம் உருவாக அன்பு, அறவழி, கருணை, ஒற்றுமையுணர்வு இளந்தலைமுறையிடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதனைப் பாடல், கதைகள் மூலம் நகைச்சுவையுணர்வோடு வழங்கினார். 

       பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியினைச் சுவைத்தனர். நிறைவில் பள்ளி ஆசிரியர் மகாலெட்சுமி நன்றி கூறினார்.

Thursday, August 15, 2013

இராயப்பட்டி ஊ.ஒ.தொடக்கப்பள்ளிக்கு புரவலர் நிதி வழங்கல்

                     புதுக்கோட்டை ஒன்றியம், இராயப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி விழாவில் சிறப்புரையாற்றச் சென்ற பாவலர் பொன்.கருப்பையா, அப்பள்ளிக்கு புரவலர் திட்டத்தினைத் தொடங்க, புரவலர் நிதிக்கான காசோலையினை, புதுக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ,உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் க.மதிவாணனிடம் வழங்குகிறார்.

மூத்த குடிமக்கள் அமைப்பில்...

              புதுக்கோட்டை பாலா தமிழரங்கில் நடைபெற்ற 67 ஆவது இந்திய விடுதலை நாள் விழாவில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டார். 
             மூத்த குடிமக்கள் அமைப்பின் தலைவர் க.இராமையா நாட்டுக் கொடியினை ஏற்றினார். கொடிவணக்கப் பாடலை துளசிராமன் பாடினார். உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது.

               அதனையடுத்து அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு சுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையேற்றார்.

            மூத்த குடிமக்கள் அமைப்பின் தலைவர் க.இராமையா அவர்கள் வரவேற்புரையினையும் நிதிஅறிக்கையினையும் அளித்தார்.

            சூன், சூலை, ஆகத்துத் திங்கள்களில் பிறந்த மூத்த குடிமக்கள் ஆடைபோர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர். 

           தலைமை உரையினையடுத்து பாவலர் பொன்.க விடுதலைநாள் விழா உரையாற்றினார்.

            தனியார் மயம் , தாராளமயம், உலகமயம் கொள்கை களால்.அடித்தட்டு மக்கள் தங்கள்  அடிப்படை உரிமைகளை இழந்து கொண்டிருப்பதையும், நாட்டில் பெருகி வரும் பன்னாட்டுக் கலாச்சாரங்களையும்  பயங்கரவாதங்களையும் குறிப்பிட்டு, சமூக, பொருளாதார, பெண்விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற, நாட்டில் அமைதி நிலவ, உலக அரங்கில் இந்தியா  நல்லரசாக, வல்லரசாக விளங்க, வலிமையும் திறமையும் மிக்க இளைய தலைமுறை முனைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.

67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாவில்...

                      மூன்றடுக்குப் பாதுகாப்போடும், குண்டு துளைக்காத கவச உடைகளோடும், சுற்றிலும் இராணுவப் பாதுகாப்போடும் இன்றைய 67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாக்களும் கொடியேற்றங்களும் நாடெங்கும் நடைபெற்றது.

                   புதுக்கோட்டை தாகூர் மழலையர் பள்ளி விடுதலைநாள் விழாவில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு நாட்டுக் கொடியினையேற்றி, பேதமறியாப் பிஞ்சு உள்ளங்களுக்கு, விடுதலைபெற உழைத்த உத்தமர்களின் தியாகங்கள் பற்றியும், இன்று பெருகிவரும் வன்முறைகள் களையப்பட இளயை தலைமுறை அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, அறவழி ஆகியவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதையும்  அறஉரையாற்றினார்.


                 பள்ளிக் குழந்தைகளின்  விடுதலை பற்றிய உரை, பேச்சுகள் சிறப்பாக இருந்தன.


               சாதனை புரிந்த மழலையர்க்கு இனிப்போடு எழுதுகோல்களையும் பரிசுகளாக வழங்கினார்.


கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஜெனிவா ஒப்பந்த விழாவில்

            .புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 14.08.2013 அன்று ஜெனிவா ஒப்பந்த நாள் விழா, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் திரு இரா.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

           பள்ளி ஜே.ஆர்.சி. ஆலோசகர் திருமதி ப.மேகலா விழா ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திருந்தார்.

           திரு முருகன் அவர்களின் வரவேற்புரையினை அடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஜே.ஆர்.சி செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ஜெனிவா ஒப்பந்த வரலாறு, இன்றையப் போர்களும் பயங்கரவாதங்களும் மறைய நாம் மேற்கொள்ள வேண்டியன, எதிர்கால உலக அமைதிக்கான அறவழிகள், மனிதநேயம் மலர இளைய தலைமுறை மேற்கொள்ள வேண்டியன பற்றிய கருத்துரையினை வழங்கினார்.

        ஜே.ஆர்.சி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பள்ளி அனைத்து மாணவர்க்கும் தேவையான கருத்தாக அவரது பேச்சு அமைந்திருந்ததாக நன்றி கூறிய ஆசிரியர் சரவணன் குறிப்பிட்டார். 

.த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுவில்

.                12.08.2013 அன்று மாலை புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் தமுஎகசவின்  புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு மாவட்டத்தலைவர் பிரகதீசுவரன் தலைமையி்ல் நடைபெற்றது.
              மாவட்டச் செயலாளர் இரமா.ராமநாதன் வேலை அறிக்கை அளித்தார். அறிக்கையின் மீதான விவாதங்களி மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
             மிகச்சிறந்த சமுதாய மேம்பாட்டு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிளைகளின் அண்மைக்கால செயல்பாடுகள் மந்தநிலையில் இருப்பதையும், உறுப்பினர் சேர்க்கை, கிளைச்செயல்பாடுகளில் மாவட்டப் பொறுப்பாளர்களின் தீவிர ஈடுபாடு அதிகரிக்கப் பட வேண்டும் என்பதையும் பாவலர் பொன். கருப்பையா தனது கருத்துரையில் பதிவு செய்தார்.

             சிறப்பாகச் செயல்பட்ட கறம்பக்குடி கிளைப் பொறுப்பாளர்களையும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களையும் அவர் பாராட்டிப் பேசினார். தமுஎகச வில் இணைய விரும்பும் நாட்டுப்புறக்கலைஞர்களையும் வரவேற்றார்.

            ஆகத்து 17,18 நாள்களில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள தமிழகப் பண்பாட்டுச் சூழல் மாநாட்டில் கலந்து கொள்ள எட்டுப் பிரதிநிதிகளை அனுப்புவது, தொடக்கக் கல்வியில் ஆங்கில வழிக்கல்வியின் திணிப்புக்கு எதிர்ப்பு, புதுக்கோட்டை தொடர்வண்டி நிலையத்தை சந்திப்பாக மாற்றக் கோரல், பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடித்தல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முன்னதாக அண்மையில் மறைந்த கலையுலகச் சிற்பிகள், பி.பி.சீனிவாஸ, டி.எம்.சௌந்தரராசன், கவிஞர் வாலி, உத்தரகாண்ட் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர் ஆகியோர்க்கு அஞ்சலி செய்யப்பட்டது.

         மாவட்டப் பொருளாளர் மதியழகன் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

Tuesday, August 13, 2013

ஜெனிவா ஒப்பந்த நாள் - கருத்தரங்கம்


              புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியி்ல், 12.08.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஜே.ஆர்,சி யின் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் கருத்தரங்கம்  கௌரவ ஆலோசகர் திரு இராமமூர்த்தி அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

             புதுக்கோட்டை மாவட்ட ஜே .ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் இராஜேஸ் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.

          கருத்தரங்கில் மேனாள் இணை ஒருங்கிணைப்பாளர்  பாவலர் பொன்.கருப்பையாஅவர்கள் ஜெனிவாஒப்பந்தம் பற்றியும் மனித நேயம் பற்றியும் கருத்துரையாற்றினார்.

          அவர் தனது உரையில் ஜெனிவா ஒப்பந்தம் உருவாகக் காரண மாயிருந்த  ஜீன் ஹென்றி டுனாண்ட் அவர்களின் வாழ்க்கைவரலாற்றில்,  தான் நேரில் கண்ட சால்பரினோ போரின் அவலங்களையும் அதனால் உயிரிழந்த மக்களைக் காக்கப் போராடிய நிகழ்வுகளையும் தனது “சால்பரினோ நினைவுகள் “ என்னும் நூலில் பதிவு செய்திருந்தமையை விளக்கிக் கூறினார்.

        அந்நூலின் இறுதியில் தனது எதிர்காலக் கனவுகளாக இரண்டு செய்திகளைப் பதிந்திருந்தார்

        1. போரில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ ஒவ்வொரு நாட்டிலும் நிவாரணச் சங்கம் அமைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் ரெட்கிராஸ் இயக்கம் உருவானது.
       2. போர்களின்போது காயமுற்ற , உடல்நலம் குன்றியவர்க்கும் நிவாரணச் சங்க உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு  அளிக்க பன்னாட்டு சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். - இதன் அடிப்படையில் 1864ல் முதல் ஜெனிவா ஒப்பந்தம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது

       இதனையடுத்து 1906ல் கடல்போரில் பாதிக்கப்ட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் விதிகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

        1939ல் இரண்டாம் உலகப்போரில் போர்க்குற்றவாளிகளிடம் மனிதநேயம் என்ற கருத்தும், 
        1949 ஆகச்டு 12ல் போர்க்கைதிகளை நடத்தும் விதம், போரில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகள், போரில் ஈடுபடாத மக்களுக்குப் பாதுகாப்பு, பற்றிய கூடுதல் தொகுப்புகள் இணைக்கப்பட்டு ஒரு முழுமையான ஜெனிவா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகிய  வரலாற்றினைக் கூறி, இன்றைய நாளில் உலகெங்கும் தொடரும் பயங்கரவாதங்களும் அதன் விளைவுகளும் எப்படி மனிதகுலத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆசை, கோபம், பொறாமை, இவற்றால் ஏற்படும் மத,சாதி,இன மோதல்கள் வன்முறைகள் மறைய இளைய தலைமுறையினர் மனதில் அன்பு, அறம், கருணை ஆகிய மனித நேயம் மலர்த்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

          நூற்றுக்கு மேற்பட்ட நகரளவுப் பள்ளி ஜீனியர்களும், ஆலோசகர் களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.

       ஜே.ஆர்.சி. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு மீனாட்சி சுந்தர்,திருமதி சாந்தி, திரு அஜ்மீர்அலி, ஆகியோர் கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

        நிறைவில் இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி நன்றியுரையாற்றக் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

Monday, August 12, 2013

நாகசாகி நினைவு நாளில்...

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

            தமிழ்நாடு அறிவியல் இயக்கப் புதுக்கோட்டை கூட்ட அரங்கத்தில் 09.08.2013 அன்று நாகசாகி நினைவு நாள் கூட்டம்  த.நா.அ.இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
        
       புதுக்கோட்டை துளிர் இல்லக் குழந்தைகளுக்கு ஹிரோஷிமா நாகசாகி அழிவு பற்றியக் கருத்துப் பொதிந்த ஓவியப் போட்டி நடத்தப் பட்டது.

      கலந்து கொண்ட அனைத்து துளிர் இல்லத்தினருக்கும் நூல்கள் வழங்கப் பட்டது.

       மாவட்டச் செயலாளர் திரு வீரமுத்து அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.

       மாநிலப் பொருளாளர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 
       மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் வெற்றி பெற்ற, கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டியும் அணுவின் சக்தி ஆக்கத்திற்கு மட்டுமே... அழிவுக்குப் பயன்படலாகாது எனப் பேசினார்.

       மாவட்டத் தலைவர் திரு செயபாலன் அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

       செயற்குழு உறுப்பினர்கள்  சேதுராமன், குமரேசன், தா.சிவராம
கிருஷ்ணன், மற்றும் மாவட்ட , வட்டக்கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Monday, August 5, 2013

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு பொதுக்குழுவில்..

            04.08.2013 அன்று முற்பகல் புதுக்கோட்டை இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழுவின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் , மாவட்டத் தலைவர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

             புதுக்கோட்டை கவினாடு மேற்கு வட்டம் , மாலையீடு சண்முகா நகர் நுகர்வோர் குழுத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா, செயலாளர் திரு சோமசுந்தரம் ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

            மாவட்டப் பொருளாளர் திருமதி  து.லதா உத்தமன் வரவேற்றார்.

            2012-13 ஆண்டறிக்கையினைப் பொதுச் செயலாளர் க.வேழவேந்தன் அவர்கள் அளித்தார். 2012-13 ஆண்டிற்கான தணிக்கை செய்யப் பட்ட கணக்குகள்  ஏற்பளிக்கப் பட்டது.

           2013-14 ஆண்டிற்கான செயல்திட்டங்கள வடிவமைக்கப் பட்டன.

-- நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் நியமிக்கப்படல் வேண்டும்.
-- புதுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனையில் ஸ்கேன் மையம் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்பட வேண்டும்.
-- நகரப் பெரு வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு நடப்போர் நலன் காக்கப்பட வேண்டும்.
-- புதுக்கோட்டைத் தொடர் வண்டி நிலையம் , தொடர்வண்டிச் சந்திப்பாக மாற்றப்பட வேண்டும்.
-- திருச்சியிலிருந்து புதுக்கோட்டை காரைக்குடி வழியாகச் செல்லும் விரைவுவண்டிகள் கீரனூர், திருமயம் ஆகிய நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.
-- பிளாஸ்டிக் உற்பத்தியினைக் கட்டுப் படுத்த வேண்டும்.
-- தேசிய நுகர்வோர்க் குறைதீர் மன்றம் சென்னையில் நிறுவப்பட வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப் பட்டன.

          சண்முகா நகர்க் கிளை சார்பாக அதன் தலைவர் பாவலர்பொன்.கருப்பையா அவர்கள், டி.வி.எஸ் - மதுரைச் சாலை, மாலையீடு வழிபிரி மேடை விரிவாக்கப்பட்டு, வேகத்தடை அமைத்து விபத்துகள் தவிர்க்கப் படவேண்டும்,  மாலையீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கப் பட்டு, பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்., 

          புதுக்கோட்டையில் பல இலட்ச ரூபாய்கள் செலவில் நிறுவப்பட்டுச் செயல்படாமல் இருக்கும் போசுநகர் மின் எரி தகன மேடை செயலாக்கம் செய்யப் படல்வேண்டும் ஆகிய தீர்மானங்களை முன்வைத்தார்.

         மாவட்டத் துணைத் தலைவர் இரா.எ.இராமன், மேனாள் மாவட்டத் தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் தீர்மானங்கள் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் உரையாற்றினர். 

         மாவட்டத்தின் பல்வேறு கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அவ்வப் பகுதிக் குறைகளைப் பொதுக்குழுவில் பதிவு செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் வீ.செல்லப்பன் நிறைவாக நன்றியுரையாற்றினார். 

Friday, July 26, 2013

த.நா.அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில்..

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
20.0702013 அன்று, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க. தலைமையேற்று உரையாற்றியது.உடன் த.நா.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் க.செயபாலன், இணைச்செயலாளர் மஸ்தான் பக்ருதீன்.
தமிழ்நாடு அறிவியல் இயயக்க மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க. தலைமையில் ம.ச.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலறிஞர் இரா.இராஜ்குமார் உரையாற்றியது

Wednesday, July 24, 2013

இசைத்தமிழ் - பயிற்சி

                     தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், “தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி“ புதுக்கோட்டை அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24.07.2013 அன்று  நடைபெற்றது.

                   ஒன்பது, பத்து வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் உள்ள செய்யுள் பகுதிகளை இசையோடு எப்படிக் கற்பிப்பது என்பதை பாவலர் பொன்.கருப்பையா “இசைத்தமிழ்“ என்னும் தலைப்பில் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சியளித்தார்.

                  இசைத்தமிழின் வரலாறு, தொன்மை, தொல்காப்பியத்தில், சங்க இலக்கியங்களில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில், தேவாரத் திருமுறைகளில்  எவ்வாறெல்லாம் காணப்படுகின்றன என்பதையும். காலப்போக்கில் உயர்ந்தும் தாழ்ந்தும் போன இசைத் தமிழ், இடைக்காலத்தில் மேம்பட்டிருந்ததையும், தேவாரத் திருவாசகப் பனுவல்கள் துணைகொண்டு விளக்கினார்.

                பண்டைப் பண்கள், அவற்றிற்கான இராகங்கள், ஏழு சுரங்கள், 72 மேளகர்த்தாக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர் தமிழிசை மக்கள் வாழ்க்கையில் எப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரையில் இணைந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.

               தற்போதைய 9,10 தமிழ்ப் பாட நூல்களில்  உள்ள மனப்பாடப் பகுதிகளை, மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்றத் தக்க இசையில் பாடி, ஆசிரியர்களை இணைந்து பாடப் பயிற்சியளித்தார்.

             இரண்டு பிரிவுவேளைகளிலும் நடந்த இப்பயிற்சியினைச்  சோர்வின்றி ஆர்வமுடன் தமிழாசிரியர்கள் பின்பற்றியது பாராட்டிற்குரியதாக இருந்தது.

இந்திய திரைப்பட நூற்றாண்டுக் கொண்டாட்டம்.

             .புதுக்கோட்டை நில அளவையர் சங்கக் கூட்ட அரங்கில் புதுகை திரைப்படக் கழகம் 21.07.2013 அன்று இந்திய திரைப்பட நூற்றாண்டு கொண்டாட்டத்தினையொட்டி “திரைப்படநாள் விழா“ வினை நடத்தியது.
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்  ஆறு பன்மொழி, பன்னாட்டுத் திரைப் படங்கள் திரையிடப் பட்டு, கருத்துப் பகிர்வுகள் நடந்தன.

             அவற்றுள் ஆஸ்கர் உள்ளிட்ட 19 விருதுகளைப் பெற்ற ” தி ரெட் வயலின் “ என்னும் கனடாக் கதைப் படத்தையும் , 27 விருதுகளைப் பெற்ற “தி வயலின்“ என்னும் மெக்சிகோ கதைப் படத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
            
          “தி ரெட் வயலின் “ திரைப் படத்தை ப்ராண்ட்கோஸ் எனும் இயக்குநர் நேர்த்தியாக இயக்கி இ ருந்தார்.

           தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பற்றிக் கவலைப்படும் தாய், தனது வீட்டுப் பணிப்பெண் கூறும் 5 சீட்டு ஆருடத்தின் அச்சத்தால் உடல் நலிந்து மகப்பேற்றின் போது ஒரு ஆண்குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண்மணியின் கணவர் ஒரு வயலின் இசைப் பிரயர் என்பதால்   மனைவியிடம் முன்னர் பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு வயலினை பரிசளிக்கப் போவதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இறந்த மனைவியின் உடலிலிருந்த எடுத்த தலைமுடியினைக் கருக்கி அவளுடம்பிலிருந்து எடுத்த இரத்தத்தில் குழப்பி அந்த வண்ணத்தை தான் பரிசளிக்க வைத்திருந்த வயலின் இசைக் கருவிக்கு வண்ணமாக்குகிறார்.
லாட் எண் 72 என்கின்ற அந்த வயலினைத் தன் குழந்தைக்கு பயிற்றுவிக்கிறார்.
ஒரு இசைப் போட்டியின் போது  கஸ்பார் வைன் என்கிற அந்தச் சிறுவன் மயங்கி விழுந்து இறக்கிறான்.

             அவனது இறப்பிற்குப் பின்னர் அந்த வயலின் அமெரிக்கா, பிரான்ஸ் ருஷ்யா, சீனா, மொரிசியஸ்  ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பல குணப்பட்டவர்களின் கைகளில் பயணிக்கிறது. அந்த வயலினை அதிக ஏலத்தில் எடுக்க பலர் போட்டி போடுகின்றனர்.

           காதல் வீரம் சோகம் என்னும் நிலைகளில்  ஆதிக்கம்  செய்த அந்த வயலினின்  தொன்மையினை மொரிசியல் தொல்லியல் துறை அறிஞர் துப்பறிந்து கண்டு பிடிப்பதாகக் கதை நிறைகிறது. நல்ல ஒளிப்பதிவு, இனிய வயலின் இசை, பின்னும் முன்னுமாகக் கதை நகர்த்தும் உத்தி முதலிய மேலான கூறுகள் அருமை.

             இசையின் இயல்பினை ஈர்ப்பாகச் சொல்லப் பட்ட இப்படத்தில் ஏனோ நம்ம ஊர் கிளிஜோசியக்கார உத்தியாக அந்த ஐந்து சீட்டுகளின் படி எல்லாம் நடப்பதாகக் கதை நகர்வது மூடநம்பிக்கை நமக்கு மட்டும் சொந்தமில்லை... உலகின் மூலை முடுக்குகளிலும் இன்னும் முனகிக் கொண்டுதான் இருக்கிறது என்பது சற்று நெருடல்தான்.

Monday, July 22, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
             தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு 20.07.2013 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

           வரவேற்புரையினை மாவட்ட இணைச்செயலாளர் மஸ்தான் பக்ருதீன்  ஆற்றினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் தொடக்க உரையாற்றினார்.

         அதனையடுத்து “இயற்கை வள மேலாண்மை “ என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா தலைமையேற்றார்.

           அவர் தனது உரையில் புவியின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பாடத்திட்டத்தில் இயற்கை வள மேலாண்மை பற்றிய பாடங்கள் வைக்கப் படவேண்டியதையும், பல்லுயிர் சமநிலையே உலகின் உயிரின நிலைப்புக்கு அடித்தளம் என்பதையும் இளைய தலைமுறையினருக்கு இயன்ற வழிகளிலெல்லாம் உணர்த்தும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துகளைப் பதிவு செய்தார்.

           அடுத்து ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை  அறிவியல் அறிஞர் இரா.இராஜ்குமார்  இயற்கை வேளாண்மை பற்றிய கருத்துரையினை வழங்கினார்.

Sunday, July 7, 2013

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்.


                   2013 சூலை 4,5 நாள்களில்,புதுக்கோட்டை தேர்வு அரங்கில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை வருவாய் மாவட்டப் பள்ளிகளில்  ஒன்பது, பத்தாம் வகுப்புத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிமனைப்  பயிற்சி நடைபெற்றது. 

                 திருவாளர்கள் நா.முத்துநிலவன், திருமுருகன், வள்ளியப்பன், செயலெட்சுமி ஆகிய மாநிலப் பயிற்றுநர்களுடன் பாவலர் பொன்.கருப்பையா தமிழ் செய்யுள் பகுதியினை இசையோடு கற்பிக்கும் வல்லுநராகக் கலந்து கொண்டு, முதன்மைப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளித்தார்.

                 மாணவர் பின்பற்றத் தக்க எளிய இசையோடு செய்யுள் பகுதி கற்பிக்கப் படும்போது அதன் இசையோடு பாடுபொருளின் கருத்து பசுமரத்தாணியாக மாணவர் மனங்களில் பதியும் என்பதால், செய்யுள் பகுதியினை இசையோடு கற்பித்தல் நல்ல பலனளிக்கும் என விளக்கினார்.

               குறிப்பாக மனப்பாடப் பகுதிச் செய்யுள்கள் இசையோடு கற்பிக்கப் படும்போது  எளிதாக மாணவர் மனங்களில் பதியும் எனும் தனது பட்டறிவோடு  அப்பகுதிகளைப் பாடிக்காட்டி பயிற்சியாளர்களைப் பின்பற்றிப் பாடச்செய்து பயிற்சியளித்தார். முதன்மைப் பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றது சிறப்பாக இருந்தது.

Tuesday, July 2, 2013

முதலுதவி - பயிற்சி சான்று பெறல்

செஞ்சிலுவைச் சங்க புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவினர்க்கு  மாமன்னர் கல்லூரி கலையரங்கில் நடந்த முதலுதவிப் பயிற்சி நிறைவில் பாவலர் பொன்.க.அவர்களுக்கு மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு அலுவலர் திரு சாந்தார் அவர்கள் சான்றிதழ் வழங்குகிறார்.

Saturday, June 29, 2013

செஞ்சிலுவைச் சங்க முதலுதவிப் பயிற்சி.

                             புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி கலையரங்கில், இன்று 29.06.2013 மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும், தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கும்  ஒரு நாள் “ முதலுதவி“ ப் பயிற்சி முகாமை நடத்தியது. 

                             மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் பாவலர் பொன்.கருப்பையா அம்முகாமில் கலந்து கொண்டார். செஞ்சிலுவைச் சங்க   மாவட்டச் செயலாளர் முனைவர் ராசா முகம்மது அவர்கள் தலைமையில் முகாமினை மாவட்டத்துணைத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் வரவேற்புரையாற்றினார்.

                         செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் மாநிலக் கருத்தாளர் திரு. இராதாகிருஷ்ணன் “முதலுதவி“ பற்றிய செயல் விளக்கங்களோடான பயிற்சியினை அளித்தார்.

                         திடீர் விபத்துகள், நோய் மற்றும் இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளிக்கப்படாமையாலே பெரும்பாலான் மரணங்கள் நிகழ்கின்றன.. உரிய நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு செயற்கைச் சுவாச முறையில் முதலுதவி அளிப்பதையும், இரத்தப் போக்கை நிறுத்தும் வழிமுறைகள், தீவிபத்தில் பாதிக்கப் பட்டவர்க்கு அளிக்கப் பட வேண்டிய முதலுதவிகள் முதலியவை பற்றி அவர் விளக்கமளித்தார்.

                       மாலையில் நடந்த நிறைவு விழாவில்  செஞ்சிலுவைச் சங்க இணைச் செயலாளர் பேராசிரியர் எஸ்.விசுவநாதன் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை தீத் தடுப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் திரு சாந்தார் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

                       இன்றைய இயற்கைச் சீற்றப் பேரிடர்களிலும், சாலை , தீ விபத்துகளிலும் பாதிக்கப் படுவோரைக் காக்க இத்தகு பயிற்சிகள் அவசியமானது என்பதையும், இப்பயிற்சி மாவட்டம் முழுமைக்கும் கொண்டு செல்லப் படவேண்டு மென்பதையும் பாவலர் பொன்.கருப்பையா வலியுறுத்தினார்.

Friday, June 28, 2013

முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு.

கல்வி கரையில.... 
                   
                  இன்று 28.06.2013 பிற்பகல்  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் , எனது இனிய நண்பரும் மணிமன்ற உறுப்பினருமான கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் (எ) வீ.கருப்பையன் அவர்களுக்கான  முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது.

               “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் ” எனும் தலைப்பில் ஆய்வேடு அளித்திருந்தார்.  தமிழகத்தின் தலைசிறந்த 16 மரபுக்  கவிஞர்களின் மறுமலர்சிப் பாடல்களை நுணுகி ஆய்ந்திருந்தார். 
               சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தது.

               தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் இரா. காமராசு அவர்கள் புறத்தேர்வாளராக வாய்மொழித் தேர்வினை நடத்தினார். 
ஆய்வின் முக்கிய கருத்துகளை ஆய்வாளர் வழங்க பொது மதிப்பீட்டாளர்களால் வினாக்கள் தொடுக்கப் பட்டு விளக்கங்கள் பெறப்பட்டன.

               மாமன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சு.மாதவன், முனைவர் செல்வராசு, முனைவர் முருகானந்தம், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் கண்ணன் ஆகியோர் ஆய்வு பற்றிய வினாக்களைத் தொடுத்தனர். 

             பேராசிரியர் வீ.வைத்தியநாதன், புலவர் மு.பா, மு.முத்துசீனிவாசன், நிலவை பழனியப்பன், இரா.சம்பத்குமார், பாவலர் பொன்.கருப்பையா,  சுகுமாரி, மகாசுந்தர் , மாமன்னர் கல்லூரி ஆய்வுப்பட்ட மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

            பொது மதிப்பீட்டாளர்களின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் புறத்தேர்வாளர்  முனைவர் இரா.காமராசு அவர்கள்,  வீ.கருப்பையன்  அவர்களை அவரது ஆய்வுக்காக மதிப்புறு முனைவர் பட்டத் தகுதிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை செய்தார். 

          மாமன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்கள் முன்னிலையில்  நடந்த நிகழ்ச்சி பாராட்டிற்குரியதாக அமைந்திருந்தது.

Thursday, June 27, 2013

புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஓராண்டு நிறைவுநாளில் ( 25.06.2013 ) திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துப் பெருமைப் படுத்தும்  தமிழார்வலர்களுடன் பாவலர் பொன்.க.

Wednesday, June 26, 2013

திருவள்ளுவர் சிலை நிறுவிய நினைவு

            திருவள்ளுவராண்டு 2044 ஆடவைத் திங்கள் கக ஆம் நாள்(.25.06.2013) புதுக்கோட்டை சின்னப்பாத்திடலருகே உலகப் பொதுமறை தந்த தமிழ்ப்பாட்டன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் பொருட்டு அவரது சிலைக்குத் தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் படிமத்திற்கு மலர் மாலை அணிவித்துப் பெருமை செய்யப் பட்டது.
  
          இந்நிகழ்வில் சிலை அமைப்புக் குழுத்தலைவர் சீனு.சின்னப்பா,  திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, மூத்தகுடிமக்கள் அமைப்புத் தலைவர் க.இராமையா, தமிழிசைச் சங்கத் தலைவர் இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார்,மணிமன்ற நிறுவுனர் பாவலர் பொன்.கருப்பையா, கம்பன் கழகச் செயலாளர் இரா.சம்பத்குமார், பாவேந்தர் இலக்கியப் பேரவைச் செயலாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, கோவிந்தசாமி மற்றும் தமிழார்வலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
          
         கடந்த ஆண்டு இதே நாளில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே நிறுவப்பட்ட இச்சிலை அரசியல் மாச்சரியங்களால் இன்னும் முறையான திறப்பு விழா செய்யப் படாமல் இருப்பது தமிழார்வலர்கள் மனதில் நெருடலாகவே இருக்கிறது.

Thursday, June 20, 2013

காசநோய் பராமரிப்பு

 ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
               
                   20.06.2013 அன்று புதுக்கோட்டை அரசு பொது மருத்தவமனை காசநோய்ப்பிரிவு கூட்ட அரங்கில் புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையமும், ரீச் தொண்டு நிறுவனமும் இணைந்து காசநோய் பராமரிப்புக்கான நோயாளிகளின் சாசனம் என்னும் கருத்தரங்கினை நடத்தியது. 
              
                  காசநோய் மருத்துவ இணை இயக்குநர் எஸ.ஆர்.சந்திரசேகர் அவர்கள் கருத்தரங்கத் தலைமையேற்றார். நிலைய மருத்துவ அலுவலர்  தனசேகரன் அவர்கள்  தொடக்க உரையாற்றினார்.  ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.
              
                  காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு புதுக்கோட்டை அமைப்பின் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் காசநோயாளிகளின் சாசனம் பற்றி ஒளிப்பட விளக்கங்களுடன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில்  காசநோயாளிகளின் உரிமைகளையும் பொறுப்புகளையும் விளக்கிப் பேசினார்.

                        ஒவ்வொரு காசநோயாளருக்கும்  சர்வதேச அளவில், சமமான பராமரிப்பு இலவசமாக உண்டு என்றார். நோயாளிகள் குடும்பம் மற்றும் சமூகத்தால் கவுரமாக நடத்தப் பட வேண்டும். நோயின் நிலை, சிகிச்சை முறை, மருந்துகளின் பெயர் அளவு ஆகியவை பற்றி தமிழில் நோயாளர்கள் தகவல் கேட்டுப் பெறும் உரிமை உள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
                
                     பராமரிப்பு குறித்தும் நியாயமற்ற சிகிச்சை பற்றியும், பக்க விளைவுகள் பற்றியும் மேல் அலுவலர்களிடம் முறையிடும் உரிமை நோயாளிக்கு உண்டு என்றார்.
ஆய்வுக்காலம் முதல் குணமாகும் வரை தங்களது வருமானத்திற்கான தொழில்பாதுகாப்பு , மற்றும் ஊட்டச்சத்துகள் பெறுவது, தரமான மருத்துவ வசதி கிடைப்பது ஆகியவற்றிற்கான உறுதிபெறும் உரிமையினையும் குறிப்பிட்டார்.

                    அதே வேளையில் நோயாளர்கள் தங்களது நோய் அனுபவங்களை குடும்பம் , நண்பர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதும், நோய் கண்டவரை ஆய்வுக்கு வழிநடத்தலும், தனது நோய்க்கான சிகிச்சையினை இடைவிடாது மருத்துவர் கூறும் காலம் வரை தொடர்வதும்  காசநோயினைக் கட்டுப் படுத்தி சமூக நலனுக்கு ஒத்துழைக்கும் பொறுப்புகளும் நோயாளர்களுக்க உண்டு என்பதை  வலியுறுத்திப் பேசினார்.
                  அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு.லெ.பிரபாகரன்  நோயாளிகளின் கடமைகள் பற்றிப் பேசினார். திட்ட மேலாளர் திரு சி.குமார் அவர்கள் நன்றி கூறினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். நோய் கண்டறியப் பட்ட 26 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு  பயன் பெற்றனர்