Monday, October 10, 2011

பேரிடர் மேலாண்மை

                           புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரைத் தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் 10.10.2011அன்று  பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நிறுவனத்தின் செயலாளர் திரு பீட்டர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் சிறப்புக் கருத்தாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
                  அவர் தனது உரையில், மனிதகுலத்தைப் பாதித்து வரும் புவிஅதிர்வு, வெள்ளப்பெருக்குகள், புயல்,காட்டுத்தீ  போன்ற இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகள், புவி வெப்பமயமாதலால் நிகழும் வளிமண்டலச் சீர்கேடுகள், ஓசோன் படலத்தின் பாதிப்பினால்  புவியில் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்வதால் உள்வாங்கப் படும் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பினால் அழிந்து வரும் பல்லுயிரிகள்  அதனால் ஏற்படும் மனித குல பாதிப்புகள் பற்றி விளக்கினார். அறிவியல் கருவிகளை அபரிமிதமாகவும் தவறாகவும் அழிவிற்காகவும் குறுக்குவழியில் பொருளீட்டப்  பயன்படுத்தும் சுயநலவாதிகளால் இயற்கை வளங்களான நிலம், நீர், காற்று மாசுபடுவதையும் மனிதகுலம் இனம் தெரியாத நோய்களில் சிக்கிச் சீரழியும் நிலையினையும் சுட்டிக்காட்டி, இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டிய அவசியத்தையும், தோல்,சாயத் தொழிற்சாலைக் கழிவுகள் தூய்மையாக்கத்திற்குப் பின் வெளியேற்றப் பட வேண்டியதன் அவசியத்தை யும்  வலியுறுத்தினார்.
                     இவையன்றி விழாக்காலங்களில் காற்றுமண்டலத்தைப் பாழ்படும் வேள்விகளில் பொருள்களை எரித்தல், வெடி மத்தாப்பு கொளுத்துதல், எளிதில் அழியாத மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துதல, தேவையற்ற வெப்ப ஒளி உமிழ்விளக்குகளின் அலங்காரம் முதலியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் இயற்கைச் சீற்றங்களைத் தவிர்க்கலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.
             ஆக்கத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அணுவின் சக்தி அழிவுக்குப் பயன் படுத்தப் படுவதற்கான கண்டனக் கருத்தையும் பதிவு செய்தார். பசுமை இல்ல வாயுக்களால் வளிமண்டலமும் அதைச் சார்ந்து வாழும் உயிரினமும் பாதிக்கப் படாமல் இருக்க, தொழில் கூடங்களுக்கு, காற்று, கடல்நீர், சூரியஒளி (வெப்பம்)இயற்கைக் கழிவுகள் (குப்பை)முதலானவற்றின் மூலம் ஆற்றல் சக்தியினை உருவாக்கும் முயற்சிகள் மென்மேலும் பெருக வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.
                          கல்வி நிறுவனத்தில் பயிலும் கல்வியியல் ஆசிரியர்ப் பயிற்சி மாணவர்கள், செவிலியர் கல்லூரி, செவிலியர் தொழில் நுட்ப மாணவர்கள் என 300 மாணவர்களும் பேராசிரியர்களும் துறை வல்லுநர்களும் கலந்து கொண்டு, கருத்தரங்கில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. கல்வியில் கல்லூரி முதல்வர் வரவேற்க, துறைத் தலைவர் திரு முத்து அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

No comments:

Post a Comment