Friday, September 23, 2011

உயிரி உரங்கள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவற்றின் பங்களிப்போடு, புதுக்கோட்டை வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பப் பயில் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மனிதவளம் மற்றும் இயற்கைவள மேம்பாட்டுச் சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து, புதுக்கோட்டையில் 22,23-9-2011 ஆகிய இரு நாள்கள் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை பரப்பும் கருத்தரங்கு நடைபெற்றது. 22.09.2011 முதல் நாள் புதுக்கோட்டை வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பப் பயில் கல்லூரியில் ”மாணவர்களிடையே உயிர் உரங்கள்” பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி அறங்காவலர் திரு ஆர்.ஏ.குமாரசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் நல மருத்துவர் இரா.சுந்தர், தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹேண்ட்ஸ் தொண்டு நிறுவன நிருவாக இயக்குநர் திரு.மு.சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கேண்டில் தொண்டு நிறுவன அறங்காவலர் திரு.எம்.பி.பழனிச்சாமி, ரிவார்ட்ஸ் நிறுவனர் திரு ஏ.பாஸ்கர், இயற்கை விவசாயி திரு ஜி.எஸ்.தனபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உயிர் உரங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி வம்பன் கிரிஸ் விஞ்ஞான் கேந்திர பேராசிரியர் முனைவர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றினார். கருத்தரங்கில் ” வேதி உரங்களும் வேதனைகளும்” என்ற தலைப்பில் மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் பண்டை வேளாண் உற்பத்தியும் அன்றைய மக்களின் நல வாழ்வும், இன்றைய நவீன வேளாண் இடு உரங்கள் எவ்வாறு மண்,நீர்.காற்று ஆகிய இயற்கை மூலங்களை மாசுபடுத்தி, விளைபொருள்களில் நச்சேற்றி,அவற்றை நுகரும் மனித இனத்தை இனங்கான இயலா நோய்க் குழியில் தள்ளி, மனிதவளத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன என்பதைச் சான்றுகளோடு விளக்கி, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, மதிப்புறு மனிதநலம் காக்க வேண்டியதை வலியுறுத்திப் பேசினார். உயிர் உரங்கள் என்னும் தலைப்பில் மாணவர் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்துள் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிறைவாக தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திரு.ஏ.வெங்கடேசு அவர்கள் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Sunday, September 18, 2011

அழகு தங்க நகையிலா?

18.09.2011 அன்று புதுக்கோட்டை விஜய் உணவகக் கூட்ட அரங்கில், உலகத்திருக்குறள் பேரவையின் திங்கள் கூட்டத்தில்,  மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் தலைமையில், முனைவர் மு.பழனியப்பன் மற்றும் புலவர் மகா.சுந்தர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  பாவலர் பொன.கருப்பையா அவர்களின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்வு நடைபெற்றது.
தமிழின் அருமை பெருமைகள், சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழரின் மாண்புகள், தமிழர் பண்பாடு, திருவள்ளுவர், திருக்குறளின் பெருமை, தமிழுக்குழைத்த பாரதியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் தொண்டு, தமிழுக்கு இன்றைய இளைஞர்கள் ஆற்றவேண்டிய பணி, மகளிர்க்கு அழகு எது? என்னும் பல்வேறு தலைப்புகளில் தமிழிசைப் பாடல்களைப் பாவலர் பொன்.க. இசைக் கருவிகளின் பின்னணியோடு வழங்கியது அனைவராலும் பாராட்டப் பட்டது. இவ்வரங்கில்  அழகு தங்க நகையிலா? என்னும் புதிய பாடல் அரங்கேறியது.


அழகுதங்க     நகையில்    இல்லே   முத்தம்மா-உனக்கு
அறிவுதரும்  கல்வியே    பெரும்     சொத்தம்மா
உறவுபொன் பொருளில்  இல்லை  முத்தம்மா- பிறர்க்கு
உதவும்அறச் செயலே    அன்பின்   வித்தம்மா                                   -அழகு

பொறந்தவீட்டுப்  பெருமைகளும்  புருசன்வீட்டு  அருமைகளும்
போட்டி ருக்கும்   நகையில்   இல்லே  முத்தம்மா - நீ
புடவைக்கடைக்   காட்சிப்   பொம்மை  இல்லைம்மா
புவியின்போக்கை  மாற்றுவதும்  புதிதாய்ஒன்றை  ஆக்குவதும் 
பொறுப்பாய்ச்  செயல்  புரிவதில்தான்  முத்தம்மா - நீ
புனைந் திருக்கும்  பொறுமை  கோடிச் சொத்தம்மா                       - அழகு


சேதாரம்  செய்கூலி  இல்லாத    பொன்னகையே 
சிந்தும்     இதழின்    புன்னகைதான்  முத்தம்மா - உன் 
சிரிப்புக்குமுன்     வைரம்   வெற்றுக்  கல்லம்மா
முத்துமணி  மாலைகளும்  கொத்தாய்ப்  பிறர்கைமாறும் 
சொத்தாக  நிலைப்ப  தெல்லாம்   முத்தம்மா - உன்
வற்றாத மனிதப்   பாசப்   பித்தம்மா                                                        -அழகு

நகையில்மோகம்  மாறிடணும்  நயங்கள்   மனசேறிடணும் 
நாட்டில்  பெண்கள்  கவலைதீரும்  முத்தம்மா - பெண்மை 
நாளும்  மணம்வீசும்   மலர்க்   கொத்தம்மா
மண்ணகத்துக்  கனிவளமே  மனிதகுல  விளைநிலமே
விண்ணைத்  தாண்டும்  ஆற்றல்உன்னுள்  முத்தம்மா- வெறும்
மின்னும் பொன்னால் விளையும்தீமை       மாத்தம்மா - அழகு

Friday, September 16, 2011

சொன்னாரே பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாளில் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளில் சில துளிகள்  புதுக்கோட்டை பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் பாடல் வரிகளாக...

சொன்னாரே   கேட்டீயாப்பா - அய்யா
சொன்னாரே   கேட்டீயாப்பா
பகுத்தறிவே    உன்னை  உயர்த்தும்  படிகள்ன்னு
சொன்னாரே  கேட்டீயாப்பா                                                      -- சொன்னாரே

ஒழைச்சுப்      பொழைப்பவந்தான்   ஒசத்தி - மத்தவன்
ஒழைப்பிலே வாழ்பவனுக்  கிகழ்ச்சி
பிறப்பிலே    ஏதுங்கடா        பேதம் - நம்மைப்
பிரிக்கத்தான் செஞ்சுவச்சான்  வேதம்வேதமுன்னு         - சொன்னாரே

சாமிவேத சகுனம் மூடமந்திரம் - நம்மைப் 
பயமுறுத்திப் பணியவச்ச தந்திரம்
பஞ்சாங்கச் சாத்திரங்கள் மோசம் - காசு
சம்பாதிக்க அவன்போட்ட வேசம் வேசமுன்னு                   - சொன்னாரே

புளுகுமூட்டைப்  புராணங்களை  ஒதுக்கு - தமிழன் 
பண்பாட்டுக்         கதுரொம்ப          இழுக்கு
நாகரிகச்சிந்        தனையைப்           பெருக்கு- பழைய
காட்டுமிராண்டித்   தனம்               எதுக்கு எதுக்குன்னு         - சொன்னாரே

அறிவென்னும்    ஆயுதத்தைத்     தீட்டு - உந்தன் 
அறியாமைப்       பேயைஅதால்     ஓட்டு
மூடநம்                 பிக்கைகள்        ஒழிந்தால் -பல
மோசடிப்  பேர்வழிகள்   வேசம்  களையுமுன்னு                   - சொன்னாரே

சாதிமறுப்புத்   திருமணத்தை     நடத்து -நாட்டில்
சமநீதி              படருமதைத்            தொடர்ந்து
தேவையில்லாச்  சடங்குகளை  நிறுத்து - உன்னைச் 
சூத்திரன்னு       சொன்னவனைத்   துரத்து துரத்துன்னு        - சொன்னாரே

அறிவுக்குத்       தலைதாழ்த்தி        வணங்கு - உனக்கு
ஆற்றல்தரும்  செயலுக்கு நீ           இணங்கு
ஆகமத்தின்        புரட்டுகளை         ஒதுக்கு - இல்லா
ஆண்டவன்      வழிபாட்டை           நிறுத்து நிறுத்துன்னு        - சொன்னாரே







Thursday, September 15, 2011

அண்ணா-103

பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களின் 103 ஆவது பிறந்த நாளன்று  அவருடைய சிறப்புகளில் சில துளிகள் இங்கே பாவலர் பொன்.க அவர்களின்  பாடல் வரிகளில்....

முக்கனிச்   சாறோ    இல்லை        முத்தமிழ்   ஊற்றோ
காஞ்சிதந்த  கற்பகப்  பெட்டகம்    கண்ணுக்குள்ளே  - எந்தக்
காலத்திலும்   உங்கள்  நினைவுகள்   நெஞ்சுக்குள்ளே                          - முக்கனி

அய்யாவின்  பாசறை   தந்த  பொய்யாமணிச்  சுடர் விளக்கே
மெய்யான   பகுத்தறி  வினை உதித்ததில்  திசை கிழக்கே
பொய்யான  மூடநம்பிக்  கையைச் சுட்டெரித்த  சூரியப் பந்தே
செய்தஅருந்  தொண்டி னைப்பேச ஆண்டுநூறு ஆகுமே இங்கே     - முக்கனி

கேட்பவரைக் கிரங்க  வைக்கும் கீதமன்றோ  உனது மொழி
கேடுகளைக் குத்திக்  கிளிக்கும் சிறுகதைகள் உனது உளி
நாடகங்கள்  ஆக்கி நடித்து   நச்சுக்கொடி  வேர்கள  றுத்தாய்
நல்லதிரைக் கதைகள் தந்து நாட்டுமக்கள்  நெஞ்சில் நிலைத்தாய்  -முக்கனி

கண்ணியமாய்க் கடமை  யாற்றக்  கட்டுப்பாட்டைக்   கற்றுமே  தந்தாய்
பெண்ணினத்தின் பெருமை காக்க பெண்ணுரிமைச்  சட்டமும்  தந்தாய்
எண்ணியதை முடிக்கும்  ஆற்றல்  ஈரோட்டுக்  குகையில் பெற்றாய்
உன்னைத்தான்  தம்பிஎன்று  தினம்  ஓராயிரம்  மடல்கள்  தந்தாய்   -முக்கனி

மாற்றான்தோட்ட  மல்லிகை  யாயினும்  மணம்தந்தால்  ஏற்றிடச் சொன்னாய்
மதியில்லாக்  கயவர் செயலை  மனமதில்  தாங்கிடச் சொன்னாய்
இனம்மொழி  ஏற்றங்கள் தன்னை   எத்திசையும்  உணர வைத்தாய்
எந்தநாடும்  போற்றும் முனைவர்  பேரறிஞர்  பட்டங்கள்  பெற்றாய்  - முக்கனி

ஆண்டுஒன்று  அரைமட்டும்  நீ  ஆட்சி  செய்தாய்   தமிழகத்தை
அழகுடன்  தமிழ்நா டென்னும் பெயர்மாற்றிப்  புகழ் படைத்தாய்
ஆட்சிமொழித்  தமிழெனவே  அயல்மொழி ஆதிக்க மாய்த்தாய்
ஆரியத்தின் மாயையைக் கீறி அனைத்திலும்  தமிழைக் கண்டாய்       - முக்கனி

ஏழைகளின்  சிரிப்பி னிலே  இறைவனைக்  காணவே  எண்ணி
எண்ணிலா  நலத்திட்டங்களை  எல்லாப்பட்டி தொட்டிக்குந்  தந்தாய்
அறிவென்னும்  ஆயுதம் ஏந்து அகிலம்உன் கைகளில் என்றாய்
அண்ணாஉன்   தத்துவம்  வென்றால் அகிலமே  சிறக்கும்  நன்றாய்  - முக்கனி






Tuesday, September 13, 2011

வழிகாட்டி சமூகப் பணி மன்றம்-கல்வி பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை,கோயில்பட்டியில் 11.09.20011 அன்று ” வழிகாட்டி சமூகப்பணி மன்ற ”த்தின் கல்வி ஊக்குவிப்பு பரிசளிப்பு விழா, ஊர்த்தலைவர் திரு.க.சுப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் நாகராசன் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழிகாட்டி மன்ற அமைப்பாளர் திரு. எஸ்.ரெங்கராசு அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. பிச்சை, மாரிமுத்து. ஒன்றிய உறுப்பினர் திரு.சுந்தர்ராசன், தலைமை ஆசிரியர்கள் திருமதி பெட்லாராணி, சுந்தரவடிவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்பகுதியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 35 பேர்களுக்கு மரக்கன்றுகளுடன் மதிப்புமிகு பரிசுகளை வழங்கிச் சிறப்புரையினை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ஆற்றினார். ஆசிரியர் பயிற்றுநர் திரு. பி.இராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார். மன்றத்தின் செயல்பாடுகளையும் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பாராட்டிப் பேசிய பாவலர் பொன்.கருப்பையா சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக் கொண்டு, தங்களையும் தாங்கள் சார்ந்த பகுதியையும்  உயர்த்த உழைக்க வேண்டும் என்று கூறினார். அன்று பாரதியாரின் 90 ஆவது  நினைவு நாளை யொட்டி ”மலருக்குள் மணமாக” எனும் பாடலை அரங்கேற்றினார்.

  1. மலருக்குள்   மணமாக   நுழைந்தா-ஏங்கும்                                                                 மனதுக்குள் இதமாகக்குளிர்ந்தாய்                                                                                     பாழ்பட்ட   சமுதாயம், சீர்பெற்றுச் செழித்தோங்க                                                       பாதந்த      மாகவியே                                                                       -மலருக்குள்

தேருக்கு  அச்சாக வேருக்கு   நீராக,                                                                                      ஊருக்கு  உழைத்திட்ட உன்தொண்டிற் கிணையேது?                                                       நேருக்கு  நேர்நின்று  நீதிக்குக்  குரல்தந்தாய்                                                                  பாருக்குள்  உன்நினைவு  மாறாது   எந்நாளும்                        - மலருக்குள்                                   

தாய்த்தமிழ்  மகளுந்தன் கவிதையின்தேரேறி                                                                       தமிழ்கூறும்   உலகெங்கும்  தளர்வின்றி வலம்வந்தாள்                                      உயர்ந்தது  தமிழ்ச்சொல்லே  எனஓங்கி  ஒலித்திட்டாய்                                    உன்பாட்டின்  கனவெல்லாம்  நனவாகும்  நிலைஎன்றோ?  -மலருக்குள் 

பெண்கல்வி மேடுறுத்தி  பேதைமை விலங்கறுத்தாய்                                   பெருமைகள் அவர்காண பெரிதும்நீ  தினம் உழைத்தாய்                           வன்மைகள்  மறைந்தொழிய  வகைநூறு  கணைதொடுத்தாய்             உண்மைக்கு உழைப்போரின்  தோள்தட்டி  இதமளித்தாய்    -மலருக்குள் 

விண்வெளி   தனைஅளக்க  வெகுண்டுநீ  முனைற்தாயே                                            பன்முகக்    கலைச்சுவையைப்  பாட்டினில்  கரைத்தாயே                                 திண்ணிய  மனத்தோடு   திரண்டதோள்   கேட்டாயே                                       எண்ணிய  முடிப்பார் நம்    இளைஞர்தம்  திறத்தாலே            - மலருக்குள்                  

சாதிக்கும்  மாந்தருக்குள்  சாதிகள்  எதற்கென்றாய்                                             ஆதிக்க   வெறிநீக்கு   அடிமைநீ   இல்லையென்றாய்                                     மோதிட்ட  உன்பாட்டு   முரசத்தின்   அதிரொலியாய்                                                      நீதிகள்   சமமாகி   நீடிக்கும்   இனிநன்றாய்-                                  மலருக்குள்